0
யாழ். நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராகத் தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர் பத்மநாதன் மயூரன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
நல்லூர் பிரதேச சபையின் தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று பிற்பகல் நல்லூர் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.
இதன்போது தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இதன்படி தமிழ் மக்கள் கூட்டணியின் தவிசாளர் பதவிக்கு மயூரனின் பெயர் சபையில் முன்மொழியப்பட்டது.
வேறு போட்டியாளர் இன்மையால் தவிசாளராக மயூரன் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதையடுத்து உப தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் இராஜமனோகரன் ஜெயகரன் தெரிவு செய்யப்பட்டார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் கணேஷ், தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுகளின் போது சபையில் இருக்கவில்லை.
20 உறுப்பினர்களைக் கொண்ட நல்லூர் பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 7 ஆசனங்களையும், தமிழ் மக்கள் கூட்டணி 6 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 3 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஓர் ஆசனத்தையும் கொண்டுள்ளன.
தமிழ் மக்கள் கூட்டணியும், இலங்கைத் தமிழரசுக் கட்சியும் நல்லூர் பிரதேச சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நேற்றுமுன்தினம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.