7
மாலே தேசிய கால்பந்தாட்ட விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஏழு நாடுகளுக்கு இடையிலான எட்டாவது 20 வயதுக்குட்பட்ட தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப்பில் (Under 20 SAFF Championship) அரை இறுதிக்கு தகுதிபெற இலங்கைக்கு ஒரு புள்ளியே தேவைப்படுகிறது.
இந் நிலையில் மாலே தேசிய கால்பந்தாட்ட விளையாட்டரங்கில் இன்று நடைபெறவுள்ள தீர்மானம் மிக்க ஏ குழு போட்டியில் பூட்டானை இலங்கை எதிர்த்தாடவுள்ளது.
சாவ் சம்பியன்ஷிப்பில் ஏ குழவில் இடம்பெறும் இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் திங்களன்று மாலைதீவுகளை 3 – 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டதுடன் நேற்றுமுன்தினம் நடைபெற்ற தனது இரண்டாவது போட்டியில் நேபாளத்திடம் கடும் சவாலுக்கு மத்தியில் 0 – 1 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

எனினும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாலைதீவுகளுக்கும் பூட்டானுக்கும் இடையிலான போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததால் அரை இறுதிக்கு செல்வதற்கான இலங்கையின் வாய்ப்பு சற்று அதிகரித்துள்ளது.
புதன்கிழமை வரை நடைபெற்று முடிந்த ஏ குழு போட்டி முடிவுகளுக்கு அமைய நேபாளம் 2 வெற்றிகளுடன் (பூட்டான் 2 – 1, இலங்கை 1 – 0) 6 புள்ளிகளைப் பெற்று அணிகள் நிலையில் முதலிடத்தில் இருப்பதுடன் முதல் அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டுள்ளது.
South Asians & Diaspora
இலங்கை ஒரு வெற்றி, ஒரு தோல்வி என்ற பெறுபேறுகளுடன் 3 புள்ளிகளைப் பெற்று 2ஆம் இடத்தில் இருக்கிறது.
மாலைதீவுகளும் பூட்டானும் தலா ஒரு தோல்வி, ஒரு வெற்றிதோல்வியற்ற முடிவு என்ற பெறுபேறுகளுடன் தலா ஒரு புள்ளியைப் பெற்று முறையே 3ஆம், 4ஆம் இடங்களில் இருக்கின்றன.
இவ்வாறான நிலையில் பூட்டானுக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால், அல்லது அப் போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டால் இலங்கைக்கு அரை இறுதியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.

இந் நிலையில், பூட்டானுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெறுவதை மாத்திரமே குறிக்கோளாகக் கொண்டு விளையாடவுள்ளதாக 25 வயதுக்குட்பட்ட இலங்கை கால்பந்தாட்ட அணியின் உதவிப் பயிற்றுநர்களில் ஒருவரான ஒகஸ்டின் ஜோர்ஜ் தெரிவித்தார்.
‘பூட்டானுக்கு எதிரான போட்டியில் எவ்வாறு விளையாட வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனைகளையும் பயிற்சிகளையும் இலங்கை வீரர்களுக்கு வழங்கியுள்ளோம். இலங்கை இளையோர் அணி இதற்கு முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு இம்முறை தெற்காசிய கால்பந்தாட்ட வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்தும் குறிக்கோளுடன் விளையாடி வருகின்றது.
வீரர்களுக்கு எதிர்த்தாடும் உத்திகளை நானும் தடுத்தாடும் உத்திகளை சக உதவிப் பயிற்றுநர் மொஹமத் இம்ரானும் வழங்கி வருகிறோம். தலைமைப் பயிற்றுநர் அஹ்மத் அல் மன்னாய் எங்களை சிறப்பாக வழிநடத்துவதுடன் எங்களுக்கு சில பொறுப்புக்களைக் கொடுத்துள்ளார். அதற்கேற்ப பயிற்சிகளை வழங்கி வருகிறோம். பூட்டானுக்கு எதிரான போட்டியில் இலங்கையின் இளம் வீரர்கள் வெற்றியை ஈட்டிக்கொடுப்பார்கள் என நம்புகிறேன்’ என ஒகஸ்டின் ஜோர்ஜ் கூறினார்.