பட மூலாதாரம், B62 Studios/X
‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ (துரந்தர் 2) திரைப்படத்தின் பிரமாண்ட வசூல் இந்தித் திரைப்படத் துறைக்குப் புத்துயிர் அளித்துள்ளது. ஆனால் அதன் எதிரொலியுடன், எதிர்ப்புக் குரல்களும் அதே அளவு வலுவாகக் கேட்கின்றன.
பார்வையாளர்கள் இதை ஒரு பிளாக்பஸ்டர் என்று கொண்டாடினாலும், அதன் கதை, வன்முறை மற்றும் வசனங்கள் குறித்துப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போது நாட்டின் எல்லைகளைத் தாண்டி வெளிநாடுகளையும் சென்றடைந்துள்ளது, அங்கு இப்படம் வசூலில் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.
ஆனால் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ பற்றி சர்வதேச அளவில் என்ன பேசப்படுகிறது, வெளிநாட்டு இதழ்கள் மற்றும் விமர்சகர்களின் எதிர்வினை எப்படி உள்ளது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
பிரபல அமெரிக்க நாளிதழான ‘தி நியூயார்க் டைம்ஸ்’ இதழில் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ படத்தின் விமர்சனம் வெளியாகியுள்ளது.
அதில், விமர்சகர் நிக்கோலஸ் ராபோல்ட் படத்தில் இடம்பெற்றுள்ள வன்முறைக் காட்சிகளைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
“இந்த அதீத வன்முறை நிறைந்த இரண்டாம் பாகத்தில், ரன்வீர் சிங் ஒரு ரகசிய இந்திய ஏஜெண்டாக மீண்டும் வருகிறார். அவர் ஒரே நேரத்தில் ஒரு அரசியல் கேங்க்ஸ்டராகவும், அதே சமயம் பயங்கரவாதத்தை எதிர்க்கும் ஒரு கொலையாளியாகவும் இருக்கிறார்” என்று அவர் எழுதியுள்ளார்.
இந்த விமர்சனத்திற்கு ‘எ லைசென்ஸ் டு கில், எ லாட்’ (A Licence to Kill, a Lot) என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
அதில் அமெரிக்கத் திரைப்பட விமர்சகர் நிக்கோலஸ் ராபோல்ட் பின்வருமாறு எழுதியுள்ளார்.
“மூளையை மரத்துப்போகச் செய்யும் வன்முறை ஒவ்வொரு காட்சியிலும் பரவியுள்ளது. எரித்துக் கொல்லுதல் மற்றும் மிக அருகிலிருந்து சுட்டுக் கொல்லுதல் போன்றவை சாதாரணமாகக் காட்டப்பட்டுள்ளன. மேலும் குடும்பங்களையே அழிப்போம் என்ற மிரட்டல்களும் உள்ளன. பின்னணி இசை அந்தத் தீவிரத்தைக் கூட்டுகிறது. நீங்கள் ஒரு ‘ஃபர்ஸ்ட் பெர்சன் ஷூட்டர்’ விளையாட்டில் இருப்பது போன்ற உணர்வை இது தருகிறது, இது வன்முறையை இன்னும் பயங்கரமாகவும் தத்ரூபமாகவும் உணர வைக்கிறது.”
மேலும்,”முதல் பாகமான ‘துரந்தர்’ உத்திகள் மற்றும் ஊடுருவல் சார்ந்த ஒரு படமாக இருந்த நிலையில், ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ ஒரு நீண்ட பழிவாங்கல் படலமாகவும், பழிக்குப் பழி வாங்கும் கொலைகளின் தொடர்ச்சியாகவும் உணரப்படுகிறது. ஹம்சா தனது அதிகாரத்தை விரிவுபடுத்திக்கொண்டு, இந்தியாவில் உள்ள தனது மேலதிகாரிகளிடமிருந்து அதிக சுதந்திரத்தைப் பெறுகிறார். அவரது பணி பயங்கரவாத எதிர்ப்புதான், ஆனால் அது அவரது நிழல் யுத்தத்தின் மோதல்களில் தொலைந்து போகிறது”என்றும் திரைப்பட விமர்சகர் நிக்கோலஸ் ராபோல்ட் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் சூழலைச் சுட்டிக்காட்டியுள்ள படம்
பட மூலாதாரம், Getty Images
‘தி நியூயார்க் டைம்ஸ்’ இதழில் வெளியாகியுள்ள ‘துரந்தர் 2’ குறித்த இந்த விமர்சனம், தற்போதைய இந்திய அரசியல் மற்றும் சூழலையும் சுட்டிக்காட்டுகிறது.
இப்படம் வன்முறை குறித்து பார்வையாளர்களை உணர்ச்சியற்றவர்களாக மாற்றுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
“படத்தின் தலைப்புகள் இந்தியாவில் நடந்த உண்மையான பயங்கரவாதத் தாக்குதல்களைக் குறிப்பிடுகின்றன, கதையில் 2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கை சேர்க்கப்பட்டுள்ளது, மேலும் படத்தின் அதிரடி வசனங்கள் பிரதமர் நரேந்திர மோதியின் அறிக்கைகளை எதிரொலிக்கின்றன.”
“‘துரந்தர்’ முதல் பாகத்தின் விமர்சகர்கள், இந்த இரண்டாம் பாகமானது தேசியம் அல்லது மதம் சார்ந்த வன்முறைகள் குறித்து பார்வையாளர்களை உணர்ச்சியற்றவர்களாக்குகிறது என்று நினைக்கலாம். இந்தப் படம் தற்போதைய காலத்தின் முழுமையான எதிரொலியாகும், இது எந்த வகையிலும் ஆறுதல் அளிப்பதாக இல்லை.”
இருப்பினும், சர்வதேச அளவில் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’, எந்தவொரு இந்தியத் திரைப்படத்திற்கும் (வளைகுடா நாடுகளைத் தவிர்த்து) கிடைக்காத வகையில், மிகப்பெரிய அளவில் முதல் நாள் வசூல் சாதனையைப் படைத்தது.
குறிப்பாக, வளைகுடா நாடுகளைத் தவிர்த்து, சுமார் 2,200 திரையரங்குகள் மற்றும் 3,000 திரைகளில் திரையிடப்பட்ட இந்தப் படம், இன்றுவரை வெளிநாடுகளில் மிக அதிக அளவில் வெளியிடப்பட்ட ஒரு இந்தித் திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தியது.
இதன் வெளிநாட்டு வசூலும் முந்தைய பல இந்தியத் திரைப்படங்களின் சாதனைகளை முறியடித்தது.
பார்வையாளர்களிடம் இது பரவலான வரவேற்பைப் பெற்றாலும், வெளிநாட்டு ஊடகங்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதில் இப்படம் தவறிவிட்டதாகத் தெரிகிறது.
பட மூலாதாரம், Getty Images
கடுமையான விமர்சனங்கள் இருந்தபோதிலும், பிரிட்டன், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற மேற்கத்திய சந்தைகளில் ‘துரந்தர்’ மற்றும் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ படங்களின் வெற்றி எதிர்பாராத ஒன்றாக உள்ளது.
இந்த வெற்றி குறித்து லண்டன் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகத்தின் க்ரேயேட்டிவ் ரைட்டிங் அண்ட் இங்க்லூசிவிடி இன் ஆர்ட்ஸ் துறை பேராசிரியரான சன்னி சிங் கூறுகையில், “இது எனக்கு 1980-களின் அந்த ‘ஹைப்பர்-மாஸ்குலின்’ திரைப்படங்களை நினைவூட்டுகிறது, அங்கு கொடூரமான வன்முறையும் மோதலும் தான் முக்கிய ஈர்ப்பாக இருந்தன” என்றார்.
“இப்போது அந்த காலகட்டம் மீண்டும் வந்துள்ளது, ஆனால் ‘ஹைப்பர்-நேஷனலிசம்’ மற்றும் தீவிர தேசப்பற்று என்ற புதிய மாற்றத்துடன் வந்துள்ளது. இதன் முழு கட்டமைப்பும் ஆழமான ஆணாதிக்கத் தன்மையைக் கொண்டுள்ளது, இது இந்தியா மற்றும் பிரிட்டன் உட்பட உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களின் மனநிலையை ஈர்க்கிறது.
மேலும், இது அவர்களை ஒரு கற்பனை உலகிற்கு அழைத்துச் செல்கிறது, அங்கு அவர்கள் எதிரியின் மீது முழுமையான மற்றும் தன்னிச்சையான அதிகாரத்தைக் கொண்டுள்ளனர். எப்படியிருந்தாலும், இந்தியாவில் ‘பாகிஸ்தான்’ என்ற சொல் பல ஆண்டுகளாக ‘இஸ்லாமோஃபோபியா’ என்பதற்கு இணையானதாக மாறிவிட்டது. இந்த வெறுப்பைத் திரைப்படத்தின் கதையோடு சேர்த்து, அதை துரந்தரைப் போல பாகிஸ்தானை பின்னணியாகக் கொண்டு அமைத்தால், உங்களிடம் ஒரு சரியான பிரச்சாரக் கலவை தயாராகிவிடும்” என்று சன்னி சிங் குறிப்பிட்டுள்ளார்.
சலிப்பூட்டும் நான்கு மணி நேரப் படம்
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க ஆன்லைன் ஊடகமான ‘ஐஜிஎன்’ -க்காக கட்டுரை எழுதும் திரைப்பட விமர்சகர் சித்தாந்த் அத்லகா, ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ திரைப்படத்தை ‘வெளிப்படையான அரசியல் பிரச்சாரம்’ மற்றும் ‘இஸ்லாமோஃபோபிக்’ என்று குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்துள்ளார்.
இப்படத்தை “உளவு மற்றும் பழிவாங்கல் பற்றிய சலிப்பூட்டும் நான்கு மணிநேர காவியம்” என்று வர்ணிக்கும் அவர், “ஹம்சா ஒரு அரசியல் கைப்பாவையாக நடிக்கும்போது ஒரு விசித்திரமான முரண் வெளிப்படுகிறது. தனது சொந்த அதிகாரத்தை அதிகரிப்பதற்காக மட்டுமே எதிரி கும்பல்கள் மற்றும் இனக்குழுக்களிடையே தொடர்ந்து வெறுப்பைத் தூண்டும் அவரது விளையாட்டு, தற்செயலாக இந்தப் படத்தின் சொந்த இயந்திரமான ‘இந்துத்துவா பிரச்சாரத்தின்’ பிரதிபலிப்பாக மாறுகிறது” என்று எழுதியுள்ளார்.
“இந்த ‘ தி ரிவெஞ்ச்’ திரைப்படம் வெட்கமின்றி இஸ்லாமிய வெறுப்பில் மூழ்கியுள்ளது, இது படிப்படியாகத் தன் மீதான விமர்சனங்களின் அடையாளமாக மாறிவருவதைக்கூட அது கவனிக்கத் தவறிவிட்டது.”
ஐஜிஎன்-னின் விமர்சனம் படத்தின் தொழில்நுட்ப அம்சங்களையும் விமர்சித்துள்ளது.
” ‘தி ரிவெஞ்ச்’ திரைப்படம் கடைசி நிமிடத்தில் அவசர அவசரமாக முடிக்கப்பட்டுள்ளது, அது ஒவ்வொரு காட்சியிலும் தெளிவாகத் தெரிகிறது. ஒரு பெரிய, அதிக செலவில் எடுக்கப்பட்டுள்ள ஸ்டுடியோ தயாரிப்பில், ஒரு மணிநேர ஆக்ஷன் கிளைமாக்ஸின் போது சிதைந்த காட்சி மற்றும் ஒலி அமைப்பு இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆனால், ஏற்கனவே தயாராக இருக்கும் ஒரு கூட்டத்திடம் நீங்கள் பேசும்போது, உண்மையான கலைக்கு பெரிய மதிப்பில்லை. வெறுப்புத் தீயை மூட்டிவிட்டு, மக்கள் எதைக் கேட்க விரும்புகிறார்களோ அதைக் கொடுத்தால் போதுமானது”என்று அந்த விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “தயாரிப்பாளர்கள் ஒரு முழுமையான திரைப்படத்தை வழங்க வேண்டும் என்ற கண்ணியத்தைக் கொண்டிருந்திருக்க வேண்டும், ஆனால் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ படத்தின் முக்கிய நோக்கம், உணர்ச்சிகரமான வாக்காளர்களைத் தூண்டிவிடுவதாக இருக்கும்போது, அங்கு கண்ணியத்தை எதிர்பார்ப்பது வீணானது” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் இதன் எதிர்வினை என்ன?
பட மூலாதாரம், Jio Studio
சவுதி அரேபியா, கத்தார், குவைத், ஓமன் மற்றும் பஹ்ரைன் போன்ற வளைகுடா நாடுகளில் ‘துரந்தர் 2’ வெளியாகவில்லை என்றாலும், அதன் விமர்சனம் ஐக்கிய அரபு அமீரகத்தின் புகழ்பெற்ற ‘கல்ஃப் நியூஸ்’ இதழில் வெளியானது.
அதில் பத்திரிகையாளர் மஞ்சுஷா ராதாகிருஷ்ணன் எழுதுகையில், “இந்தியாவின் பணமதிப்பிழப்பு போன்ற உண்மையான நிகழ்வுகளைத் பயங்கரவாத நிதி தடுப்பு உத்தியுடன் இணைக்க முயற்சிக்கும் கதையின் திருப்பங்கள், மிகவும் செயற்கையாகத் தெரிகின்றன,” என்று குறிப்பிட்டுள்ளார்.
“சில நேரங்களில் இப்படம் பிரதமருக்குச் செலுத்தப்படும் நேரடி மரியாதையைப் போலத் தோன்றுகிறது. ஒரு பாகிஸ்தானிய பயங்கரவாதி தனது வீழ்ச்சிக்கு ஒரு ‘சாய்வாலா பிரதமர்’ தான் காரணம் என்று பழிசுமத்துவது போன்ற வசனங்கள் அதன் தீவிரத்தன்மையைக் குறைப்பதாகத் தெரிகிறது. இத்தகைய தருணங்கள் நுணுக்கங்களைப் புறக்கணிப்பதோடு, ஒட்டுமொத்த கதையின் தாக்கத்தையும் குறைக்கின்றன.” என்கிறார் மஞ்சுஷா.
அமெரிக்க ஆன்லைன் திரைப்பட தளமான ‘மூவிஸ் வி டெக்ஸ்டட் அபௌட்’ (Movies We Texted About) இதழில் எழுதிய சாரா மேன்வெல், இந்த முழு அனுபவத்தையும் ‘சோசியோபாடிக்’ ( சமூக விரோத மனநிலை கொண்டது) என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதுகையில், “படத்தில் காட்டப்படும் கொடூரமும் மோதலும் தேவையற்ற அளவு அதிகமாக உள்ளது. ஒரு வெளிப்படையான இனவெறி காட்சியில் ‘போனி எம்’மின் ‘ராஸ்புடின்’ பாடலைப் பயன்படுத்தியது கூட நகைச்சுவையாகத் தெரியவில்லை. இந்த முழு அனுபவமும் மனரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, சமூக விரோத மனநிலை கொண்டதாகவும் உள்ளது”என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், ‘கல்ச்சர் மிக்ஸ்’ இதழின் கார்லா ஹே, தனது விமர்சனத்தில் விகாஸ் நவ்லகாவின் அற்புதமான ஒளிப்பதிவை மட்டுமே பாராட்டியுள்ளார்.
ஆனால் படத்தின் வன்முறை மற்றும் ‘வெறுப்புமிக்க வசனங்களை’ கடுமையாக விமர்சித்துள்ள கார்லா, “உண்மையான வரலாற்று நிகழ்வுகளின் கற்பனை செய்யப்பட்ட, வெறித்தனமான மற்றும் அதீத வன்முறையான ஒரு வடிவத்தைக் காண்பிப்பதற்கான ஒரு காரணம் மட்டுமே இந்தப் படம்.
துரந்தர்: தி ரிவெஞ்ச் தன்னை ஒரு தேசபக்தி படமாக சித்தரிக்க முயல்கிறது, ஆனால் அது சித்தரிக்கும் விஷத்தன்மை கொண்ட மற்றும் கொடூரமான தேசியவாதம் ஊக்கமளிப்பதாக இல்லை, மாறாக நச்சுத்தன்மை கொண்டதாக உள்ளது,” என்று எழுதியுள்ளார்.
துரந்தர் படத்தை வெறும் பொழுதுபோக்கு மற்றும் வசூலை நோக்கமாகக் கொண்ட ஒரு வணிக ரீதியான ஸ்பை த்ரில்லராக மட்டும் பார்க்க முடியாதா?
இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் பேராசிரியர் சன்னி சிங், “துரந்தர் நிச்சயமாக தொழில்நுட்ப ரீதியாகச் சிறந்த ஒரு அதிரடித் திரைப்படம். ஆனால் இது ஹோம்லேண்ட் , ஜேம்ஸ் பாண்ட் மற்றும் மிஷன் இம்பாசிபிள் போன்ற படங்களில் காணப்படும் பல ஹாலிவுட் உத்திகளைப் பயன்படுத்துகிறது.
அதே ‘ஹைப்பர்-மேச்சோ’ (அதி-ஆண்மைத்தன்மை), ராணுவவாத சிந்தனை மற்றும் தீவிர தேசியவாத வன்முறை. பிரிட்டிஷ் பேரரசின் வீழ்ச்சிக்கு ஒரு எதிர்வினையாகவே இயன் பிளெமிங் ‘ஜேம்ஸ் பாண்ட்’ கதாபாத்திரத்தை உருவாக்கினார், இதன் மூலம் பிரிட்டிஷ் தேசியவாதத்தை இந்தப் பிரச்சாரத்தின் வழியே திருப்திப்படுத்த முடிந்தது” என்று குறிப்பிட்டார்.
மேலும், சன்னி சிங் தொடர்ந்து பேசுகையில், “உண்மையில், மசாலா த்ரில்லர்கள் என்ற போர்வையில் வரும் இதுபோன்ற திரைப்படங்கள் படிப்படியாக வெறுப்பைத் தூண்டுகின்றன.
காஷ்மீர் ஃபைல்ஸ் அந்த எல்லைகளைத் தாண்டியது தான் பிரச்னை, பின்னர் துரந்தர் வந்தது, இப்போது துரந்தர் 2 பிரசாரத்தின் எல்லைகளை இன்னும் அதிகமாக மீறுகிறது. ஒவ்வொரு புதிய படத்திலும் பிரசாரம் என்பது மிகவும் சாதாரணமாகவும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் மாறிவருகிறது”என்றார்.
பட மூலாதாரம், @AdityaDharFilms
முந்தைய படத்தின் (துரந்தர்) வசூல் மற்றும் ரசிகர்கள் அளித்த பெரும் வரவேற்பைக் கருத்தில் கொள்ளும்போது, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் ‘துரந்தர் 2’ (தி ரிவெஞ்ச்) படத்தின் வணிக ரீதியான வெற்றி கிட்டத்தட்ட உறுதியாக இருந்தது.
ஆனால், பெரும் பாராட்டுகளையும் மிகப்பெரிய வசூலையும் பெற்றிருந்தபோதிலும், ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ திரைப்படம், பொழுதுபோக்குக்கும் பிரச்சாரத்திற்கும் இடையே உள்ள எல்லை மங்கிவருவது குறித்த சில ஆழமான மற்றும் சங்கடமான கேள்விகளை விட்டுச்செல்கிறது என்பதை மேற்கத்திய நாடுகளிலிருந்து வரும் இந்த விமர்சனங்களும் எதிர்வினைகளும் உணர்த்துகின்றன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு