பட மூலாதாரம், Getty/ANI
மாநிலங்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, பிரதமர் நரேந்திர மோதி காங்கிரஸ் கட்சிக்கு நன்றி தெரிவித்தும் அதே சமயம் தாக்கியும் பேசினார்.
”காங்கிரஸில் உள்ள எனது நண்பர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில், நான் 5-6 முறை பேசப்படுவதில் இருந்து தடுக்கப்பட்டிருக்கிறேன். ஏனென்றால் நான் ஒரு முறை பேச ஆரம்பித்தால், நான் நிறுத்த மாட்டேன் என்பதை அவர்கள் அறிவார்கள். எனவே இந்த முறை அவர்களின் திட்டங்கள் பலனளிக்கப் போவதில்லை என்பதை அவர்கள் அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டார்கள். அவர்கள் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டார்கள், அவர்கள் தொடர்ந்து அத்தகைய புரிதலைப் பெறட்டும்.” என மாநிலங்களவையில் பேசினார் நரேந்திர மோதி.
பிரதமர் நரேந்திர மோதி நேற்று, அதாவது புதன்கிழமை மக்களவையில் உரையாற்ற இருந்தார். ஆனால் எதிர்க்கட்சிகளின் தொடர்ச்சியான எதிர்ப்புகள் காரணமாக அவரது உரை நடைபெறவில்லை.
மாநிலங்களவையில் தனது உரையின் போது, பிரதமர் மோதி இதே பிரச்னை தொடர்பாக காங்கிரஸை இவ்வாறு தாக்கி பேசினார்.
பட மூலாதாரம், Sansad TV
ஓம் பிர்லாவின் கருத்து
முன்னதாக, மக்களவையில் ஏற்பட்ட கூச்சல் குழப்பம் காரணமாக, நாளை காலை 11 மணி வரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. ஒத்திவைப்பு அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் மோதி தனது வேண்டுகோளின் பேரில் அவைக்கு வரவில்லை என்று கூறினார்.