• Mon. Jun 1st, 2026

24×7 Live News

Apdin News

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 1 மில்லியனை கடந்தது

Byadmin

Jun 1, 2026


நாட்டுக்கு இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வருகை தந்துள்ள சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1 மில்லியனை கடந்துள்ளதுடன், 2 ஆவது ஆண்டாக இலக்கை அடைந்துள்ளதாக சுற்றுலா அதிகார அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட சாதனை அளவிலான வருகை தொடர்ந்து இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது. சமீபத்திய சவால்களுக்கு மத்தியிலும் நாட்டின் சுற்றுலாத்துறை தொடர்ந்து வலுவான வளர்ச்சியைக் கண்டு வருவதை இது பிரதிபலிக்கிறது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல் சூழல் மற்றும் அது சார்ந்த உலகளாவிய பயண நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக, கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சற்று வீழ்ச்சி பதிவாகியிருந்தது.எனினும், இது உலகளாவிய சுற்றுலாத்துறை எதிர்கொண்ட தற்காலிக மந்த நிலை தான் என துறைசார் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டின் சாதனை வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளும் வகையில், நடப்பு ஆண்டிலும் மே மாதம் முடிவடைவதற்கு முன்னதாகவே இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.

அதன்படி, கடந்த ஜனவரி 1 ஆம் திகதி முதல் மே மாதம் 28 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 10,008,807 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். மே மாதம் தொடக்கம் முதல் கடந்த 28 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 134,530 சுற்றுலாப் பயணிகள் இலங்கையை வந்தடைந்துள்ளனர். இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் வருகை தந்த நாடுகளின் வரிசையில் இந்தியா தொடர்நது முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் இருந்து மட்டும் 2 இலட்சத்துக்கும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இதனை தொடர்ந்து ஐக்கிய இராச்சியம், ரஷ்யா, சீனா மற்றும் ஜெர்மனி நாடுகள் முக்கிய சந்தைகளாக காணப்படுகிறது.

நாட்டின் முதன்மையான வெளிநாட்டு அந்நியச் செலாவணி ஈட்டும் துறைகளில் ஒன்றாக சுற்றுலாத்துறை விளங்கும் நிலையில் எதிர்வரும் மாதங்களிலும் இந்தத் துறை நிலையான வளர்ச்சியைக் தக்க வைத்துக் கொள்ளும் என்று சுற்றுலா அதிகார அபிவிருத்தி சபை குறிப்பிட்டுள்ளது.

By admin