தற்போதுள்ள இந்த IMF கடன் இணக்கப்பாட்டுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட வேளையில், வெளிநாட்டுக் கடனை 2033ஆம் ஆண்டுக்கு முன்பு செலுத்துமாறே தெரிவித்தது. ஆனால் முன்னைய அரசாங்கம் தானாகவே அதை 2028 முதல் செலுத்துவதற்கு இணக்கப்பாடு கண்டது. தற்போதைய அரசாங்கமும் அதை இருந்தவாறே ஏற்றுக்கொண்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதன் கீழ், ஆண்டுதோறும் 4.5 பில்லியன் டொலர்களை நாம் செலுத்தவேண்டும். இந்த இணக்கப்பாட்டை மாற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஆரம்பம் முதல் ஐக்கிய மக்கள் சக்தி இருந்து வருகின்றது.
இதன் மிகப்பெரிய சுமையைக் குறைக்க வேண்டும். தற்போது இந்த டித்வா சூறாவளி 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாம் கடும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளோம். பேச்சை ஆரம்பித்து இந்தக் கடன் இணக்கப்பாடுகளின் விதிமுறைகளை எளிதாக்குவதற்கு அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருக்க வேண்டும் என்று சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்பட்டு வரும் மூச்சுத் திட்டத்தின் கீழ், ஹெம்மாத்தகம பிரதேச வைத்தியசாலைக்கு 28 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள வைத்தியசாலை உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (24) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ரூபாய் 410,000 பெறுமதியான Patient Monitor ஐந்தும், ரூபாய் 335,000 பெறுமதியான ECG monitor இயந்திரமும் இன்று இவ்வாறு நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.
உலகப் பொருளாதார வல்லுநர்கள் கூறுவது போல, வெளிநாட்டுக் கடன் சுமையைக் குறைக்க வேண்டும் என்ற கருத்தை நாம் எடுத்துக் கொண்டு, புதிய இணக்கப்பாட்டை எட்ட வேண்டும். இந்தக் கருத்து சரியானது என்பதால், அரசாங்கம் இதை ஏற்றுக்கொண்டு புதிய இணக்கப்பாடு ஊடாக செல்ல வேண்டும். அரசாங்கத்தால் இதைச் செய்ய முடியாவிட்டால், எதிர்க்கட்சி இதனைச் செய்வதற்குத் தயார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
தொடர்ந்து சஜித் தெரிவித்ததாவது :
இந்த நிபந்தனைகளுடன் எம்மால் முன்னோக்கிச் செல்ல முடியாது
உலகப் புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் கூட நமது நாடு பொருளாதாரக் கடன் நிவாரணத்தைப் பெற வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்துகின்றனர். கடன் வெட்டு தொடர்பிலும் அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். ஆனால் இந்த இணக்கப்பாடுகளைக் காண்பதற்கு அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருக்க வேண்டும். இந்த நிபந்தனைகளோடு நமது நாட்டால் முன்னோக்கிப் பயணிக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தற்சமயம் கடனைத் திருப்பிச் செலுத்துவது நடைமுறைக்கு மாறான விடயமாகும்
கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு, உண்மையான விரைந்த பொருளாதார வளர்ச்சி மற்றும் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் காணப்பட வேண்டும். தற்சமயம் இதை யதார்த்தமாக்குவது சாத்தியமில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஜனவரி முதல் புதிய கல்வி சீர்திருத்தத்தை அமுல்படுத்துவது நடைமுறைக்கு சாத்தியமில்லை
மக்களினதும், பாடசாலை மாணவர்களினதும் மனநிலைகள் குறித்து நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர்களினது மனித மற்றும் அடிப்படை உரிமைகளை மீறக் கூடாது. பாடசாலைக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு அரசாங்கத்திடம் சரியான திட்டமொன்று இல்லாமையால் பிள்ளைகளே பாதிப்பட்டுள்ளனர். அரசாங்கம் விரும்புவது போல் ஜனவரி முதல் புதிய சீர்திருத்தங்களை அமுல்படுத்துவது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்பதால், இது குறித்து சிந்தித்துப் பார்த்து நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இத்தருணத்தில் மக்கள் எந்தளவு உதவியற்றவர்களாக காணப்படுகின்றனர் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கூற்றுப்படி, இந்தப் பேரழிவால் 374,000 தொழில்கள் இழக்கப்பட்டுள்ளன. 23% விவசாய காணிகளும் 35% தேயிலைத் தோட்டங்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. மாதத்திற்கு ரூபா.48 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் தேயிலை காணிகள் கூட அழிந்துபோயுள்ளன. அரசாங்கம் வீராப்பு பேசிக் கொண்டிருக்காமல், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் வழிமுறைமைக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
The post நாட்டுக்காக இப்போதாவது தளர்வான IMF இணக்கப்பாட்டுக்குச் செல்லுங்கள் | சஜித் appeared first on Vanakkam London.