திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை இரு நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உறுதி செய்துள்ளது. தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அப்போது, தூணில் விளக்கு ஏற்றுவது தொடர்பாக முந்தைய வழக்குகளில் முடிவு செய்யப்படவில்லை எனவும் அதனால் தனி நீதிபதியின் உத்தரவை முன்னரே முடிக்கப்பட்ட வழக்கு என முடிவு செய்ய முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தர்காவுக்கு அருகில் உள்ள கல் தூணில் விளக்கு ஏற்றுவதற்கு ஆகம விதிகளில் இடம் இல்லை என்பதற்கான வலுவான ஆதாரங்களை மாநில அரசின் அதிகாரிகளும் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா தரப்பில் சமர்ப்பிக்க தவறிவிட்டதாகவும் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
ஓராண்டில் குறிப்பிட்ட நாளில் கல் தூணில் விளக்கு ஏற்றுவதற்கு அனுமதித்தால் அது பொது அமைதிக்கு ஆபத்தை விளைவிக்கும் என அரசு அஞ்சுவது ஆபத்தானது எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
இது நம்புவதற்குக் கடினமானது என்று கூறியுள்ள நீதிபதிகள், ‘சட்டம்-ஒழுங்கு குறித்த அச்சம் என்பது ஒரு சமூகத்துக்கு எதிராக மற்றொரு சமூகத்திற்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதற்கு மாநில அரசின் அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட கற்பனையான பேய்’ எனவும் தெரிவித்துள்ளனர்.
“நிச்சயமாக, இதுபோன்ற ஒரு குழப்பம் அந்த அரசாங்கத்தாலேயே தூண்டிவிடப்பட்டால் மட்டுமே அது சாத்தியமாகும். தங்களின் அரசியல் நோக்கங்களை அடைவதற்காக எந்தவொரு அரசாங்கமும் அந்த அளவுக்குத் தாழ்ந்துவிடக் கூடாது என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம்” என்று நீதிபதிகள் குறிப்பிட்டதாக லைவ் லா செய்தி கூறுகிறது.
திருப்பரங்குன்றம் மலை பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால், எந்தவித நடவடிக்கைகளும் சட்டப்படியே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். மலை உச்சி தூணில் தீபம் ஏற்றலாம் எனக்கூறிய நீதிபதிகள் எத்தனை பேர் அனுமதிக்கப்படலாம் என்பது குறித்து தொல்லியல் துறையுடன் கலந்தாலோசித்த பின்னர் முடிவெடுக்கலாம் என்று தெரிவித்திருப்பதாக ‘லைவ் லா’ இணையதள செய்தி கூறுகிறது.
லைவ் லா செய்தியின்படி, சமூகங்களுக்கு இடையேயான இடைவெளியை மத்தியஸ்தம் மூலம் தீர்ப்பதற்கான பாலமாக மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தை பார்க்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
‘அறநிலையத் துறை, கோவில் நிர்வாகமே பொறுப்பு’
தீபத்தூணில் தீபமேற்ற கோரி வழக்கு தொடுத்தவர்களுள் ஒருவரான அரசுபாண்டி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் குமார் தீர்ப்பு குறித்து கூறுகையில், “இன்றைய தீர்ப்பில், ‘ மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்றவேண்டியது ஒரு கட்டாயம்’ என்பதை நீதிபதிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அறநிலையத் துறைக்கும் கோவில் நிர்வாகமும் தான் இதற்கு பொறுப்பு என உறுதிப்படுத்தியுள்ளனர். எந்த காலத்திலும் என்ன காரணத்திற்காகவும் தவிர்க்கக் கூடாது என உறுதிப்படுத்தியுள்ளனர்.” என கூறினார்.
நிர்வாகத்தின் 10 பேர் சேர்ந்து தீபம் ஏற்றுவதால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என கூறுவது, அரசின் திறமையின்மையை காட்டுகிறது அல்லது அரசின் நிலைப்பாட்டை காட்டுகிறது என நீதிபதிகள் தெரிவித்ததாக அவர் கூறினார்.
“திருப்பரங்குன்றம் மலையில் எந்த மதத்தை சேர்ந்த நிகழ்வாக இருந்தாலும் தொல்லியல் துறை மற்றும் காவல்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
ஆனால், கார்த்திகை தீபத்திற்கு ஏற்கெனவே அனுமதி அளித்துவிட்டதால், அதற்கு இந்த நிபந்தனை பொருந்துமா என தெரியவில்லை.” என தெரிவித்தார்.
தர்கா தரப்பு கூறியது என்ன?
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என்ற தனி நீதிபதி தீர்ப்பை இரு நீதிபதிகள் அமர்வு உறுதிப்படுத்தியிருப்பது குறித்து தர்கா தரப்பிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அவர்கள் கூறினர்.
வழக்கின் பின்னணி
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ள மலை உச்சியின் இடதுபுறத்தில் காசி விஸ்வநாதர் ஆலயமும் மறுபுறம் சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்காவும் அமைந்துள்ளன.
ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை தீப நாளில் சுப்ரமணிய சுவாமி கோவிலில் உள்ள பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை இந்து அமைப்பினர் முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டுமென உத்தரவிட்டார்.
அதன்படி, டிசம்பர் 3 மாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
இதையடுத்து, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென திருப்பரங்குன்றம் முருகன் கோவில் செயல் அலுவலர் டிசம்பர் 2 அன்று மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.
ஆனால், டிசம்பர் 3 அன்று திருப்பரங்குன்றம் மலையில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே வழக்கம் போல தீபம் ஏற்றப்படும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் தீபத்தூணில் தீபத்தை ஏற்றுவதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி ராம ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை (டிசம்பர் 3) தொடர்ந்தார்.
இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு மனுதாரர் ராம ரவிக்குமாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். தன்னுடன் அவர் 10 பேரை அழைத்துச் செல்லலாம் என்றும் சிஐஎஸ்எஃப் வீரர்கள் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
பட மூலாதாரம், hcmadras.tn.gov.in
படக்குறிப்பு, தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனும், உயர் நீதிமன்ற மதுரை கிளையும்
இந்த உத்தரவை எதிர்த்து, மதுரை மாவட்ட ஆட்சியர், நகர காவல் ஆணையர், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் செயல் அதிகாரி ஆகியோர் ஒரு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு முன்பாக டிசம்பர் 4 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பின் மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மறுபுறம், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை, திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம், மலை மீதுள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா நிர்வாகம் ஆகியவை மேல் முறையீடு செய்திருந்தன. இந்த வழக்கை நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு விசாரித்து வந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.