ஈரோடு: துரை வைகோவுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி தருவது தொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கடவுளின் பெயரால் ஒரு கட்சி மாநாடு நடத்துவது தவறானது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள், கடவுள் பெயரால் மாநாடு நடத்தியது இல்லை. முருகன் மாநாட்டுக்குப் பின்னால், பாஜக, ஆர்எஸ்எஸ், இந்துத்துவா சக்திகள் உள்ளன. இந்த மாநாடு மூலம் இந்து வாக்கு வங்கியை உருவாக்க முடியாது.
மதிமுகவுக்கு 8 எம்எல்ஏக்கள் கிடைத்தால் தேர்தல் ஆணைய அங்கீகாரம் கிடைக்கும். எனவே, திமுகவிடம் அதற்கேற்ப கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெறுவோம். தமிழகத்தில் கள் விற்பனை கடைகள் கூடாது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. திமுக எடுக்கும் முடிவை ஆதரிப்போம்.
திமுக கூட்டணி தொடர்பாக நயினார் நாகேந்திரன் பொறுப்பற்ற முறையில் பேசிக்கொண்டு இருக்கிறார். துரை வைகோவுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி தருவதாக எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. அப்படி இருந்தால் வெளிப்படையாக சொல்லி விடுவோம்.பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றியதால், மக்கள் மத்தியில் திமுகவுக்கு முன்பைவிட ஆதரவு அதிகரித்துள்ளது.
வலுவாக உள்ள திமுக கூட்டணி சுலபமாக வெற்றி பெறும். திமுக, மதிமுக ஆகியவை திராவிட இயக்கங்கள். அவர்களோடு விசிக, கம்யூனிஸ்ட்களை ஒப்பிட முடியாது. கம்யூனிஸ்டுகள் தினம் ஒரு கருத்து சொல்லலாம். பிறகு அதை மாற்றிச் சொல்லலாம்.
மக்கள் நலக் கூட்டணி? – தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கு கொண்டு வரவேண்டும். 2017 முதல் திமுக கூட்டணியில் இருக்கிறோம். கொள்கை அடிப்படையில் நாங்கள் சரியாக இருக்கிறோம். 2026 தேர்தலில் மீண்டும் மக்கள் நலக் கூட்டணி அமைய வாய்ப்பு கிடையாது. இவ்வாறு வைகோ கூறினார்.