• Wed. Feb 25th, 2026

24×7 Live News

Apdin News

நல்லகண்ணு: சிறு வயதில் காங்கிரசில் பணியாற்றிய இவர் கம்யூனிஸ்டானது எப்படி? ஒரு வரலாற்றுப் பார்வை

Byadmin

Feb 25, 2026


ஆர் நல்லகண்ணு காலமானார்

பட மூலாதாரம், HANDOUT

தமிழக இடதுசாரி இயக்கத்தில் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே தீவிரமாகச் செயல்பட்ட தலைவர்களில் ஆர். நல்லகண்ணுவும் ஒருவர். சுதந்திரப் போராட்டத்தில் தன் அரசியல் வாழ்வைத் துவங்கிய அவர், பிறகு சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம், முதலாளித்துவ ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம், பண்ணையடிமை முறைக்கு எதிரான போராட்டம், சூழல் சுரண்டலுக்கு எதிரான போராட்டம் என வாழ்நாள் முழுவதையும் போராட்டங்களிலேயே கழித்தார். மக்களுக்காகப் போராடி, ஒன்பது ஆண்டுகள் சிறையில் கழித்த அவர், ஒரு நாள்கூட, அதிகாரத்தில் இருந்ததில்லை.

‘ஆர்.என்.கே. தோழர்’ அல்லது ‘தோழர் ஆர்.என்.கே’ என கட்சியினரால் மிகுந்த உள்ளன்புடன் அழைக்கப்பட்ட ஆர். நல்லகண்ணுவின் மறைவு, தமிழ்நாட்டு அரசியலில் ஒரு யுகத்தின் முடிவைக் குறிக்கிறது. இந்தியாவின் விடுதலைக்கு முன்பாக பொது வாழ்வைத் துவங்கி, அதற்குப் பிறகான முக்கால் நூற்றாண்டில் மக்களுக்காகப் போராடிய, குரல் கொடுத்த ஒரு தலைமுறையின் கடைசித் தலைவர் அவர்.

1925ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் மிக முக்கியமான ஆண்டு. அந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் பொதுவுடமை இயக்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் உருவானது. அதே ஆண்டில் இந்துத்துவக் கொள்கைகளுக்கென ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங் துவங்கப்பட்டது. அதே ஆண்டில், தமிழ்நாட்டில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும் சமூக சமத்துவத்துக்காகவும் சுயமரியாதை இயக்கம் துவங்கப்பட்டது.

சிறுவயதிலேயே அரசியல் ஆர்வம்

வெவ்வேறு நோக்கங்களைக் கொண்ட, அடுத்த நூற்றாண்டு முழுவதும் இந்திய அரசியலில் பெரும் தாக்கத்தைச் செலுத்தவிருந்த இந்த இயக்கங்கள் தோன்றிய கொந்தளிப்பு மிகுந்த வருடத்தில் அப்போதைய திருநெல்வேலி மாவட்டத்தின் ஸ்ரீ வைகுண்டத்தில் (தற்போது தூத்துக்குடி) ராமசாமி – கருப்பாயி தம்பதியின் ஒன்பது குழந்தைகளில் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார் நல்லகண்ணு. ஸ்ரீவைகுண்டத்தில் இருந்த காரனேசன் உயர்நிலைப் பள்ளிப் படிப்பையும் திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் இன்டர்மீடியட்டும் படித்தார். நல்லகண்ணுவின் மூத்த சகோதரரான முத்துராமலிங்கம் காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தவர் என்பதால், நல்லகண்ணுவுக்கும் அரசியல் ஆர்வம் சிறுவயதிலேயே தொற்றிக்கொண்டது.

பள்ளி நாட்களிலேயே அரசியல் தலைவர்களின் பேச்சைக் கேட்கும் அளவுக்கு ஆர்வம் இருந்தது. இதனால் மெல்ல மெல்ல அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட ஆரம்பித்தார் நல்லகண்ணு. அவர் வசித்துவந்த பகுதியிலேயே இருந்த ஒரு பஞ்சாலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோது அந்தப் பகுதியில் இருந்த ஒவ்வொரு வீட்டிலிருந்தும் அரிசி சேகரிக்கப்பட்டு, போராட்டக்காரர்களின் குடும்பத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்தப் பகுதியில் இருந்த சிறுவர்களும் இந்த வேலையைச் செய்தார்கள். அப்படி அரிசி சேகரிக்கும் குழுவில் ஒரு சிறுவனாகப் பங்கேற்றதாக, மூத்த பத்திரிகையாளர் பி. சாய்நாத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிடுகிறார் ஆர். நல்லகண்ணு.

By admin