0
இந்த ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை தாய்லந்தின் ஒபல் சுச்சாத்தா சுவாங்ஸ்ரீ வென்றுள்ளார்.
உலக அழகிப் போட்டியில் இது தாய்லந்துக்கு கிடைத்துள்ள முதலாவது வெற்றியாகும்.
72ஆவது முறையாக நடைபெறும் போட்டியில் 108 பேர் போட்டியிட்டனர். போட்டி இந்தியாவின் ஹைதராபாத் நகரில் நடந்தது.
தொடர்புடைய செய்தி : உலக அழகிப் போட்டியில் இருந்து விலகினார் மிஸ் இங்கிலாந்து!
21 வயதாகும் சுவாங்ஸ்ரீ, பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார். அவரது குடும்பம் புக்கெட்டில் ஹோட்டல் நடத்தி வருகிறது. சுவாங்ஸ்ரீ ஆங்கிலமும் சீன மொழியும் சரளமாகப் பேசக்கூடியவர்.
அவர் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுத் தூதராக இருந்து வருகிறார்.
16 வயதில் மார்பகத்தில் ஏற்பட்ட கட்டியை அகற்ற அவர் அறுவைச் சிகிச்சை செய்தார். அதன் பிறகு புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தார். “Opal For Her” எனும் இயக்கத்தை அவர் தொடங்கினார்.
Miss World பட்டத்தை வென்றதன் வாயிலாக மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு இயங்கங்களை உலகளவில் எடுத்துச்செல்ல சுவாங்ஸ்ரீ திட்டமிடுகிறார்.
இலங்கை
இதில் இலங்கை சார்பாகப் போட்டியிட்ட அனுதி குணசேகர, இறுதி 40 இடங்களுக்குள் நுழையும் வாய்ப்பை இழந்திருந்தார்.
அதன்படி, இலங்கையின் உலக அழகி எதிர்பார்ப்பு தகர்ந்தது.
இப்போட்டியில் அண்மையில் நடைபெற்ற போட்டிகளில் அனுதி குணசேகர சிறப்பான செயல்திறனைக் காட்ட முடிந்ததுடன், அவர் நேரடியாகவும் மற்றும் மல்டிமீடியா பிரிவுகளிலும் இறுதிச் சுற்றுகளுக்குத் தகுதி பெற முடிந்தது.
நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக அந்தப் பிரிவுகளில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இலங்கைப் போட்டியாளர் என்ற பெருமையையும் அனுதி குணசேகர பெற்றார்.
இந்தியா
இப்போட்டியில் இந்தியாவுக்காகக் களமிறங்கிய நந்தினி குப்தா, கடைசி 20 பேர் வரை தேர்வாகிப் பின்னர் அதிலிருந்து வெளியேறினார்.
ஐஸ்வர்யா ராய், பிரியாங்கா சோப்ரா உள்ளிட்ட 6 இந்தியப் பெண்கள் இதுவரை Miss World உலக அழகிப் பட்டத்தை வென்றுள்ளனர்.