பட மூலாதாரம், Getty Images/Mark Garlick
அடுத்த முறை நீங்கள் ஒரு முழு நிலவை ரசிக்கும்போது, தியாவைப் பற்றி ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்.
4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியுடன் மோதியிருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் கருதும் ஒரு கற்பனையான கோளுக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் தான் தியா. இந்த மோதலின் போது வெளியேறிய ஒரு பெரிய சிதைவு தான் பின்னாளில் நமது நிலவாக மாறியது என அவர்கள் கருதுகிறார்கள்.
இந்தக் கோட்பாட்டின் படி, தியா செய்த அந்த “பிரபஞ்ச தியாகம்” இல்லையென்றால், நமக்கென நிரந்தரமான நிலவு இருந்திருக்காது.
இவ்வளவு ஏன், அநேகமாக நீங்கள் இப்போது இந்தச் செய்தியைக் கூட படித்துக் கொண்டிருக்க மாட்டீர்கள்.
பிரபஞ்சத்தில் நிகழ்ந்த மோதல்
ஆரம்ப கால பூமிக்கும் செவ்வாய் கிரகத்தின் அளவிலான ஒரு பொருளுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய மோதல், இறுதியில் நிலவை உருவாக்குவதற்குத் தேவையான பொருட்களை வெளியிட்டதாக விஞ்ஞானிகள் தற்போது கருதுகின்றனர்.
மாபெரும் தாக்கக் கருதுகோள்(Giant Impact Hypothesis)என அழைக்கப்படும் இந்த நிகழ்வு, நாம் அறிந்த உயிரினங்களின் வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைந்த ஒரு உறவைத் தொடங்கிவைத்தது.
பல காரணங்களில் ஒன்றாக, நிலா பூமியுடன் ஈர்ப்பு விசை சார்ந்த ஒரு இழுபறி விளையாட்டை நடத்துகிறது. இதன் விளைவாக, பல பில்லியன் ஆண்டுகளாக பூமி தனது அச்சில் சுழலும் போது நிலைத்தன்மை பெற்றது. இதுவே நிலையான காலநிலையை உருவாக்க உதவியது.
“காலநிலை நிலைத்தன்மை இல்லையென்றால், நாம் மிகவும் தீவிரமான காலநிலை மற்றும் வானிலை சூழல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், இது உயிரினங்களின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்காது,” என்று ஜெர்மனியைச் சேர்ந்த மாக்ஸ் பிளாங்க் சூரிய குடும்ப ஆய்வு நிறுவனத்தின் (Max Planck Institute for Solar System Research) கோள் ஆய்வாளர் பேராசிரியர் தோர்ஸ்டன் க்ளெய்ன் விளக்குகிறார்.
கடந்த நவம்பரில், பூமியின் முக்கியமான ஆனால் மர்மமான மோதல் பற்றிய புதிரை தீர்க்க முயன்ற சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவின் ஒரு பகுதியாக க்ளெய்ன் இருந்தார்.
‘சயின்ஸ்’ இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், அந்த குழு பூமி மற்றும் நிலவு மாதிரிகளின் வேதியியல் கட்டமைப்பை ஆய்வு செய்தது. சூரிய குடும்பம் உருவாகியிருந்த கால கட்டத்தில், தியாவும் நமது கிரகமும் நாம் ‘சிக்கலான அண்டை வீட்டார்’ என்று அழைக்கக் கூடிய வகையில் இருந்தன என்பன போன்ற கோட்பாடுகளை இது வலுப்படுத்தியது.
பட மூலாதாரம், NASA
ஒரு நிலவு, பல கோட்பாடுகள்
ஆனால் நாம் எப்போதும் தியாவை நினைவில் வைத்திருந்ததில்லை. 1969-ஆம் ஆண்டில் மனிதர்கள் முதன்முதலில் நிலவின் மேற்பரப்பில் கால் வைப்பதற்கு முன்பு, நிலவின் தோற்றம் குறித்து மற்ற மூன்று முக்கிய கருதுகோள்கள் இருந்தன.
பிளவு கோட்பாட்டின் படி, ஆரம்பகாலத்தில் வேகமாகச் சுழன்று கொண்டிருந்த பூமி, தனது ஒரு பகுதியை விண்வெளியில் தூக்கி எறிந்தபோது நிலவு உருவானது.
அடுத்ததாக, நிலவு சூரிய குடும்பத்தின் வேறு எங்கோ உருவாகி, அது கடந்து செல்லும்போது பூமியின் ஈர்ப்பு விசையினால் “இழுக்கப்பட்டு” பிடிக்கப்பட்டது என்று கைப்பற்றுதல் கோட்பாடு முன்மொழிந்தது.
இறுதியாக, இணை-உருவாக்கக் கோட்பாடு, அதாவது பூமியும் நிலவும் அருகருகே உருவாகி நிலைபெற்றன என்று கூறியது.
இந்தக் கோட்பாடுகளில் எது உண்மையாக இருக்கக்கூடும் என்று விளக்குவதற்கு பதிலாக, நாசாவின் அப்பல்லோ விண்கலப் பயணங்கள் முற்றிலும் புதிய ஒரு கோட்பாட்டை சுட்டிக்காட்டின.
வேதியியல் ஒற்றுமைகள்
நிலவில் கால் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பிற விண்வெளி வீரர்களின் செயல்கள் பெரும்பாலும் இதுகுறித்த விளக்கங்களில் ஆதிக்கம் செலுத்தினாலும், அப்பல்லோ பயணங்களின் ஒரு முக்கிய சாதனை, அந்தப் பயணத்தின் போது கொண்டுவரப்பட்ட ‘நினைவுப் பொருட்கள்’ என்று சொல்லப்படும் மாதிரிகளில் உள்ளது.
“அப்பல்லோ விண்வெளி வீரர்கள் நிலவின் பாறை மாதிரிகளைக் கொண்டு வந்தனர். விஞ்ஞானிகள் அவற்றை ஆய்வு செய்தபோது, நிலவின் பாறைகள் பூமியுடன் குறிப்பிடத்தக்க வேதியியல் ஒற்றுமைகளைக் கொண்டிருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்,” என்று லண்டன் யுனிவர்சிட்டி காலேஜின் வானியலாளரும், ‘ஒண்டர்ஸ் ஆஃப் தி மூன்’ என்ற சிறுவர் அறிவியல் புத்தகத்தின் ஆசிரியருமான பேராசிரியர் ராமன் பிரின்ஜா கூறுகிறார்.
நிலவு முதலில் பூமியிலிருந்து வந்திருக்கலாம் என்பதை இது உணர்த்தியது.
பட மூலாதாரம், NASA/Getty Images
நிலவின் பாறைகள் கடுமையான வெப்பத்தில் உருவானதற்கான அறிகுறிகளைக் காட்டுவதாகவும், இது ஒரு மிகப்பெரிய மோதலில் அவை உருவானதை உணர்த்துவதாகவும் பிரின்ஜா கூறுகிறார்.
வெப்பமடையும் போது எளிதில் ஆவியாகக்கூடிய பெரும்பாலான தனிமங்களை அவை இழந்திருப்பதாகத் தெரிகிறது. இது நிலவு உருவானபோது உருகிய நிலையில் இருந்ததைச் சுட்டிக்காட்டுகிறது.
நாசாவின் நிலவு சார் நிலவியலாளரும் ஆய்வாளருமான முனைவர் சாரா வலென்சியா கூறுகையில், இந்த மாதிரிகள் வழங்கிய தடயங்கள் ஒரு சிறு பகுதி மட்டும் தான் என்கிறார். சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்கள், குறிப்பாகக் கணினி உருவகப்படுத்துதல்கள், ராட்சத மோதல் எனும் கருதுகோளுக்கு கூடுதல் வலு சேர்த்துள்ளன. பூமியின் சாய்ந்த அச்சு தியாவுடனான மோதலின் விளைவுதான் என்ற கோட்பாடுகளும் கூட உள்ளன.
“பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான வேதியியல் மற்றும் உறவை விளக்குவதற்கு ராட்சத மோதல் கோட்பாடு இப்போதும் சிறந்த மாதிரியாகத் திகழ்கிறது,” என்று வலென்சியா கூறுகிறார்.
பூமி தியாவை “விழுங்கியதா”?
ஆனால் தியாவுக்கு என்ன ஆயிற்று?
இந்தக் கேள்வி, தீர்க்கப்படாத மர்மங்களில் ஒன்றாகும்.
65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியைத் தாக்கி, டைனோசர்களை அழித்து, மெக்சிகோவின் யுகடன் (Yucatan) தீபகற்பத்தில் ஒரு பெரிய பள்ளத்தை ஏற்படுத்திய அந்தப் விண்கல்லைப் போலல்லாமல், தியா ஒரு தெளிவான அடையாளத்தை விட்டுச் சென்றதாகத் தெரியவில்லை.
ஏனென்றால், தியா பூமியின் நிறையில் சுமார் 10% மட்டுமே இருந்தது என்றும், அந்த வேறுபாடு காரணமாக அது மோதலின் போது சிதறி, பெரும்பாலும் பூமியால் ஈர்க்கப்பட்டிருக்கும் என்றும் க்ளெய்ன் கூறுகிறார். அதன் சில பகுதிகள் நிலவை உருவாக்கிய கலவையின் ஒரு பகுதியாகவும் மாறியிருக்கலாம்.
மேலும், “இதுபோன்ற மோதலின் இயல்பான விளைவு இதுவாகத்தான் இருக்கும். ஆனால் நிலவில் தியாவின் கலவை தொடர்பான ஒரு அடையாளத்தை காண முடியும் என்று எதிர்பார்க்கிறோம், அதை நாங்கள் இதுவரை கண்டறியவில்லை,” என்று க்ளெய்ன் விவரித்தார்.
பட மூலாதாரம், NASA/JPL-Caltech/Esa
அதேபோல் “பூமியும் தியாவும் சூரிய குடும்பத்தின் ஒரே பகுதியில் உருவானதால் அவை ஒரே போன்று இருந்திருக்கலாம் என்பது ஒரு விளக்கமாகும்,” என்று கூறும் அவர், எனவே அவற்றை வேறுபடுத்திப் பார்ப்பது கடினம் என்பதையும் குறிப்பிட்டார்.
அதேபோல், நமது கிரகம் அதன் மிக நெருக்கமான அண்டை கிரகங்களான வெள்ளி மற்றும் செவ்வாய் ஆகியவற்றுடன் பல பொதுவான பண்புகளைக் கொண்டுள்ளது என்பதை நாம் அறிவோம். வெள்ளி சில நேரங்களில் “பூமியின் தீய இரட்டைக் கோள்” என்றும் அழைக்கப்படுகிறது.
“ஆனால் தியாவின் தோற்றம் எப்படித் திட்டவட்டமாகத் தெரியவில்லையோ, அதேபோல் அதன் முடிவும் தெரியவில்லை,” என்று வலென்சியா குறிப்பிட்டார்.
ஆனால், சில தடயங்கள் உள்ளன. பூமியின் ஆழத்தில் இருக்கும் இரண்டு கண்டங்களின் அளவிலான பகுதிகள் தியாவின் எஞ்சிய பாகங்கள் என்று 2023-ஆம் ஆண்டு ஆய்வு ஒன்று தெரிவித்தது.

சந்திரனுக்குத் திரும்புதல்
நமது கிரகமும் நிலவும் எப்படி ஒரு ஜோடியாக மாறின என்பதைப் பற்றி இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. நாசாவின் தற்போதைய ஆர்டெமிஸ் திட்டங்கள் மற்றும் மனிதர்கள் மீண்டும் நிலவுக்குச் செல்வது குறித்து விஞ்ஞானிகள் இவ்வளவு ஆர்வமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
பட மூலாதாரம், NASA
அப்பல்லோ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட காலத்தில் இருந்ததை விட மேம்பட்ட சோதனைகளுடன், இந்த திட்டங்கள் நிலவின் தென் துருவம் போன்ற புதிய பகுதிகளை ஆராய உள்ளன. அப்பல்லோ மூலம் பூமிக்குக் கொண்டு வரப்பட்ட நிலவின் மாதிரிகள், நிலவின் ஒப்பீட்டளவில் சிறிய பகுதியிலிருந்து, அதாவது அதன் அருகிலுள்ள பூமத்திய ரேகைப் பகுதியிலிருந்து மட்டுமே வந்தவை.
“நாம் பூமியில் வெறும் ஆறு இடங்களுக்கு மட்டும் சென்றிருந்தால், நாம் முழு பூமியையும் ஆராய்ந்துவிட்டோம் என்றும் அதன் பரிணாமத்தைப் புரிந்துகொண்டோம் என்றும் சொல்ல முடியுமா? நிச்சயமாக முடியாது.” என்று வலென்சியா கூறுகிறார்.
ஆனால் இப்போதைக்கு, நாம் ஏற்கனவே கற்றுக்கொண்டவற்றைக் கொண்டு பார்க்கையில், தியாவின் தியாகத்திற்கு நாம் ஒரு பெரிய நன்றியைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம் என்று சொன்னால் அது மிகையாகாது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு