சென்னை: வெற்றி, தோல்வியை மக்கள் தான் தீர்மானிப்பார்கள் என்றும், தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளை பெற்றிருப்பதே என் வளர்ச்சி என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நீதிமன்றம், தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ, என்ஐஏ போன்றவை எல்லாம் தன்னாட்சி அமைப்புகள் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இவை அதிகாரத்தில் இருப்பவர்களின் 5 விரல்களாக மட்டுமே செயல்பட்டு வருகின்றன.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நான் ஒற்றையாக நின்று 8.22 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறேன். எனில் நான் வளர்த்திருக்கின்றேன் இல்லையா, இந்திய அளவில் நான் ஆட்டத்திலேயே இல்லை. ஆனால் என்னையும் தேடி வாக்கு செலுத்தி, என்னை அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற்றியுள்ளனர்.
தேர்தலில் 1.1 வாக்கு சதவீதத்தில் இருந்து 8.22 சதவீத வாக்குகளை பெற்றிருப்பது என் வளர்ச்சியாகும்.
இதுபோன்று வளர்ந்து வந்த கட்சி தமிழகத்தில் கிடையாது. தவெக தலைவர் விஜய் அரசியலுக்கு வருவதால், எனது வாக்குகள் குறைந்துவிடும் என்கின்றனர். ஏன் தெரியுமா, அப்படியாவது கட்சியை கலைத்துவிட்டு, ஏதோ ஒரு கட்சியில் கூட்டணி சேர்ந்துவிடுவார்கள் என்று தான். செத்தாலும் நான் தனியாக தான் செல்வேன். தனித்து நின்றாலும் தனித்துவத்தோடு நிற்கவேண்டும். என் தனித்துவத்தை இழக்கமாட்டேன். என் வெற்றியையும், தோல்வியையும் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.