‘பட்டியல் பிரிவைச் சேர்ந்த பெண்ணின் உடலை பொது வழியில் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லக் கூடாது’ என்று காவல்துறையினரே தடுத்ததாக திருவண்ணாமலையில் சர்ச்சை எழுந்துள்ளது.
“பாதை மறுக்கப்பட்டதால் நாள் முழுக்க சடலத்தை வைத்துப் போராடினோம்”, என்று பட்டியலின மக்கள் கூறுகின்றனர்.
“பட்டியல் பிரிவினரின் சுடுகாட்டுப் பாதையை வழிமறித்து தனி நபர் ஒருவர் வீடு கட்டியதால் தான் பிரச்னை ஏற்பட்டது” என்கிறார், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்.
பட்டியல் பிரிவு பெண்ணின் சடலத்தைக் கொண்டு செல்வதில் என்ன பிரச்னை?
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை அடுத்துள்ள மோத்தக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் 54 வயதான கிளியம்மாள். சென்னையில் தனது மகளுடன் வசித்து வந்த இவர், கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி உயிரிழந்தார்.
பொது வழியில் எடுத்துச் செல்ல எதிர்ப்பு
சொந்த ஊரில் அடக்கம் செய்ய தீர்மானித்து கிளியம்மாளின் உடலை சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் மோத்தக்கல் கிராமத்திற்கு உறவினர்கள் கொண்டு வந்துள்ளனர்.
“கிராமத்தின் ஒருபுறம் பட்டியல் பிரிவினர் வசிக்கும் பகுதி உள்ளது. அதன் பின்புறம் வழியாக இறந்தவர்களின் உடலை வழக்கமாக கொண்டு செல்வோம். அந்தப் பாதை கரடுமுரடாக பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததால், வேறுவழியின்றி பொதுப் பாதையில் கிளியம்மாளின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல நாங்கள் தீர்மானித்தோம். அதுகுறித்து காவல்துறையினரிடம தெரியப்படுத்தினோம். இதுபற்றி டி.எஸ்.பி முருகனிடம் தெரியப்படுத்திய போது, ‘பொது வழியில் சடலத்தைக் கொண்டு செல்லுங்கள். ஆனால் பட்டாசு வெடிக்க வேண்டாம்’ என கூறினார்” என்று பிபிசி தமிழிடம் மஞ்சுநாதன் குறிப்பிட்டார்.
சடங்குகளை முடித்துவிட்டு கிளியம்மாளின் உடலை பொதுப் பாதையில் எடுத்துச் செல்ல முற்பட்ட போது, அங்கே முன்கூட்டியே காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கிளியம்மாளின் உடலை பொதுப்பாதையில் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல விடாமல் தடுத்தனர். பிற சமூகத்தினர் எதிர்ப்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று காவல்துறையினர் கூறினர்.
ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம்
இதையடுத்து, கிளியம்மாளின் உடலை வைத்துக் கொண்டு பட்டியல் பிரிவினர் அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக வருவாய்த்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பட்டியல் பிரிவு மக்களுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஒரு கட்டத்தில் தாங்கள் வழக்கமாக பயன்படுத்தும் வழியை சீரமைத்துத் தரும் பட்சத்தில், அவ்வழியே உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல பட்டியல் பிரிவினர் ஒப்புக் கொண்டனர். மாலை வரையிலும் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக கிளியம்மாளின் உடலுடன் பட்டியல் பிரிவு மக்கள் அங்கேயே இருந்தனர்.
அந்த நேரத்தில், பட்டியல் பிரிவினர் வழக்கமாக பயன்படுத்தும் பாதையின் குறுக்கே கட்டப்படும் வீட்டிற்கு அருகேயுள்ள நிலத்தின் உரிமையாளருடன் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், அந்த நிலத்தின் வழியே கிளியம்மாளின் உடலை எடுத்துச் செல்ல அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, அந்த பாதை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் தற்காலிகமாக சரிசெய்யப்பட்டது. அதன் பின்னர், கிளியம்மாளின் உடல் அவ்வழியே சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பிற சமூகத்தினர் கூறுவது என்ன?
பட்டியல் பிரிவினர் வழக்கமாக பயன்படுத்தும் பாதையில் அதே பிரிவைச் சேர்ந்த ஒருவர் வீடு கட்டுவதே பிரச்னைக்கு காரணம் என்கிறார் பிற சமூகத்தைச் சேர்ந்த ரமேஷ். “பட்டியல் பிரிவினர் வசிக்கும் பகுதியின் பின்புறம் வழியாக சடலத்தை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்வது அவர்களின் வழக்கம். அதே வழியை அவர்கள் தொடர்ந்து பயன்படுத்தியிருந்தால் எந்த பிரச்னையும் எழுந்திருக்காது. ஆனால், அந்தப் பாதையில் அதே பிரிவைச் சேர்ந்த ஒருவர் வீடு கட்டி வருகிறார். இதனால் தேவையற்ற பிரச்னை ஏற்பட்டது. வருவாய்த்துறை அதிகாரிகள் தலையிட்டதால் பிரச்னை சுமூகமாக முடிந்துவிட்டது” என்று ரமேஷ் கூறினார்.
மாவட்ட ஆட்சியர் சொல்வது என்ன?
இந்த சர்ச்சை குறித்து டி.எஸ்.பி முருகனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசியபோது, “பிரச்னை என்பது பாதை தொடர்பானது. மாவட்ட ஆட்சியரிடம் தான் நீங்கள் பேச வேண்டும்” என்றார். இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.
“சுடுகாட்டுக்குச் செல்வதற்கு பட்டியல் பிரிவு மக்களுக்கு பாதை ஒன்று உள்ளது. அந்தப் பாதையை அதே சமூகத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் வீடு கட்டி மறித்துவிட்டார். பிரச்னைக்கு அடிப்படைக் காரணம் இது தான். மோத்தக்கல் கிராமத்தில் பட்டியல் பிரிவினர் வசிக்கும் இடத்தில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் சுடுகாடு உள்ளது. பட்டியல் பிரிவினர் சுடுகாட்டுக்குச் செல்ல வழக்கமாக பயன்படுத்தும் பாதையில் 13 தனி நபர்களின் பட்டா நிலங்கள் உள்ளன. இவர்கள் பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் யாரும் சடலத்தைக் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவிக்கவில்லை” என்று பாஸ்கர பாண்டியன் கூறினார்.
சுரேஷ் என்பவர் கட்டி வரும் வீட்டுக்கு எதிரில் உள்ள பட்டா நிலத்தை சமன்படுத்தி, அதன் வழியே பெண்ணின் உடல் எடுத்துச் செல்லப்பட்டதாக கூறிய ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், “அந்த பட்டா நிலத்தின் உரிமையாளர் பிற சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை” என்று விளக்கம் அளித்தார்.
பொதுவழியில் செல்வதற்கு அனுமதி மறுப்பா?
பட்டியல் பிரிவைச் சேர்ந்த கிளியம்மாளின் உடலை பொதுவழியில் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்வதை காவல்துறை தடுத்தது ஏன்? என்ற கேள்விக்குப் பதில் அளித்த ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், “பொது வழியில் யார் வேண்டுமானாலும் செல்லலாம். அதில் எந்த தடையும் இல்லை. ஆனால், அதனால் சட்டம்-ஒழுங்கு சிக்கல் ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.