பட மூலாதாரம், Corbis via Getty Images
1956ஆம் ஆண்டு குளிர்காலத்தில், தி டைம்ஸ் நிருபர் டேவிட் ஹோல்டன் பஹ்ரைன் தீவிற்கு சென்றிருந்தார். அந்த சமயத்தில், பிரிட்டிஷ் அரசின் கீழ் பஹ்ரைன் தீவு இருந்தது.
புவியியல் ஆசிரியராக சில காலம் பணிபுரிந்த டேவிட் ஹோல்டன், அரேபியாவில் பணியமர்த்தப்படுவதற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார். ஆனால், இந்தியாவின் பேரரசியாக விக்டோரியா மகாராணி நியமிக்கப்பட்டதை சிறப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தர்பாரில் கலந்து கொள்வார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.
துபை, அபுதாபி மற்றும் ஓமன் என வளைகுடா நாடுகளில் அவர் சென்ற இடமெல்லாம் பிரிட்டிஷ் இந்தியாவின் எச்சங்களை அவரால் காண முடிந்தது.
“பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் இங்கே சற்று கற்பனையான ஒரு போக்கையே பராமரிக்கிறது,” என்று ஹோல்டன் எழுதினார், “முரண்பாடுகள் மற்றும் காலத்திற்கு ஒவ்வாத தன்மை நிறைந்த சூழ்நிலை நிலவியது… அங்கிருந்தவர்கள் வேலைக்காரர்களாக, பாரம் சுமப்பவர்களாக, சலவை செய்யும் சலவைத் தொழிலாளியாக, காவலாளியாக இருந்தனர்,” என்றும், “ஞாயிற்றுக்கிழமைகளில் விருந்தினர்களுக்கு பண்டைய மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆங்கிலோ-இந்திய சடங்கான கறி உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது” என்றும் அவர் எழுதினார்.
அப்போதைய ஓமன் சுல்தான், ராஜஸ்தானில் கல்வி கற்றவர். அரபியை விட உருது மொழியில் சரளமாகப் பேசக்கூடியவராக இருந்தார். அதே நேரத்தில் அருகிலுள்ள மாகாணமான குவைத்தியில் (தற்போது கிழக்கு ஏமன்) வீரர்கள், அப்போதைய ஹைதராபாத் ராணுவச் சீருடையில் அணிவகுத்துச் சென்றனர்.
பட மூலாதாரம், Royal Geographical Society via Getty Images
ஏடன் ஆளுநரின் வார்த்தைகள் இவை:
“இங்குள்ள எல்லா கடிகாரங்களும் எழுபது ஆண்டுகளுக்கு முன்பே நின்றுவிட்டன என்பது போன்ற அசாதாரணமான சக்திவாய்ந்த எண்ணத்தை ஒருவர் கொண்டிருந்தார்; பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் அதன் உச்சத்தில் இருந்தது, விக்டோரியா மகாராணி அரியணையில் அமர்ந்திருந்தார், கில்பர்ட் மற்றும் சல்லிவன் ஜோடி நாடகத்துறையில் உச்சத்தில் இருந்த புதிய மற்றும் புரட்சிகரமான சமயத்தில், ஒரு ஆபத்தான குழப்பவாதியாக கிப்ளிங் இருந்த சமயத்தில், ஹைதராபாத் வழியாக டெல்லியிலிருந்து தெற்கு அரேபிய கடற்கரைக்கான இணைப்பு மிகவும் வலுவானதாக இருந்தது.”
இன்று பெரும்பாலும் அனைவராலும் மறக்கப்பட்டிருந்தாலும், இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், அரேபிய தீபகற்பத்தின் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது என்பது வரலாறு.
ஏடன் முதல் குவைத் வரை, அரேபியாவின் குறிப்பிடத்தக்க அளவிலான பகுதியை, இந்தியாவில் இருந்த பிரிட்டன் அரசு அதிகாரிகள் ஆட்சி செய்துவந்தனர். இந்திய வைஸ்ராய்க்கு கட்டுப்பட்ட அந்தப் பகுதியில் இந்திய துருப்புகளே காவல் இருந்தன.
1889ஆம் ஆண்டின் விளக்கச் சட்டத்தின் கீழ், அரேபிய தீபகற்பத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகள், சட்டப்பூர்வமாக இந்தியாவின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டன.
ஜெய்ப்பூர் போன்ற இந்தியாவின் சுதேச சமஸ்தானங்களின் நிலையான பட்டியல் அகர வரிசைப்படி அபுதாபியுடன் தொடங்கியது. அத்துடன், “லஸ் பெய்லா அல்லது கெலாட் [இன்றைய பலுசிஸ்தான்] போலவே இந்தியப் பேரரசின் பூர்வீக மாகாணமாக” ஓமன் கருதப்பட வேண்டும் என்று வைஸ்ராய் லார்ட் கர்சன் பரிந்துரைத்திருந்தார்.
இந்தியாவின் மேற்கு திசையில் உள்ள துறைமுகமாகவும், பம்பாய் மாகாணத்தின் ஒரு பகுதியாகவும் நிர்வகிக்கப்பட்டு வந்த நவீன ஏமனின் மேற்குப் பகுதி வரை வசித்த மக்களுக்கு இந்திய பாஸ்போர்ட்டுகள் தான் வழங்கப்பட்டன. 1931ஆம் ஆண்டு மகாத்மா காந்தி இந்த நகரத்திற்கு சென்றிருந்தபோது, பல இளம் அரேபியர்கள் இந்திய தேசியவாதிகளாக அடையாளம் காணப்படுவதை கண்டார்.
இருப்பினும், அந்த காலத்தில் கூட, பிரிட்டிஷ் மக்கள் அல்லது இந்திய பொதுமக்களில் வெகு சிலரே பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் இந்த அரேபிய விரிவாக்கம் பற்றி அறிந்திருந்தனர்.
பிரிட்டிஷ் இந்தியப் பேரரசின் முழு வீச்சையும் காட்டும் வரைபடங்கள் மிகவும் ரகசியமாகவே வெளியிடப்பட்டன. ஒட்டோமான் அல்லது செளதிகள் கிளர்ந்து எழுவதைத் தவிர்ப்பதற்காக அரேபிய பிரதேசங்கள் தொடர்பான தகவல்கள் பொது ஆவணங்களில் இருந்து விலக்கப்பட்டிருந்தன.
இது பற்றி ராயல் ஏஷியாடிக் சொசைட்டி விரிவுரையாளர் ஒருவர் இவ்வாறு நகைச்சுவையாகக் கூறினார்:
“பொறாமை கொண்ட ஷேக் ஒருவர், தனது விருப்பமான மனைவி யார் என்பதை மறைப்பது போல, பிரிட்டிஷ் அதிகாரிகள் அரபு நாடுகளின் நிலைமைகளை மிகவும் ரகசியமாக விசித்திரமாக மூடி மறைக்கின்றனர், “அங்கே பயங்கரமான ஏதோ நடக்கிறது” என்று தீய எண்ணம் கொண்ட பிரசாரகர்கள் தூண்டிவிடாமல் இருப்பதை தவிர்ப்பதற்காக இது செய்யப்படுகிறது… இது கிட்டத்தட்ட மன்னிக்கப்படலாம்.”
ஆனால் 1920களில், அரசியல் நிலைமைகள் மாறிக்கொண்டிருந்தன. இந்திய தேசியவாதிகள், இந்தியாவை ஒரு ஏகாதிபத்திய கட்டமைப்பாக அல்லாமல் மகாபாரதத்தின் புவியியலில் வேரூன்றிய ஒரு கலாசார இடமாக கற்பனை செய்யத் தொடங்கினர். லண்டனைப் பொருத்தவரை, அது எல்லைகளை மறுவரையறுக்கும் சந்தர்ப்பமாக மாறியது. 1937 ஏப்ரல் 1 அன்று, பல ஏகாதிபத்தியப் பிரிவினைகளில் முதலாவது இயற்றப்பட்டு, ஏடன் இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டது.
ஆறாம் ஜார்ஜ் மன்னரிடமிருந்து வந்த ஒரு தந்திச் செய்தி உரக்க வாசிக்கப்பட்டது:
“கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக பிரிட்டிஷ் இந்திய நிர்வாகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக ஏடன் இருந்து வருகிறது. இந்தியப் பேரரசுடனான அந்த அரசியல் தொடர்பு இப்போது பிரிக்கப்படுகிறது, ஏடன் எமது காலனித்துவப் பேரரசில் இடம் பிடிக்கும்.”
இருப்பினும், வளைகுடாவின் பிரிட்டிஷ் பகுதிகள் அடுத்த ஒரு தசாப்தத்திற்கு இந்திய அரசாங்கத்தின் கீழ் தான் இருந்தது.
சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா அல்லது பாகிஸ்தான் “பாரசீக வளைகுடாவை நிர்வகிக்க அனுமதிக்கப்படலாமா” என்பது குறித்து பிரிட்டிஷ் அதிகாரிகள் சுருக்கமான ஆலோசனையையும் மேற்கொண்டனர். ஆனால் டெஹ்ரானில் உள்ள பிரிட்டிஷ் தூதரக அதிகாரி ஒருவர் “டெல்லியில் உள்ள அதிகாரிகளின் வெளிப்படையான ஒருமித்த கருத்து” குறித்து தனது வியப்பை வெளிப்படுத்தினார். “… பாரசீக வளைகுடா தொடர்பாக இந்திய அரசாங்கத்திற்கு ஆர்வம் குறைவாகவே உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
வளைகுடாவில் வசித்த வில்லியம் ஹே கூறியது போல், “வளைகுடா அரேபியர்களை கையாள்வதற்கான பொறுப்பை இந்தியர்கள் அல்லது பாகிஸ்தானியர்களிடம் ஒப்படைப்பது பொருத்தமற்றதாக இருந்திருக்கும்”.
இறுதியாக 1947 ஏப்ரல் முதல் நாளன்று, துபையிலிருந்து குவைத் வரையிலான வளைகுடா நாடுகள், இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டன, அதாவது பிரிட்டனின் ஆட்சியில் இருந்த இந்தியா, இந்தியா மற்றும் பாகிஸ்தானாகப் பிரிக்கப்பட்டு சுதந்திரம் வழங்கப்பட்ட சில மாதங்களுக்கு முன்புதான் பிரிட்டனின் ஆட்சியில் இருந்த அரேபியப் பகுதிகள் இந்தியாவில் இருந்து பிரிக்கப்பட்டன.
அதாவது, சுதந்திரம் பெற்ற பல மாதங்களுக்குப் பிறகு, இந்திய மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் நூற்றுக்கணக்கான சுதேச சமஸ்தானங்களை தங்கள் புதிய நாடுகளுடன் ஒருங்கிணைக்கத் தொடங்கியபோது, வளைகுடாவின் அரபு நாடுகள், ‘சுதேச அரசுகளின் பட்டியலில்’ இருந்து காணாமல் போயின.
பட மூலாதாரம், Sam Dalrymple
இந்த பிரிவினை நடந்துமுடிந்த 75 ஆண்டுகளுக்குப் பிறகும், என்ன நடந்தது என்பதன் முக்கியத்துவம் இந்தியாவிலோ அல்லது வளைகுடாவிலோ இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சிறிய நிர்வாக மாற்றம் மட்டும் நடைபெறாமல் இருந்திருந்தால், பாரசீக வளைகுடாவின் பல நாடுகள், சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா அல்லது பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாறியிருக்கும். இந்திய துணைக்கண்டத்தில் இருந்த பிற சுதேச அரசுகள் இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைந்தது போன்ற இணைப்பு துபை உட்பட பல நாடுகளிலும் நிகழ்ந்திருக்கலாம்.
இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் படைகள் வெளியேறும் அதே நேரத்தில் அரேபிய பிரதேசங்களிலிருந்தும் படைகளை திரும்பப் பெறலாம் என்று அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் கிளெமென்ட் அட்லி முன்மொழிந்த போது, அவர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். எனவே, வளைகுடாவில் பிரிட்டன் தனது ஆட்சியை தொடர்ந்தது.
அதன்பிறகு, ‘அரேபிய ராஜ்ஜியம்’, இந்தியாவின் வைஸ்ராய்க்கு பதிலாக பிரிட்டன் அரசால் அடுத்த 24 ஆண்டுகளுக்கு நேரடியாக ஆட்சி செய்யப்பட்டது.
வளைகுடா நாடுகள் தொடர்பான விசயங்களில் நிபுணத்துவம் பெற்ற பால் ரிச், இது “இந்தியப் பேரரசின் கடைசி கோட்டையாக இருந்தது, போர்த்துக்கீசிய இந்தியாவின் கடைசி அடையாளமாக கோவா இருந்தது போலவும், பிரெஞ்சு இந்தியாவின் இறுதி அடையாளமாக பாண்டிச்சேரி இருந்தது போல” என்று கூறுகிறார்.
பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து இந்தியா விடுதலை அடைந்த பிறகும், பாரசீக வளைகுடாவில் பிரிட்டனின் ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளில் அதிகாரப்பூர்வ நாணயமாக இந்திய ரூபாயே இருந்தது; எளிதான போக்குவரத்து முறையாக ‘British India Line’ என்ற கப்பல் நிறுவனமே தொடர்ந்தது. இன்னும் இந்திய அரசியல் சேவையில் தங்கள் வாழ்க்கையை மேற்கொண்ட ‘பிரிட்டிஷ் குடியிருப்பாளர்களால்’ 30 அரேபிய சுதேச அரசுகள் ஆளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
சரி, எப்போது வளைகுடா நாடுகளில் இருந்து பிரிட்டன் வெளியேறியது? சூயஸுக்கு கிழக்கே காலனித்துவ ஆட்சியை கைவிடுவதற்கான முடிவின் ஒரு பகுதியாக, 1971 ஆம் ஆண்டுதான் வளைகுடா பகுதியிலிருந்து பிரிட்டிஷ் இறுதியாக வெளியேறியது.
ஜூலை மாதம் டேவிட் ஹோல்டன் எழுதியது போல:
“பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் செழுமையான காலத்திற்குப் பிறகு முதல் முறையாக, வளைகுடாவைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளும் பிரிட்டிஷ் தலையீட்டின் அச்சுறுத்தல் அல்லது பிரிட்டிஷ் ஆட்சியின் பாதுகாப்பில் இருந்து வெளிவந்து தங்களை சுயமாக நிர்வகித்துக் கொள்ள விடுதலை பெறுகின்றன. பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் இந்த இறுதி எச்சம், உண்மையில், சில வழிகளில் கவர்ச்சிகரமான, ஆனால் கால முரண்பாடாக இருந்தது முடிவுக்கு வந்துவிட்டது.”
பட மூலாதாரம், Getty Images
பிரிட்டிஷ் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு எழுந்த அனைத்து நாட்டின் கதைகளிலும், பிரிட்டிஷ் இந்தியாவுடனான தங்கள் உறவுகளை அழிப்பதில் மிகவும் வெற்றிகரமான பிராந்தியமாக வளைகுடா நாடுகளும் இடம்பெற்றுள்ளன.
பஹ்ரைன் முதல் துபை வரையிலான பல வளைகுடா நாடுகளில், பிரிட்டனுடனான கடந்த கால உறவு நினைவில் இருந்தாலும் டெல்லியின் ஆட்சி அப்படி பெரிய அளவில் நினைவில் இல்லை. முடியாட்சிகளை உயிர்ப்புடன் வைத்திருக்க பண்டைய இறையாண்மையின் தொன்மக் கதைகள் மிக முக்கியமானவை. இருப்பினும், சரித்திரத்தில் தனிப்பட்ட நினைவுகளும் தொடர்கின்றன, குறிப்பாக வளைகுடா பிராந்தியம் கண்ட கற்பனை செய்ய முடியாத வர்க்க தலைகீழ் மாற்றம் இந்த நினைவுகளை அவ்வப்போது நினைவூட்டுகிறது.
2009ஆம் ஆண்டில், வளைகுடா விவகாரங்களில் நிபுணரான பால் ரிச், “கத்தாரைச் சேர்ந்த முதியவர் ஒருவர், தான் 7 அல்லது 8 வயது சிறுவனாக இருந்த போது, பிரிட்டிஷ் முகவரின் இந்திய ஊழியரிடமிருந்து ஒரு ஆரஞ்சு பழத்தைத் திருடியபோது வாங்கிய அடியைப் பற்றி என்னிடம் கூறும் போது கூட அவருக்கு அந்த கோபம் சீற்றமாகவே இருந்தது” என்று நினைவு கூர்கிறார்.
“அவரது இளமைப் பருவத்தில் இந்தியர்கள் சலுகை பெற்ற வர்க்கத்தினராக இருந்தனர், தற்போது அன்றைய நிலைமை தலைகீழாக மாறி, அவர்கள் வளைகுடாவிற்கு வேலையாட்களாக வந்தது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது” என்று பால் ரிச் கூறுகிறார்.
ஒரு காலத்தில் இந்தியப் பேரரசின் ஒரு சிறிய நகரமாக இருந்த துபை, இன்று மத்திய கிழக்கின் பிரகாசிக்கும் நகரமாக உள்ளது.
ஜெய்ப்பூர், ஹைதராபாத் அல்லது பஹவல்பூரைப் போலவே, எண்ணெய் வளம் மிக்க வளைகுடாப் பிராந்தியம் இந்தியா அல்லது பாகிஸ்தானுடையதாக இருந்திருப்பதற்கான வாய்ப்புகளும் ஒரு காலத்தில் இருந்தது என்பதை அங்கு வசிக்கும் லட்சக்கணக்கான இந்தியர்கள் அல்லது பாகிஸ்தானியர்களில் சிலர் மட்டுமே அறிவார்கள்.
ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியம் எடுத்த ஒரு அமைதியான அதிகாரத்துவ முடிவு, வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் இணைப்பைத் துண்டித்தது. இன்று, அதன் பழமையான வரலாற்று எச்சங்கள் மட்டுமே சரித்திரத்தில் எஞ்சியுள்ளன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு