சாத்தூர்: தேர்தல் என்பது திமுகவை வீழ்த்துவதற்கான ஜனநாயக போர். திமுக என்ற தீய சக்தி வீழ்த்தப்பட வேண்டும். அதற்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளோம். எங்கள் கூட்டணி மேலும் வலுப்பெறும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் கூறினார்.
அமமுக விருதுநகர் மத்திய மாவட்டம், சாத்தூர் சட்டமன்றத் தொகுதி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சாத்தூரில் இன்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளதில் நாட்டிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போய் உள்ளது. ரூ.5 ஆயிரத்துக்கும் ரூ.10 ஆயிரத்துக்கும் கொலை செய்யும் கூலிப் படைகள் அதிகரித்துள்ளன. நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நினைக்கும் கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வரும் என்று நினைக்கிறோம்.
கட்சியின் முக்கி நிர்வாகிகளை தேர்தலில் போட்டியிட வாய்ப்புத் தர வேண்டும். கட்டணி பலப்பட வேண்டும் என்று நினைப்பவன் நான். முக்கிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பை பெற்றுத்தர வேண்டியது தலைமையின் பொறுப்பு. கூட்டணி என்று வந்துவிட்டால் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவார்கள். அவர்களுக்காக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பிரச்சாரம் செய்வார்கள், செய்வோம். திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கும் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று கூறுகிறேன். இதற்கும் எங்கள் கூட்டணி கட்சியினருடனான சண்டைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
மத்திய அரசுக்கு ஆதரவாக நடத்த முடியாததால் ராணுவத்தினரை ஆதரித்து பேரணி நடத்துவதாக திமுக கூறுகிறது. தேர்தல் என்பது திமுகவை வீழ்த்துவதற்கான ஜனநாயக போர். திமுக என்ற தீய சக்தி வீழ்த்தப்பட வேண்டும். அதற்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளோம். எங்கள் கூட்டணி மேலும் வலுப்பெறும். உறுதியாக திமுகவை எதிர்க்கும் கூட்டணியாக எங்கள் கூட்டணி இருக்கும் என்று கூறினார்.