தெலங்கானா மாநில அமைச்சர் கொண்டா சுரேகா, முன்னாள் அமைச்சர் கே.டி. ராமராவ் மீது வைத்துள்ள சர்ச்சையான குற்றச்சாட்டு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முந்தைய அரசில் அமைச்சராக இருந்த கே.டி.ஆர் சில திரைப்பட நட்சத்திரங்களின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்டதாகவும், அவர்களின் தனிப்பட்ட உரையாடலை ரெகார்ட் செய்து சம்பந்தப்பட்டவர்களை மிரட்டியதாகவும், இதனால் ஒரு குடும்பத்தில் விவாகரத்து ஏற்படுத்தியதாகவும் கே.டி.ஆர் மீது கொண்டா சுரேகா குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது இந்தக் கருத்து தெலங்கானா அரசியலிலும், திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுரேகாவின் கருத்துக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் அதிருப்தி மற்றும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகர் பிரகாஷ் ராஜ், திரைப்படங்களில் நடிக்கும் பெண்களை கேவலமாகப் பார்க்கிறார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டரீதியாக நடவடிக்கை எடுத்த கே.டி.ஆர்
சில நடிகைகள் திருமணம் செய்துகொண்டு திரையுலகத்தை விட்டு வெளியேற கே.டி.ஆர்.தான் காரணம் என்று சுரேகா குற்றம் சாட்டினார்.
கே.டி.ஆர் நடிகைகளின் வாழ்க்கையோடு விளையாடி `பிளாக்மெயில்’ செய்ததாக சுரேகா அவர்மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
சுரேகாவின் கருத்துக்கு கே.டி.ஆர் கண்டனம் தெரிவித்து அவருக்கு சட்டரீதியாக `நோட்டீஸ்’ அனுப்பியுள்ளார்.
‘தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்பு மற்றும் பிற விஷயங்கள் தொடர்பாக அமைச்சர் சுரேகா தெரிவித்த கருத்துகள் உண்மைக்குப் புறம்பானவை. என் கண்ணியத்தைக் கெடுக்கும் வகையில் பேசியுள்ளார். ஆதாரம் இல்லாமல் பொய்க் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
அவருடைய வார்த்தைகள் உண்மை என்று மக்கள் நம்ப வாய்ப்புள்ளது. எனவே 24 மணிநேரத்திற்குள் சுரேகா மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவதூறு வழக்கு தொடர்வேன், கிரிமினல் வழக்கும் போடுவேன்’ என்று கே.டி.ஆர். தெரிவித்துள்ளார்.
தனது கண்ணியத்தைக் கெடுக்கும் நோக்கத்தில் கொண்டா சுரேகா இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்ததாக கே.டி.ஆர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், சுரேகா தனது பெயரை அரசியல் நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதாகவும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
“ஒரு பெண் இன்னொரு பெண்ணின் பெயரையும், படத்தில் நடிக்கும் நடிகர்களின் பெயரையும் பயன்படுத்தி அவர்களின் புகழுக்கும் ஆளுமைக்கும் குந்தகம் விளைவிப்பது வருந்தத்தக்கது. கொண்டா சுரேகா தனது அமைச்சர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்” என்று அவர் கூறியுள்ளார்.
கண்டனம் தெரிவித்த நடிகர் நாகார்ஜுனா, நாக சைதன்யா, சமந்தா, அமலா
டோலிவுட் பிரபலங்களான ஜூனியர் என்டிஆர், நானி, நாகார்ஜுனா அமலா, நாக சைதன்யா, அகில், சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், ராம் கோபால் வர்மா மற்றும் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா ஆகியோர் கொண்டா சுரேகாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்தனர்.
அமைச்சர் கொண்டா சுரேகாவின் கருத்துக்கு நடிகர் நாகார்ஜுனா கண்டனம் தெரிவித்துள்ளார்.
“அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் திரையுலக நட்சத்திரங்களின் பெயர்களை உங்கள் அரசியல் எதிரிகளை விமர்சிக்கப் பயன்படுத்த வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டார்.
பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண் என்ற வகையில், தனது கருத்துகளை உடனடியாக அவர் திரும்பப் பெற வேண்டும் என்றும் நாகார்ஜுனா கோரியுள்ளார்.
சுரேகாவின் கருத்தை நாக சைதன்யா மறுத்துள்ளார். நாகார்ஜுனாவின் ட்வீட் பதிவை அவர் ரீட்வீட் செய்து பதிலளித்துள்ளார். மேலும் நாகார்ஜுனாவின் மனைவி அமலாவும் ‘எக்ஸ்’ பதிவில் தனது எதிர்வினையைப் பதிவு செய்துள்ளார்.
“ராகுல் காந்தி உண்மையில் மக்கள் அனைவர் மீதும் மரியாதை வைத்திருந்தால், கட்சியின் பெண் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தப் பெண் தலைவர் அவரின் கருத்துகளைத் திரும்பப் பெற்று, எங்கள் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்று அமலா குறிப்பிட்டிருக்கிறார்.
சமந்தாவின் முன்னாள் கணவர் நடிகர் நாக சைதன்யா இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அமைச்சர் கொண்டா சுரேகாவின் கருத்து ஆதாரமற்றது. பிரபலங்கள் குறித்து இவ்வாறு கருத்து சொல்வது ஏற்புடையது அல்ல என்றும் கூறியுள்ளார்.
“எங்கள் வாழ்க்கை இலக்கு காரணமாக நானும் எனது முன்னாள் மனைவியும் பிரிந்து செல்ல பரஸ்பர முடிவு எடுக்கப்பட்டது. நாங்கள் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் வாழ்க்கையில் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதற்காக அமைதியுடன் எடுக்கப்பட்ட முடிவு. இந்த விஷயத்தில் பல்வேறு ஆதாரமற்ற கருத்துகளைப் பலர் கூறி வந்தனர். என் முன்னாள் மனைவி மற்றும் எனது குடும்பத்தினர் மீதான ஆழ்ந்த மரியாதை காரணமாக நான் இதையெல்லாம் அமைதியாக கடந்தேன்” என்று நாக சைதன்யா பதிவிட்டுள்ளார்.
மேலும், “இன்று, அமைச்சர் கொண்டா சுரேகாவின் கூற்று பொய்யானது மட்டுமல்ல, அது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகளை மீடியா தலைப்புச் செய்திகளுக்காகப் பயன்படுத்திக் கொள்வதும், சுரண்டுவதும் வெட்கக்கேடானது.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கொண்டா சுரேகாவின் கருத்துக்கு நடிகை சமந்தாவும் எதிர்வினையாற்றியுள்ளார்.
“சினிமா துறையில் பணியாற்றுவதைப் பெருமையாகக் கருதுகிறேன். அதை நாசப்படுத்த வேண்டாம்” என்றும் தனிநபர்களின் சுதந்திரத்தை மதிக்குமாறும் கொண்டா சுரேகாவிடம் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், “விவாகரத்து என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம், அது குறித்த ஊகங்களைப் பரப்புவதை நிறுத்த வேண்டும். எங்கள் விவாகரத்து பரஸ்பர சம்மதத்துடன் நடந்தது. இதில் அரசியல் சதி எதுவும் இல்லை’’ என்றும் சமந்தா கூறினார்.
தான் அரசியலில் இருந்து எப்போதும் ஒதுங்கி இருப்பதாகவும், அரசியல் நோக்கங்களுக்காகத் தனது பெயர் உச்சரிக்கப்படுவதை விரும்பவில்லை என்றும் சமந்தா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
சர்ச்சை எப்படி தொடங்கியது?
சமீபத்தில் மேடக் மாவட்டத்திற்கு அமைச்சர் கொண்டா சுரேகா வருகை தந்ததில் இருந்தே சர்ச்சை தொடங்கிவிட்டது. பாஜக தலைவரும், மேடக் எம்பியுமான ரகுநந்தன் ராவ், அமைச்சர் கொண்டா சுரேகா ஆகியோர் சமீபத்தில் மேடக் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர்.
அப்போது, கைத்தறி தொழிலாளர்களின் பிரச்னைகளை, எம்.பி., ரகுநந்தன் ராவ், அமைச்சர் சுரேகாவிடம் விளக்கி, அவரது கழுத்தில் கைத்தறி நெசவாளர்கள் செய்த மாலையை மரியாதை நிமித்தமாக அணிவித்தார்.
சிலர் சமூக ஊடகங்களில் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து, `ட்ரோல்’ செய்தனர். மேலும் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பகிர்ந்தனர். அப்படிச் செய்வர்கள் பி.ஆர்.எஸ். கட்சி தலைவர்களான கே.டி.ஆர் மற்றும் ஹரிஷ் ராவ் ஆகியோரின் படங்களை சமூக ஊடக கணக்கின் முகப்புப் படமாக வைத்திருந்தனர். எனவே அந்த இரு தலைவர்களின் தூண்டுதலின் பேரில் அவர்கள் சுரேகாவை ட்ரோல் செய்வதாக அவர் குற்றம் சாட்டினார்.
பி.ஆர்.எஸ். கட்சியினர் தன்னைக் கலங்கப்படுத்தி, மனரீதியாக துன்புறுத்துவதாக ஊடக சந்திப்பில் சுரேகா கண்ணீர் விட்டார்.
சமூக ஊடகங்களில் பெண் தலைவர்களை ட்ரோல் செய்பவர்களை அந்தக் கட்சித் தலைமையால் கட்டுப்படுத்த முடியவில்லையா என்று கேட்டார்.
பி.ஆர்.எஸ். கட்சியினர் தன்னை ட்ரோல் செய்வதாகக் குற்றம் சாட்டிய கொண்டா சுரேகா, கே.டி.ஆர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரினார்.
மேலும் கொண்டா சுரேகா ட்ரோல் செய்யப்பட்டதற்கு ரகுநந்தன் ராவும் கருத்து தெரிவித்துள்ளார்.
“ஒரு தம்பியாக கொண்டா சுரேகாவுக்கு துணை நிற்பேன்” என்றார்.
சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
மறுபுறம், சுரேகாவை பிஆர்எஸ் கட்சியினர் ட்ரோல் செய்ததை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை (செப்டம்பர் 30) தெலங்கானா பவன் முன்பாகப் போராட்டம் நடத்த முயன்றனர்.
செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 1) அவர்கள் கே.டி.ஆரின் வாகனத்தைத் தடுக்க முயன்றனர் மற்றும் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். கொண்டா சுரேகாவிடம் கேடிஆர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதனிடையே கொண்டா சுரேகா மீதான ட்ரோல்களுக்கு பிஆர்எஸ் தலைவர் ஹரிஷ் ராவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“பெண்களை மதிக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. கொண்ட சுரேகாவுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறேன்” என்று ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சமூக ஊடகத்தில் இதுபோன்ற தவறான நடத்தைகளை அவர் கடுமையாகக் கண்டித்துள்ளார், மேலும் சமூக ஊடகங்களிலும் மக்கள் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்றும் கோரினார்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த சிரஞ்சீவி, “மாண்புமிகு பெண் அமைச்சரின் இழிவான கருத்துகளால் நான் மிகவும் வருத்தப்படுகிறேன். சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் பற்றி பொய்யான கருத்துகளைக் கூறி மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் குறிவைக்கப்படுவது வெட்கக்கேடானது.
திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் இதுபோன்ற வாய்மொழி தாக்குதல்களை அடிக்கடி எதிர்கொள்கிறார்கள். அரசியல் சாராதவர்கள், குறிப்பாக பெண்கள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அரசியல்வாதிகள் சுமத்த வேண்டாம்,” என்று கண்டித்துள்ளார்.
“முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதாரமற்ற கருத்துகளைக் கூறுவது ஏற்புடையதல்ல” என நடிகையும், தமிழக பாஜக பிரதிநிதியுமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
“கொண்டா சுரேகா அவர்களே, உங்களுக்குள் சில மதிப்புகள் இருப்பதாக நான் நம்புகிறேன். அவை தற்போது ஜன்னலுக்கு வெளியே பறந்துவிட்டதா? பொறுப்பான பதவியில் இருப்பவர் நான் சார்ந்திருக்கும் தொழில் குறித்து ஆதாரமற்ற, கீழ்த்தரமான அறிக்கைகளை வெளியிடக்கூடாது,” என்று கண்டித்துள்ளார்.
“சினிமா துறையினர் இனி இதுபோன்ற அவதூறுகளைக் கேட்டு, வாய்மூடி இருக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு, ஒட்டுமொத்த திரையுலகத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று குஷ்பு காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.
மறுப்பு தெரிவித்த கே.டி.ஆர்
கொண்டா சுரேகா செய்தியாளர் சந்திப்பில் கண்ணீருடன் பேசியது பற்றி கே.டி.ஆர் செய்தியாளர்களிடம் பேசினார்.
“எங்கள் கட்சியினர் யாரும் கொண்டா சுரேகாவை ட்ரோல் செய்யவில்லை’’ என்றார். கே.டி.ஆர் இவ்வாறு கூறியதை அடுத்து சுரேகா மீண்டும் இந்த சர்ச்சை குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறிய கருத்துகள்தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமந்தாவிடம் மன்னிப்பு கேட்ட கொண்டா சுரேகா
கொண்டா சுரேகாவின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திரையுலகினர் பலர் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே சமந்தாவை குறிப்பிட்டு, தனது கருத்துகளைத் திரும்பப் பெறுவதாக சுரேகா ட்வீட் செய்துள்ளார்.
“எனது கருத்துகள் ஓர் அரசியல் தலைவர் பெண்களை இழிவுபடுத்துவதைக் கேள்வி கேட்பதற்காகவே தவிர, உங்களைக் காயப்படுத்துவதற்காக அல்ல.
நீங்கள் தன்னம்பிக்கையுடன் வளர்ந்த விதத்தைப் பார்த்து நான் ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். எனது கருத்துகளால் நீங்களோ அல்லது உங்கள் ரசிகர்களோ புண்பட்டிருந்தால், எனது கருத்துகளை நிபந்தனையின்றி வாபஸ் பெறுகிறேன்” என்று சுரேகா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.