0
இந்திய மதிப்பில் பத்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாராகும் தமிழ் திரைப்படங்களில் கதையின் நாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டு, வணிக ரீதியான வெற்றியை வழங்கி வரும் நடிகர்கள் விமல் – நட்டி நட்ராஜ் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் ‘வடம் ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் கேந்திரன். வி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வடம்’ படத்தில் விமல், நட்டி நட்ராஜ், சனஸ்கா ஸ்ரீ, முனிஸ்காந்த், பால சரவணன், ‘ஆடுகளம்’நரேன், மதுசூதன் ராவ், சரவணன் சக்தி, மூர்த்தி, ஜெகன், தீபா, இந்துமதி மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். தென் தமிழகத்தில் நடைபெறும் வட மஞ்சு விரட்டு எனும் கிராமிய வீர விளையாட்டின் பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர் ராஜசேகர் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் மார்ச் மாதம் ஆறாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக் குழுவினர் பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் படத்தைப் பற்றி நாயகன் விமல் பேசுகையில்,” வடம்- நான்கு ஐந்து கதைகள் கொண்ட கொமர்சல் அம்சங்கள் கொண்ட திரைப்படம். கதை சொல்லும் போதும்… படப்பிடிப்பு நடந்த போதும்.. படத்தின் பணிகள் நடைபெற்ற போதும்… இயக்குநர் மீது எமக்கு முழு நம்பிக்கை ஏற்படவில்லை. ஆனால் இப்படத்தை அண்மையில் தான் பார்த்தேன். அதன் பிறகு தான் முழு நம்பிக்கையும், திருப்தியும் ஏற்பட்டது. இந்தப் படத்தை அனைவரும் படமாளிகையில் பார்த்து ரசித்து கொண்டாடுவீர்கள்” என்றார்.