0
தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தாக்சின் ஷினவாட்டுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை உத்தரவு, இன்று (09)விதிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு சிறைத் தவணையை அவர் மருத்துவமனையில் கழித்தது சட்டவிரோதம் என்றும் தாய்லாந்து உச்ச நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.
மருத்துவமனையில் இருந்த நாள்களைச் சிறைக்காலமாகக் கருத முடியாது என்றும் அவர் குறினார்.
நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய தாக்சினின் மகள் பேதொங்தார்ன் ஷினவாட், “நாட்டுக்கு நல்லது செய்தும் சிறைக்குச் செல்லும் தாய்லாந்தின் முதல் பிரதமர் எமது தந்தை” என்றார். அத்துடன், தந்தையின் உடல்நலம் குறித்தும் அவர் அக்கறை தெரிவித்தார்.
2001 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் தாக்சின் நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது 2ஆவது தவணையின்போது, தாய்லாந்து இராணுவம் அவரது ஆட்சியைக் கவிழ்த்தது. அதனையடுத்து தாக்சின் நாட்டைவிட்டுத் தப்பினார்.
2023ஆம் ஆண்டு அவர் தாய்லந்து திரும்பியபோது ஊழல், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய குற்றங்களுக்காக அவருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சிறையில் சில மணி நேரம் மட்டுமே இருந்த தாக்சின், இதயப் பிரச்சினை மற்றும் நெஞ்சு வலி காரணமாகப் பேங்காக் பொலிஸ் பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
தாய்லாந்து மன்னர், தாக்சினின் சிறைத்தண்டனையை ஓராண்டாகக் குறைத்தார். மருத்துவமனையின் தனி அறையில் 6 மாதங்கள் கழித்த பின்னர் அவர் நன்னடத்தையின் பேரில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது.