சென்னை: படத்தில் நடிப்பதற்காக பெற்ற முன்பணத்தை திரும்பி தரக்கோரிய வழக்கில், ரூ.5.90 கோடி உத்தரவாதத்தை தாக்கல் செய்ய நடிகர் ரவி மோகனுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
படத்தில் நடிப்பதற்காக பெற்ற 6 கோடி ரூபாய் முன்பணத்தை திரும்பத் தர நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிடக் கோரி பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதேபோல, கொடுத்த கால்ஷீட்டில் படத்தை தயாரிக்காமல் தமக்கு இழப்பு ஏற்படுத்தியதாக கூறி 9 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு உத்தரவிடக்கோரி நடிகர் ரவி மோகனும் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், 5 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கான உத்தரவாதத்தை தாக்கல் செய்ய நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, நடிகர் ரவி மோகன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ரவி மோகன் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.கார்த்திகை பாலன் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் ஹேமந்த் சந்தன்கவுடர் அமர்வு, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து, வழக்கை நடுவர் விசாரணைக்கு அனுப்பி, நடுவராக உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சத்திய நாராயணனை நியமித்து உத்தரவிட்டனர்.