பட மூலாதாரம், AFP via Getty Images
திருநர் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்த மசோதா, 2026 (Transgender Persons (Protection of Rights) Amendment Bill, 2026) நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தம், திருநர் அடையாளத்தின் வரையறையை மாற்ற முன்மொழிகிறது. இந்தத் திருத்தத்தில் பாலின சுய-அடையாளம் அங்கீகரிக்கப்படவில்லை.
இந்தத் திருத்தம் அவசியம் என்பதற்கான காரணமாகக் கடந்த 2019ஆம் ஆண்டு சட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள சில சிரமங்களை அரசு முன்வைக்கிறது.
அதனால்தான், சட்டத்தின் பலன்கள் உண்மையாகத் தேவைப்படுவோருக்கு மட்டுமே கிடைப்பதை உறுதி செய்வதற்கு, திருநரின் வரையறையை மறுபரிசீலனை செய்வது அவசியமாக இருந்தது.
இந்தத் திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள திருநர் சமூகத்தின் சில பிரிவினரிடையே அதிருப்தி காணப்படுகிறது.
சில சமூக ஆர்வலர்களின் கூற்றுப்படி, இந்தத் திருத்தம் திருநர் அடையாளத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இந்த மசோதா திருநர் அடையாளத்தையே குற்றமாக்குகிறது எனவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தத் திருத்தம் மற்றும் அது தொடர்பாக எழுப்பப்படும் சில கேள்விகளையும் இங்கு பார்ப்போம்.
திருநர் உரிமைகள் மற்றும் அது தொடர்பான சட்டங்கள்
இந்தியாவில் திருநர்களின் அடையாளம் மற்றும் உரிமைகள் தொடர்பான சட்டங்களின் வரலாறு பழமையானதல்ல.
முதலில் 2014ஆம் ஆண்டில், தேசிய சட்ட சேவைகள் ஆணையம் தொடர்பான ஒரு தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் திருநர்களின் உரிமைகளை அங்கீகரித்தது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. அதில், குடிமக்கள் தங்கள் பாலின அடையாளத்தைத் தாங்களே தீர்மானிப்பதற்கான உரிமையை வழங்கியது. மேலும், நீதிமன்றம் திருநர்களை “மூன்றாம் பாலினம்” என்று வகைப்படுத்தியது.
பட மூலாதாரம், AFP via Getty Images
கூடுதலாக, திருநர்களை சமூகம் மற்றும் கல்வி ரீதியாகப் பின்தங்கிய வகுப்பினராக அங்கீகரித்து, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுகாதார சேவைகளில் அவர்களுக்குரிய வசதிகளையும் இட ஒதுக்கீட்டையும் வழங்குமாறு நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்புக்குப் பிறகு, திருநர்களின் உரிமைகளுக்காக ஒரு சட்டத்தை இயற்ற அரசுக்கு ஐந்து ஆண்டுகள் ஆனது.
கடந்த 2019ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட திருநர்கள் (உரிமைகள் பாதுகாப்பு) மசோதா, பரந்த அளவிலான வகைகளை உள்ளடக்கி, திருநர்களை சட்டபூர்வமாக வரையறுத்தது.
பிறப்பின்போது தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாலினத்தில் இருந்து வேறுபட்ட பாலினத்துடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்களும் இதில் அடங்குவர். இந்த வரையறையில் ஆண்களும் பெண்களும் அடங்குவர்.
ஒருவர் பாலின மறுசீரமைப்புக்கான மருத்துவ செயல்முறைக்கு உட்பட்டிருக்க வேண்டும் என்பது இதன் கட்டாயமல்ல. இந்த வரையறை பாலினகுயர், இடை பாலின நபர்களையும், ‘கின்னர்’, ‘ஹிஜ்ரா’, ‘அரவாணி’, ‘ஜோக்தா’ போன்ற சமூக-கலாசார அடையாளங்களைக் கொண்ட சமூகங்களையும் உள்ளடக்கியது.
கடந்த 2019ஆம் ஆண்டு சட்டம், ஒருவரின் பாலின அடையாளத்தைத் தானே தீர்மானிக்கும் உரிமையை வழங்கியதுடன், திருநர் அடையாளத்திற்காக மாவட்ட ஆட்சியரிடம் இருந்து சான்றிதழ் பெறும் செயல்முறையையும் வகுத்தது.
அந்தக் காலகட்டத்தில், பல திருநர் உரிமை ஆர்வலர்கள் இந்தச் செயல்முறையை விமர்சித்தனர். NALSA தீர்ப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சுய-அடையாள உரிமைக்கு இந்த விதிமுறை எதிராக இருப்பதாக அவர்கள் வாதிட்டனர்.
அது மட்டுமின்றி, இந்தச் சட்டத்தின் கீழ், திருநர் சமூகத்திற்கான கொள்கைகளை வகுக்க தேசிய திருநர் மன்றம் ஒன்றும் அமைக்கப்பட்டது.
பட மூலாதாரம், AFP via Getty Images
அரசின் நோக்கம் என்ன?
மறுபுறம், உயிரியல் காரணங்களால் சமூகப் பாகுபாட்டை எதிர்கொள்வோருக்கு உதவுவதை மட்டுமே தற்போதைய திருத்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளதாக அரசு கூறுகிறது. மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாவின் இறுதிப் பகுதியில், அரசு அதன் நோக்கத்தையும் அதற்கான காரணத்தையும் விளக்கியது.
திருநர்களுக்கான வரையறை 2019ஆம் ஆண்டு சட்டத்தில் தெளிவற்றதாக இருப்பதால், உண்மையான தேவை உள்ளவர்களைச் சென்றடைவது அரசுக்குக் கடினமாக இருப்பதாகவும் அரசாங்கம் நம்புகிறது.
இந்தத் தெளிவற்ற வரையறையின் காரணமாக, காவல்துறை, நீதிமன்றம் மற்றும் தனிநபர் சட்டம் தொடர்பான விதிகளைச் செயல்படுத்துவதில் சிரமம் உள்ளது.
அவர்களைப் பொறுத்தவரை, முந்தைய சட்டம் வெவ்வேறு பாலின அடையாளங்களைக் கொண்ட நபர்கள், தங்கள் பாலின அடையாளத்தைத் தாங்களே தேர்வு செய்பவர்கள் அல்லது பாலின அடையாளம் காலப்போக்கில் மாறக்கூடிய (gender fluid) நபர்களைப் பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்படவில்லை என்று அரசு கூறுகிறது.
சில குற்றங்களைக் கருத்தில் கொண்டு இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் அரசாங்கம் கூறுகிறது.
“வயது வந்தவர்களும் குழந்தைகளும் கடத்தப்பட்டு, கடுமையான உடல்ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். மேலும் அவர்கள் பல்வேறு விதமான நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டு, திருநர் அடையாளங்களை ஏற்கும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். பிற்காலத்தில் பிச்சை எடுத்தல் போன்ற செயல்கள் மூலம் அவர்களைச் சுரண்டுவதற்காகவே இது பெரும்பாலும் செய்யப்படுகிறது” என்று அரசாங்கம் கூறுகிறது.
இதில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள், ஒட்டுமொத்த சமூகத்தையும் சந்தேகத்திற்கு உரியவர்களாகவும் குற்றவாளிகளாகவும் சித்தரிப்பதாகக் குற்றம் சாட்டி, திருநர் சமூகம் இத்தகைய கருத்துகளுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், AFP via Getty Images
திருநர்களாக கருதப்படுபவர்கள் யார்?
புதிய சட்டத்தில் திருநர்களுக்கான வரையறை சுருக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தத் திருத்தம், தனது பாலினத்தைத் தானே அடையாளப்படுத்திக் கொள்ளும் உரிமையைக் குறிப்பிட்டிருந்த 2019ஆம் ஆண்டு சட்டத்தின் பிரிவு 4(2)-ஐ நீக்கப் பரிந்துரைக்கிறது.
புதிய வரையறை இடை பாலினத்தவர்களையும் உள்ளடக்கியுள்ளது. பிறப்பின்போதே தங்கள் பாலுறுப்பு, குரோமோசோம்கள், ஹார்மோன்கள் போன்ற உடல்சார் பண்புகளில், ஓர் இயல்பான ஆண் அல்லது பெண்ணுக்குரிய பண்புகளில் இருந்து மாறுபட்டு இருப்பவர்கள் இடை பாலினத்தவர் என்று அறியப்படுகின்றனர்.
மேலும், திருநர் அடையாளத்தை ஏற்கும்படி கட்டாயப்படுத்தப்பட்ட குழந்தைகளும் பெரியவர்களும் இதில் அடங்குவர். 2019ஆம் ஆண்டு சட்டத்துடன் ஒப்பிடுகையில், இந்த வரையறை திருநர் அடையாளத்தைச் சுருக்குகிறது. இது தங்களைத் தாங்களே திருநர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் நபர்களை விலக்குகிறது. இதுவொரு குறிப்பிடத்தக்க திருத்தமாகும்.
திருநர் அடையாள அட்டை
2019ஆம் ஆண்டு சட்டத்தின்படி, எந்தவொரு நபரும் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து நேரடியாக திருநர் அடையாள அட்டையைப் பெறலாம்.
முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தின்படி, இதற்காக முதலில் மருத்துவ கண்காணிப்பாளர் அல்லது தலைமை மருத்துவ அதிகாரியிடம் இருந்து ஒரு மருத்துவச் சான்றிதழைப் பெற வேண்டும்.
இந்தச் சான்றிதழுடன் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். சரிபார்ப்பு திருப்திகரமாக முடிந்த பின்னரே மாவட்ட ஆட்சியர் திருநர் அடையாள அட்டையை வழங்குவார்.
மேலும், மருத்துவமனை நிர்வாகம் இனி பாலின அடையாளம் தொடர்பான அறுவை சிகிச்சைகள் குறித்த தகவல்களை நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வேண்டும்.

திருநர் சமூகங்கள் கூறுவது என்ன?
திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் திருநர் சமூகத்தினர் இதற்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதைத் திரும்பப் பெற வேண்டுமென்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகின்றன. டெல்லி, மும்பை, புனே, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களில் செய்தியாளர் சந்திப்புகள் நடத்தப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து, திங்கள் கிழமை மாலை டெல்லியில் உள்ள இந்திய மகளிர் பத்திரிகையாளர் சங்கத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், திருநர் இளைஞர்களும் சிறார்களும் இந்தத் திருத்தத்திற்கு எதிரான தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.
சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெறுமாறு அவர்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்தினர். நாடாளுமன்றத்தில் இந்தத் திருத்தத்திற்கு எதிராகப் பேசுமாறு பல நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
இதற்கு இணையாக, பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றதுடன், திருத்த மசோதாவின் பிரதிகள் அதில் கிழிக்கப்பட்டன.
இந்தச் செய்தியாளர் சந்திப்பில் பேசிய இளம் திருநர்கள், இந்த மசோதாவின் அறிமுகம் பல திருநர் இளைஞர்களைத் தங்கள் எதிர்காலம் குறித்த பதற்றத்திலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளதாகக் கூறினர்.
இந்தத் திருத்தம் தங்களுடைய இருப்பையே ஆபத்தில் ஆழ்த்துவதாகவும் தங்களின் தனியுரிமை மீதான நேரடித் தாக்குதலாக இது இருப்பதாகவும் திருநர் சமூகம் கூறுகிறது.
ஊடகங்களிடம் பேசிய ஆய்வாளர் கிரிஷானு, “எங்கள் சமூகம் தொடர்பான சட்டங்களை இயற்றுவதற்கு முன்பு எங்களிடம் கலந்தாலோசிக்க வேண்டுமென நாங்கள் அமைச்சர்களிடம் தொடர்ந்து கூறி வருகிறோம். ஆனால் அரசாங்கம் எங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை” என்று தெரிவித்தார்.
பிபிசி இந்தியிடம் பேசிய கிரிஷானு, இந்தத் திருத்தம் இந்தியாவில் திருநர்களின் உரிமைகளை 200 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிவிடும் என்றும் குறிப்பிட்டார்.
திருநர் ஆர்வலர் ரிதுவின் கூற்றுப்படி, “இந்தத் திருத்தம் எங்கள் உரிமைகளைக் கட்டுப்படுத்துகிறது. ஒருவருக்குத் தனது அடையாளம் மற்றும் உடல் குறித்து முடிவெடுக்கும் உரிமை இருக்க வேண்டும். இந்தத் திருத்தத்திற்குப் பிறகு, அது அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிடும்.”
இந்தத் திருத்தம் உச்சநீதிமன்றத்தின் ‘நல்சா தீர்ப்பின்’ நோக்கத்திற்கு எதிரானது எனவும், திருநர் அடையாளத்தை வகைப்படுத்துவதாகவும் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
அதோடு, திருத்த மசோதாவில் தங்கள் சமூகத்தைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளையும் திருநர் பிரதிநிதிகள் விமர்சித்தனர்.

அவர்கள் தங்கள் அறிக்கையில், “மசோதாவில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழி, இழிபுகழைப் பெற்ற ‘குற்றப் பரம்பரை சட்டத்தை’ நினைவூட்டுகிறது. அந்தச் சட்டத்தின் கீழ், திருநர் சமூகம் உள்படப் பல சமூகங்கள் ‘பிறவிக் குற்றவாளிகள்’ என்று அறிவிக்கப்பட்டு, தொடர்ச்சியான கண்காணிப்புக்கும் சமூகப் புறக்கணிப்புக்கும் உள்ளாக்கப்பட்டனர்” என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
அதோடு, சட்டத்தில் புதிய திருத்தத்தை மேற்கொள்ள முன்மொழிவதற்கு முன்பாக இந்திய திருநர்கள் ஆணையத்திடம் கலந்தாலோசிக்கப்படவில்லை என்றும் பிரதிநிதிகள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.
செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வழக்கறிஞர் ரகுவி சுக்லா பிபிசி ஹிந்தியிடம் பேசுகையில், “திருத்த மசோதாவில் உள்ள தண்டனைகள் மிகவும் தெளிவற்றவையாக இருப்பதால், ஒருவருக்கொருவர் உதவி செய்யும் திருநர்களைக்கூட அரசாங்கம் குற்றவாளிகளாக அறிவிக்கக்கூடும்” என்று குற்றம் சாட்டினார்.

மேலும் பேசிய அவர், “திருநர்கள் மற்றவர்களைத் திருநர்களாக மாறுவதற்கு கட்டாயப்படுத்துகிறார்கள் என்று இந்த மசோதா சித்தரிக்க முயல்கிறது. அதுமட்டுமின்றி நாங்கள் தொடர் குற்றவாளிகளாகச் சித்தரிக்கப்படுகிறோம்” என்று குற்றம் சாட்டினார்.
இந்த திருத்த மசோதா மனித உரிமைகளுக்கே எதிரானது என்கிறார் சென்னையைச் சேர்ந்த திருநர் செயற்பாட்டாளர் ஜெயா.
“கடந்த 2014ஆம் உச்ச நீதிமன்ற தீர்ப்பையே இது கேள்விக்குறியாக்குகிறது. ஒருவர் தன்னை திருநங்கையாக, திருநம்பியாக சுய அடையாளப்படுத்திக் கொள்வதற்கான உரிமையை உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும்போது அதை அரசு எப்படி மாற்றலாம்?” என்று ஜெயா கேள்வியெழுப்புகிறார்.
மேலும், “இந்திய மக்கள் தொகையில் சிறுபான்மையினர் என்று கூறப்படும் சமூகங்களிலேயே மிகவும் குறைந்த எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கும் சமூகத்திற்கான சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வரப்படுகிறது என்றால், அது அவர்களை மேம்படுத்தும் வகையிலானதாக இருக்க வேண்டும். அவர்களுக்கு தண்டனைகளைக் கொண்டு வரக்கூடாது. ஆனால் அதைத்தான் இந்தத் திருத்த மசோதா செய்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு