தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் திருப்பணி மற்றும் புனரமைப்பு பணிகளில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நம்பிராஜன், சிவபாலன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கறிஞர் ஆணையர் மற்றும் சென்னை ஐஐடி குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது.
அதன்பேரில், உயர் நீதிமன்ற மதுரை கிளை சார்பில் அமைக்கப்பட்ட வழக்கறிஞர் ஆணையர் மூத்த வழக்கறிஞர் ஆனந்தவல்லி மற்றும் சென்னை ஐஐடி சார்பில் அனு சந்தானம், அருண் மேனன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தில் ஆய்வு செய்தனர்.
அப்போது அவர்கள், அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பல்வேறு கேள்விகளை முன் வைத்தனர். சுமார் 5 மணி நேரம் கோயில் வளாகத்தில் ஆய்வு செய்த அவர்கள், ஆதாரங்களை சேகரித்தனர். ஆய்வு செய்த விவரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.