• Sat. May 2nd, 2026

24×7 Live News

Apdin News

திமிங்கிலம் இறந்த பிறகும் ஆழ்கடலில் புதிய ஒரு சூழலியல் அமைப்பை உருவாக்குவது எப்படி?

Byadmin

May 2, 2026


திமிங்கிலம் இறந்த பிறகும் ஆழ்கடலில் புதிய ஒரு சூழலியல் அமைப்பை உருவாக்குவது எப்படி?

பட மூலாதாரம், A Glover and T Dahlgren

படக்குறிப்பு, “ஸ்னோபோர்டிங் செதில் புழு” என்பது திமிங்கல வீழ்ச்சியில் நிபுணத்துவம் பெற்ற ஒரு புழுவாகும். இது திமிங்கலத்தின் சடலத்தை மூடியிருக்கும் வெள்ளை நிற பாக்டீரியா படலத்தில் தடங்களை விட்டுச் செல்கிறது.

திமிங்கிலங்கள் கடலின் கனரக சரக்கு வாகனங்களைப் போன்றவை. இறைச்சி, கொழுப்பு, எலும்புகள் போன்ற 150 டன் வரையிலான உணவுப் பொருட்களை, கடலின் மேற்பரப்பில் இருந்து ஆழமான பகுதிகள் வரை நீண்ட தூரங்களுக்கு அவற்றால் சுமந்து செல்ல முடியும். அவற்றின் பிரமாண்டமான உடல்களே ஒரு முழுமையான உணவாதாரமாகத் திகழ்கின்றன.

திமிங்கிலங்கள் வழக்கமாக கடலின் வெகு தொலைவில், பெரும்பாலும் இடம்பெயரும்போது அவை கடந்து செல்லும் நீண்ட பாதைகளிலேயே உயிரிழப்பதாக கலிஃபோர்னியாவின் சான் டியாகோவில் அமைந்துள்ள ‘ஸ்கிரிப்ஸ் கடல்சார் ஆய்வு நிறுவனத்தின்’ கடல் அடித்தள முதுகெலும்பற்ற உயிரினங்களுக்கான காப்பாளர் கிரெக் ரவுஸ் விளக்குகிறார்.

ஒரு திமிங்கிலம் உயிரிழக்கும்போது, அதன் உடல் முதலில் கடலின் மேற்பரப்பில் மிதக்கக்கூடும். அதன் உடலுக்குள் வாயுக்கள் தேங்கி, பலூன் போல உப்பிப் பெருகுவதாலேயே இவ்வாறு நிகழ்கிறது.

சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்த உடல் மெதுவாகக் கடலுக்குள் மூழ்கத் தொடங்குகிறது. அது கடலின் பல்வேறு அடுக்குகளைக் கடந்து செல்கிறது. மேற்புறத்தில் உள்ள பிரகாசமான சூரிய ஒளி மண்டலம், மங்கலான அந்தி ஒளி மண்டலம், பின்னர் முற்றிலும் இருண்ட மண்டலம் எனப் பயணித்து, இறுதியில் முழுமையான இருள் சூழ்ந்த ஆழ்கடல் தரையைச் சென்றடைகிறது. அதுவே அதன் இறுதி ஓய்விடமாக அமைகிறது.

தனது இறப்புக்குப் பின்னரும்கூட, திமிங்கிலம் தொடர்ந்து உயிரினங்களுக்கு வாழ்வளிக்கிறது. அதன் பிரமாண்டமான உடல், பல கடல்வாழ் உயிரினங்களுக்கு ஒரு மிகப்பெரிய உணவுத் தீவு போல மாறுகிறது. பொதுவாக, ஆழ்கடலில் கிடைக்கும் உணவு, கடலின் மேல் அடுக்குகளில் இருந்து மெதுவாகக் கீழே விழும் “கடல் பனி” எனப்படும் மிகச்சிறிய துகள்களின் வடிவிலேயே அமைகின்றன.

By admin