சென்னை: சென்னையில் மார்ச் 22-ம் தேதி நடைபெறும் தொகுதி மறு சீரமைப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா சார்பில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தென்மாநில எம்.பி.க்கள் குழுவை அமைக்க முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து, மார்ச் 22-ம் தேதி சென்னையில் நடைபெறும் முதல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மேற்கு வங்கம், பஞ்சாப், ஒடிசா மாநில முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள், இதர கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
அதைத்தொடர்ந்து, அமைச்சர்கள், எம்.பி.க்கள் அடங்கிய குழுவினர், அந்தந்த மாநிலங்களுக்குச் சென்று, முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள் அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து முதல்வரின் கடிதத்தை அளித்து, அழைப்பு விடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், வனத்துறை அமைச்சர் பொன்முடி, மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா ஆகியோர் நேற்று முன்தினம் பெங்களூரு சென்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவையும், துணை முதல்வர் டி.கே.சிவகுமாரையும் தனித்தனியாக சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, ‘‘நான் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதால் 22-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை. என் சார்பில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் அந்த கூட்டத்தில் பங்கேற்பார் என முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளேன்’’ என தெரிவித்தார்.
இதற்கிடையே, தமிழக அமைச்சர் கே.என்.நேரு, கனிமொழி,எம்.பி. தலைமையிலான திமுக குழுவினர் நேற்று ஹைதராபாத் சென்று, தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியைச் சந்தித்து அழைப்பு விடுத்தனர். அப்போது செய்தியாளர்களிடம் ரேவந்த் ரெட்டி பேசும்போது, ‘‘நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பால் தெற்கு மாநிலங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் எனும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூற்றை ஆதரிக்கிறேன்.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி மேலிடத்தில் பேசி, சென்னையில் நடத்தப்படும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பேன்’’ என தெரிவித்தார்.
இதுதவிர, கேரளா காங்கிரஸின் ஜோஸ் கே மாணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா ஆகியோரிடம் முதல்வரின் அழைப்புக் கடிதத்தை, திமுக எம்.பி கனிமொழி என்.வி.என்.சோமு வழங்கினார்.
மேலும், முதல்வரின் அழைப்பை ஏற்று, சிரோமணி அகாலிதளம் கட்சி சார்பில், அக்கட்சியின் தலைவர் சர்தார் பல்விந்தர் சிங் புந்தர் மற்றும் செயலாளர் தல்ஜித் சிங் சீமா ஆகியோர் பங்கேற்க உள்ளதாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.