• Thu. Feb 19th, 2026

24×7 Live News

Apdin News

தோல்வியடைந்த இராணுவ ஆட்சி முயற்சி: தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆயுள் தண்டனை!

Byadmin

Feb 19, 2026


தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோல், 2024 டிசெம்பரில் மேற்கொண்ட தோல்வியடைந்த இராணுவ ஆட்சி முயற்சி மற்றும் கிளர்ச்சி தொடர்பான வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவருக்கு நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

65 வயதான யூன் பிறப்பித்த அவசரகால இராணுவ ஆட்சி உத்தரவு வெறும் 6 மணி நேரம் மட்டுமே நீடித்தாலும், அது நாட்டின் ஜனநாயக அமைப்பை கடுமையாக உலுக்கியது. இந்த நடவடிக்கை அரசாங்க செயல்பாடுகளை தடை செய்ததுடன், கடந்த தேர்தலில் அவரது கட்சி பெரும் தோல்வியை சந்திக்கவும் முக்கிய காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இதே இராணுவ ஆட்சி உத்தரவு தொடர்பான மற்றொரு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் யூன், தற்போது கிளர்ச்சியைத் திட்டமிட்டதற்காக இந்த கடுமையான தீர்ப்பை எதிர்கொண்டுள்ளார். மேலும், அவர் மீது இன்னும் இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நீதிமன்றத்தில் தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது யூன் எந்தவித உணர்ச்சி வெளிப்பாடுகளும் இல்லாமல் அமைதியாக இருந்தார். ஆனால், நீதிமன்றத்திற்கு வெளியே கூடியிருந்த ஆயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள், தீர்ப்பைக் கேட்டு அதிர்ச்சியடைந்து, “கொரியா சீர்குலைந்துவிட்டது” என்று கோஷமிட்டனர்.

தன்னுடைய இராணுவ ஆட்சி முயற்சி என்பது எதிர்க்கட்சியின் தவறுகளை வெளிச்சமிட்டுக் காட்டுவதற்கான ஒரு தற்காலிக நடவடிக்கை மட்டுமே என்று யூன் வாதிட்டார். இருப்பினும், தென் கொரியாவின் ஜனநாயக அடித்தளத்தையே அவர் சிதைத்துள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி, அந்த வாதத்தை நிராகரித்து இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து யூன் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதால், வழக்கு உச்ச நீதிமன்றம் வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் குழப்பமும் இந்த நீதிமன்றத் தீர்ப்பும், தென் கொரிய மக்களை இருவேறு துருவங்களாகப் பிரித்து, நாட்டை ஆழ்ந்த பிளவு நிலைக்குத் தள்ளியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

By admin