• Fri. Feb 20th, 2026

24×7 Live News

Apdin News

நடிகர் கயல் வின்சென்ட் நடிக்கும் ‘அந்தோனி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

Byadmin

Feb 20, 2026


கயல் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் வின்சென்ட் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘அந்தோனி’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர்கள் சுகிர்தன் கிறிஸ்துராஜா = ஜெனோசன் ராஜேஷ்வர்  இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘அந்தோனி’ எனும் திரைப்படத்தில் கயல் வின்சென்ட், டிஜே பானு, நிழல்கள் ரவி, அருள்தாஸ், சுதர்சன், ஷாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரிஷி செல்வம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இலங்கையின் வாழ்வியல் பின்னணியில்  கடலோர காதல் காவியமாக உருவாகி இருக்கும் இப்படத்தை ஓசை பிலிம்ஸ்   சார்பில் தயாரிப்பாளர்கள் கலைவளரி சகா.  ரமணதாஸ், சுகந்தினி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

Beaches & Islands

மார்ச் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இத்திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட  வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் திருமதி அகிலா பாலுமகேந்திரா, இயக்குநர்கள் சீனுராமசாமி, லெனின் பாரதி, ‘உலக சினிமா’ பாஸ்கரன் ஆகியோர் சிறப்பு அதிதியாக பங்குபற்றினர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ரமணதாஸ் பேசுகையில், ” இலங்கை என்கிற நாட்டிலிருந்து உலகத் தரத்திற்கு ஒரு படம் கொடுக்க வேண்டும் என்பது நீண்ட காலம் ஏக்கமாக இருந்தது.சின்னச் சின்ன படைப்புகளைச் செய்து கொண்டிருந்தோம்.அன்புத் தம்பி சுகிர்தனின் கதையைக் கேட்ட போது அந்தப் படத்தை எடுத்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்தோம்.பல  தமிழ் நாட்டு சினிமாவைப் பார்த்தே நாங்கள் வளர்ந்து வந்திருக்கிறோம். இப்படி ரத்தத்திலேயே கடத்தப்பட்ட சினிமா தான் தமிழ்நாட்டு சினிமா .உலக தரத்திற்கு ஒரு படம் எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். தம்பி சுகிர்தன்  ‘மழைக்கால இரவுகள்’ என்ற குறும்படத்தைக் காட்டினார்.

அதைப் பார்த்து இந்தப் படத்தைத் தயாரித்து இருக்கிறோம். ஈழத்திலிருந்து பெரும் பொருட் செலவிலே வருகிற படம் என்று இதைக் கூறலாம்.தமிழ்நாடு என்பது எங்கள் ரத்தத்தோடும் சதையோடும் கலந்து இருப்பதால் தமிழ்நாட்டு மக்கள் , எங்கள் கதைகளை எங்கள் ஜன்னல் வழியாகப் பார்க்காமல் வீட்டுக்குள் வந்து பார்க்க வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பமாக இருக்கிறது. இப்படம் உங்களது சக உறவுகள் எப்படிப் புது இடத்தில் வாழ்கிறார்கள் என்பதைப் பார்ப்பதாகவே இருக்கும்.

இந்தப் படத்திற்கு முதலீட்டாளர்களாகப் லண்டன்,சுவிஸ், பிரான்ஸ், நார்வே,இலங்கை போன்று பல்வேறு நாடுகளில் இருந்து எங்களுக்கு உதவி இருக்கிறார்கள்.இவ்வளவு பேர் சேர்ந்தா இந்தப் படத்தை எடுத்தீர்கள் என்று உங்களுக்கு வியப்பாக இருக்கும். போன வருடம் மார்ச் மாதம் 5 ஆம் திகதி  ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படம், இப்போது தமிழ், மலையாளம், சிங்களம் என மூன்று மொழிகளில் தயாராகி இருக்கிறது.

இது பிரபஞ்சம் தந்திருக்கும் படம் .இதற்கு இளையராஜா அவர்கள் இசையமைத்திருப்பதற்கு அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்திற்கு அவரால்தான் இதற்கான இசையைக் கொடுக்க முடியும். ஆமாம் இளையராஜா அவர்கள் இதற்குள் வந்த பிறகு இது உலக சினிமாவிற்கான பயணத்தில் ஒரு கல் எடுத்து வைத்த உணர்வைத் தருகிறது .இதில் தமிழகம் மட்டுமல்ல இலங்கை மட்டுமல்ல ஐரோப்பிய நாட்டுக் கலைஞர்களும்  பங்கேற்று நடித்து இருக்கிறார்கள் .அந்த அளவில் இது ஒரு பிரபஞ்சத்துக்கான படம் போல் அமைந்திருக்கிறது “என்றார்.

இயக்குநர்  ஜெனோசன் ராஜேஷ்வர் பேசுகையில்,” நான் இங்கே இருப்பதை  உணர்வு பூர்வமாக நினைக்கிறேன்.நான் பல ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதே அரங்கில் கடைசி வரிசையில் நின்று கொண்டிருந்த அனுபவம் கொண்டவன் நான். தயாரிப்பாளர் முதலீடு செய்து உதவி கொண்டிருக்கிறார் என்றால் இந்த பிரபஞ்சம் கண்ணுக்குத் தெரியாமல் எவ்வளவோ உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறது.சுகிர்தன் எடுத்த ‘மழைக்கால இரவுகள்’  குறும்படம் தயாரிப்பாளருக்குப் பிடித்துப் போய் இந்தப் படம் உருவாகி இருக்கிறது.இந்தப் படத்திற்காக பல அண்ணன்கள் தங்களை அறியாமலேயே உதவிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.கமெராவை சொந்தமாக வாங்கிக் கொண்டு போய்தான் இலங்கையில் படப்பிடிப்பு நடத்தினோம். நாங்கள் நினைத்தபடியே படத்தை எடுத்திருக்கிறோம்.

வழக்கமான படமாக இல்லாமல் ஒரு நல்ல படத்தை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதை எடுத்திருக்கிறோம். இது ஒரு கடலோரக் காதல் காவியம். இது  இலங்கை மண் சார்ந்த  ஒரு காதல் கதை.அனைத்து சமூகத்தினரும் பார்க்க வேண்டும்,  ஆதரிக்க வேண்டும். அனைவரும் ஊக்கமளித்து வெற்றி பெற வைக்க வேண்டும்” என்றார்.

இயக்குநர் சுகிர்தன் கிறிஸ்துராஜா பேசுகையில், “காதலும் கடலும் எப்போது பார்த்தாலும் சலிக்காது என்பார்கள். எங்கள் ஊரில் உள்ள காதலையும், கடலையும் இந்தப் படத்தில் காட்டி இருக்கிறோம். இந்தப் படம் எப்படி ஒரு அனுபவமாக இருக்கும் என்றால், காசு செலவழித்து இலங்கை வரத் தேவையில்லை. இந்த படத்திற்கு ஒரு டிக்கெட் எடுங்கள் ,யாழ்ப்பாணம் நகரத்தில் இறங்கி அழகான கிராமத்தில் ஒரு பஸ்ஸில் போகும்போது இளையராஜா பாடல்களை கேட்டுக் கொண்டு காற்று வீசும் ஜன்னல் ஓரம் அமர்ந்து இருக்கும்போது ஏற்படும் உணர்வை இந்தப் படம் கொடுக்கும்’ என்றார்.

By admin