• Fri. Jun 6th, 2025

24×7 Live News

Apdin News

திண்டுக்கல், தூத்துக்குடியில் நடந்த இரு வேறு கொலை வழக்குகளில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு | 11 people sentenced to life imprisonment in two separate murder cases in Dindigul and Thoothukudi

Byadmin

Jun 4, 2025


திண்டுக்கல், தூத்துக்குடியில் நடைபெற்ற வெவ்வேறு கொலை வழக்குகளில் 11 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திண்டுக்கல் அருகேயுள்ள யாகப்பன்பட்டியை சேர்ந்த திமுக பிரமுகர் மாயாண்டி ஜோசப் (60). இவர், கடந்த 2024-ம் ஆண்டு மே 23-ம் தேதி இரவு யாகப்பன்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, இவரைப் பின்தொடர்ந்து சென்ற சிலரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக அவர் செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸார் விசாரித்து, வழக்கில் தொடர்புடைய யாகப்பன்பட்டி சேசுராஜ்(39) ,கென்னடி(38), டேனியல்ராஜ்(20), அலெக்ஸ் பிரிட்டோ(20), காளீஸ்வரன்(19), பிரவீன்குமார்(19), ஸ்டாலின்(20) ஆகியோரைக் கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி முத்துசாரதா, கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 7 பேருக்கும் ஆயுள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இதையடுத்து 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திண்டுக்கல் திமுக பிரமுகர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சேசுராஜ், டேனியல் ராஜ், ஸ்டாலின், அலெக்ஸ் பிரிட்டோ, காளீஸ்வரன், பிரவீ்ன்குமார், கென்னடி.

மீனவர் கொலை வழக்கில்… தூத்துக்குடி மாதவநாயர் காலனியைச் சேர்ந்தவர் காளிமுத்து (39). மீன்பிடித் தொழில் செய்து வந்தார். கடந்த 2020 ஆகஸ்ட் 31-ம் தேதி திரேஸ்புரம் தொம்மையார் கோயில் தெருவைச் சேர்ந்த கிசிங்கர் (33), சங்குகுளி காலனியைச் சேர்ந்த லிவிங்ஸ்டன் (24), மரிய ஜெர்மன் (25), வெற்றிவேல்புரம் சங்குகுளி காலனியைச் சேர்ந்த ரபேக் வேதா (25) மற்றும் 15 வயது சிறுவன் ஆகியோர் திரேஸ்புரம் வலைபின்னும் கூடத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அவர்களை காளிமுத்து கண்டித்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த 5 பேரும் கட்டையால் காளிமுத்துவை தாக்கினர். பின்னர் அவரை கடலுக்குள் தள்ளி, அடித்துக் கொலை செய்தனர். இது தொடர்பாக தூத்துக்குடி வடபாகம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கிசிங்கர், லிவிங்ஸ்டன், மரிய ஜெர்மன், ரபேக் வேதா மற்றும் 15 வயது சிறுவனை கைது செய்தனர். இதில் சிறுவன் மீதான வழக்கு மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு, சிறார் நீதிக் குழுமத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மற்ற 4 பேர் மீதான வழக்கு தூத்துக்குடி மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், குற்றம் சுமத்தப்பட்ட கிசிங்கர், லிவிங்ஸ்டன், மரிய ஜெர்மன், ரபேக் வேதா ஆகிய 4 பேருக்கும் ஆயுள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி எம்.பிரீத்தா நேற்று தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் காவல் துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம் ஆஜரானார்.



By admin