• Thu. Apr 9th, 2026

24×7 Live News

Apdin News

‘நான் மண்ணில் புதைந்தாலும், என் திட்டங்கள் புதையாது’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Byadmin

Apr 9, 2026


சென்னை மறைமலைநகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். இப்பிரச்சாரக் கூட்டத்தில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,

“இந்தியாவிலேயே நம்.1 மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தி இருக்கிறோம். இந்தியாவிற்கே வழிகாட்டும் மாடல் திராவிட மாடல். இந்த வளர்ச்சியை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வெறும் அவதூறுகளை மட்டுமே பேசிவந்த எடப்பாடி, தற்போது என் மரணத்தை விரும்பி பேசிவருகிறார்.

இந்த உலகத்தில் மரணத்தை சந்திக்காத எந்த மனிதனும் இல்லை. யாராக இருந்தாலும் நிச்சயம் ஒருநாள் மரணம் வந்தே தீரும். எனக்கும் மரணம் வரும், மண்ணில் புதைப்பார்கள். ஆனால் என் திட்டங்களை மண்ணில் புதைக்கும் துணிச்சல் யாருக்கும் வராது. இந்த திட்டங்கள் இருக்கும்வரை இந்த ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்.

“மொழிக்காக, நம் இனத்திற்காக போராடுகிறோம். போராடும் இந்த நேரத்தில் நம் உயிரை இழக்கக்கூடிய தியாகத்தைக்கூட செய்ய காத்திருக்கிறோம். நான்கு ஆண் பிள்ளைகளில் ஒருவர் இறந்துவிடுவதால் என் தந்தை நிச்சயம் கவலைப்படமாட்டார்.

காரணம் மொழிக்காக தனயனை இழந்த தந்தை என என் தந்தைக்கு பாராட்டு கிடைக்கும்” என்று எனது 18 வயதில் எனது முதல் மாநாட்டில் பேசினேன். இதெல்லாம் அரசியல் அழுக்காக இருக்கக்கூடிய பழனிசாமிக்கு தெரியாது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் களத்தில் இருக்கக்கூடியவன்தான் திமுககாரன்.” என தெரிவித்தார்.

By admin