தெலங்கானா மாநிலத்தில் உள்ள அம்ராபாத்தில் கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்த சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் பல தொழிலாளர்கள் காயமடைத்துள்ளனர். 8 பேர் சுரங்கத்திற்கு உள்ளே சிக்கிக் கொண்டனர்.
கட்டுமானப் பணியின்போது திடீரென்று ஏற்பட்ட நீர் கசிவின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது என்று சம்பவ இடத்தில் இருந்தவர்கள் கூறுகின்றனர்.
8 தொழிலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளதாக அம்ராபாத் மண்டல தாசில்தார் மாருதி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
“எட்டு பேர் உள்ளே சிக்கியுள்ளதாக தகவல்கள் உள்ளன. அவர்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உள்ளே சிக்கியவர்களைப் பற்றிய விவரங்கள் இன்னும் தெரியவரவில்லை”, என்றும் அவர் கூறினார்.
சுரங்கத்தின் 14வது கிலோமீட்டரில் அதன் மேற்பகுதி இடிந்து விழுந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியின் அலுவலகம் இன்று (பிப்ரவரி 22) எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளது.
“சுரங்கத்தின் மேற்ப்பகுதி விழுந்து பலர் காயமடைந்ததாக தகவல் கிடைத்ததும் மாவட்ட ஆட்சியர், காவல்துறை எஸ்.பி., தீயணைப்புத் துறை மற்றும் நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார் “, என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த உத்தரவைப் பெற்றபிறகு, நீர்ப்பாசனத் துறை அமைச்சர் மற்றும் பிற அதிகாரிகள் சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளதாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் என்ன?
இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தெலங்கானா அமைச்சர் கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி விளக்கினார்.
“இந்த சுரங்கத்தின் 14வது கிலோமீட்டர் பகுதியில் (டோமலபெண்டா கிராமம் அருகே) தண்ணீரால் ஊறியிருந்த கான்கிரீட் இடித்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது,” என்று அவர் கூறினார்.
பட மூலாதாரம், PTI
இந்த விபத்தின் முழு தாக்கத்தைப் பற்றி தெரிந்துகொள்ள கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனத்தின் ஒரு குழு இந்த சுரங்கத்திற்குள் சென்றுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
இந்த SLBC சுரங்கம், ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் திட்டத்தின் ஒரு பகுதியாகும். நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள டோமலபெண்டா கிராமத்தில் சுரங்கம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த சுரங்கம் வழியாக, ஸ்ரீசைலம் திட்டத்திலிருந்து கிருஷ்ணா நதியின் நீர், நல்கொண்டா மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
30 டிரில்லியன் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இந்த சுரங்கம், நாள் ஒன்றுக்கு 4,000 கனஅடி நீரை நல்கொண்டா மாவட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்று தெலுங்கானா நீர்ப்பாசனத் துறை அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி கடந்த ஆண்டு கூறியிருந்தார்.