தெலங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள பாசமிலரம் தொழிற்பேட்டையில் ஒரு உலை வெடித்ததைத் தொடர்ந்து அங்குப் பெரிய அளவிலான தீ ஏற்பட்டது.
அங்குள்ள சிகாச்சி கெமிக்கல்ஸ் தொழிற்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று மாநில சுகாதார அமைச்சர் தாமோதர் ராஜநரசிம்ஹா தெரிவித்தார்.
இந்த வெடிப்பு பெரும் தீயை ஏற்படுத்தியது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.
பட மூலாதாரம், UGC
படக்குறிப்பு, வெடிப்பின் சக்தியால் அங்கிருந்த தொழிலாளர்கள் வெகுதூரம் தூக்கி வீசப்பட்டதாக சில தொழிலாளர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.
இடிந்து விழுந்த கட்டடம்
வெடிப்பின் தீவிரத்தால் அங்கிருந்த தொழிலாளர்கள் வெகுதூரம் தூக்கி வீசப்பட்டதாக சில தொழிலாளர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
உலை வெடிப்பு மற்றும் பெரும் தீ விபத்து காரணமாக, அந்தப் பகுதி முழுவதும் ரசாயன வாசனையும் புகையும் பரவியது.
இதனால் அருகிலுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் சிரமங்களை எதிர்கொள்வதாகக் கூறுகின்றனர்.
பாசமிலரம் தொழிற்பேட்டையில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்து குறித்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.
விபத்தில் சிக்கிய தொழிலாளர்களைக் காப்பாற்றத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும், காயமடைந்தவர்களுக்குச் சிறந்த மருத்துவச் சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்