• Mon. Feb 23rd, 2026

24×7 Live News

Apdin News

தாயை கொலை செய்து சடலத்துடன் இரண்டு மாதங்கள் வாழ்ந்த மகன் – மம்மி நிலைக்கு மாறிய சடலம்!

Byadmin

Feb 23, 2026


இங்கிலாந்து, வேல்ஸில் கொவிட் லாக்டவுன் காலத்தில் மகன் ஒருவர் தனது தாயைக் கொன்றுவிட்டு, இரண்டு மாதங்களாக அவரது சடலத்துடன் ஒரே வீட்டில் வாழ்ந்த திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள பல அதிர்ச்சி உண்மைகளை அண்மையில் வெளியான பிபிசி ஆவணம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

பெம்ப்ரோக் டாக்கின் மார்க்கெட் வீதியில் வசித்து வந்த 68 வயதான ஜூடித் ரீட், 2020 டிசெம்பரில் அவரது மகன் டேல் மோர்கனால் (வயது 43) சுத்தியலால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டார். ஜூடித்தின் தலையில் 14 முறைக்கும் குறையாமல் தாக்கப்பட்டதாக அவரது உறவினர் தெரிவித்துள்ளார்.
கொலையைச் செய்த பிறகு, லாக்டவுன் கட்டுப்பாடுகளைப் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மோர்கன், சுமார் இரண்டு மாதங்கள் தனது தாயின் சடலத்துடன் அதே வீட்டில் வசித்துள்ளார்.

ஜூடித்தின் வீட்டு ஜன்னல் குளிர்காலம் முழுவதும் திறந்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு சந்தேகமடைந்த அண்டை வீட்டார் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தனர். விசாரணையின் போது, தனது தாய் மருத்துவமனையில் இருப்பதாக மோர்கன் பொய் கூறியுள்ளார்.

2021 பிப்ரவரி 20ஆம் திகதியன்று பொலிஸார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, ஜூடித்தின் சடலம் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. குளிர்காலக் காற்று ஜன்னல் வழியாக உள்ளே வந்ததால், அந்த அறை ஒரு ‘பிரிட்ஜ்’ போலச் செயல்பட்டு சடலம் மம்மி நிலைக்கு மாற உதவியதாக தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜூடித்தின் நாட்குறிப்பை ஆய்வு செய்தபோது, மோர்கன் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானதும், தனது தாயிடமிருந்து பணத்தைச் சுரண்டியதும் தெரியவந்தது.

மோர்கனின் இந்தச் செயல் குறித்து நீதிபதி கூறுகையில், “உங்களை நேசித்த, உங்களுக்காகப் போராடிய ஒரு தாயை 43 வருட அர்ப்பணிப்புக்குப் பிறகு சுத்தியலால் அடித்துக் கொன்றுவிட்டீர்கள்” என்று கண்டனம் தெரிவித்தார்.

இந்தக் கொடூரமான குற்றத்திற்காக டேல் மோர்கனுக்கு 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

By admin