2
கடந்த ஆண்டில் ‘ராஜ புத்திரன்’, ‘முதல் பக்கம் ‘என இரண்டு சிறிய முதலீட்டு திரைப்படங்களில் நடித்து வணிக ரீதியான வெற்றியை வழங்கிய நடிகர் வெற்றி கதையின் நாயகனாக நடித்து வரும் ‘லஷ்மி காந்தன் கொலை வழக்கு’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.
இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லஷ்மி காந்தன் கொலை வழக்கு’ எனும் திரைப்படத்தில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா, லிசி அண்டனி, சரவணன், மாறன், இளவரசு, கவிதா பாரதி, சுப. வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம். வி. பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார்.
உண்மை சம்பவத்தை தழுவி கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 2 எம் சினிமாஸ் மற்றும் டி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. வி. சபரீஷ் மற்றும் தயாள் பத்மநாபன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது என்றும், தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும், விரைவில் இப்படத்தின் டீசர் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.