படக்குறிப்பு, முதலில் (இடதுபுறம்) இருக்கும் அங்கன்வாடி பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்காக என்றும், அருகில் இருக்கும் கட்டடம் பட்டியல் சமூக குழந்தைகளுக்கான அங்கன்வாடி என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.கட்டுரை தகவல்
எழுதியவர், பெ.சிவசுப்பிரமணியன்
பதவி, பிபிசி தமிழுக்காக
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
‘பிரச்னைகளைப் பேசுவோம்’ என்ற தலைப்பில் பிபிசி தமிழ் மேற்கொண்ட முயற்சியின் ஒரு பகுதியாக, தங்கள் பகுதிகளில் நிலவும் சாதிய பிரச்னைகள் குறித்த பல தகவல்களை மக்கள் பிபிசி தமிழிடம் பகிர்ந்தனர்.
அதன் ஒரு பகுதியாக “எங்கள் ஊரில், சாதி என்றால் என்னவென்றே தெரியாத இரண்டு வயதுக் குழந்தைகளைக் கூட சாதியை காரணம் காட்டி, அரசு அங்கன்வாடிகளில் பிரித்து வைக்கிறார்கள்” என நாமக்கல் மாவட்டத்தின் ஒரு கிராமத்திலிருந்து இருந்து பிபிசிக்கு ஒரு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் பிபிசி தமிழ் குழு அப்பகுதிக்கு சென்று கள ஆய்வு செய்தது. அதில் பிபிசி கண்டறிந்தவற்றை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
‘பட்டியல் பிரிவு மக்களுக்கு என தனி அங்கன்வாடி’
படக்குறிப்பு, அங்கன்வாடி மையத்தின் அருகிலுள்ள வீட்டைச் சேர்ந்த பாக்கியம்
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், காக்காவேரி ஊராட்சியில், காக்காவேரி, வெங்காய பாளையம், பச்சப்பாளி, பூசாரிபாளையம், வேலம்பாளையம், மேட்டுப்பாளையம், பச்சாபாளையம், மேட்டுக்காடு எனப் பல சிற்றூர்கள் உள்ளன.
ராசிபுரம் – ஆத்தூர் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள காக்காவேரியின் தென் பகுதியில் 300 குடும்பங்கள் உள்ளன.
இதற்கு அடுத்து புதுக்காலனி, புதுக்காலனி வளவு ஆகிய இரண்டு பகுதிகளில் பட்டியல் பிரிவைச் சேர்ந்த 400 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
புதுக்காலனியின் உள்ளே நுழையும் இடத்தில், ஒரு சமுதாயக்கூடமும் இரண்டு அங்கன்வாடி மையங்களும் உள்ளன.
பத்தடி இடைவெளியில் அமைந்துள்ள இரண்டு அங்கன்வாடி மையங்களும் ஒரே அளவுகளைக் கொண்டுள்ளன. இரண்டு மையங்களுக்குள்ளும் தனித்தனியே சமையலறைகளும், கழிப்பறைகளும் உள்ளன. இரண்டுக்கும் தனித்தனியே அமைப்பாளர்களும், சமையலர்களும் உள்ளனர்.
அங்கன்வாடி மையத்தின் அருகிலுள்ள வீட்டைச் சேர்ந்த பாக்கியம் பிபிசி தமிழிடம் பேசும்போது, “எனக்குத் தெரிந்து 20 ஆண்டுகளாக இந்த இடத்தில் இரண்டு அங்கன்வாடி மையங்கள் உள்ளன. ஒரு மையத்தில், எங்கள் பகுதியைச் சேர்ந்த பட்டியல் சமூகக் குழந்தைகள் சாப்பிட்டு வருகின்றனர். இன்னொரு மையத்தில், வடக்குப் பக்கத் தெருக்களைச் சேர்ந்த பிற சமூக குழந்தைகள் சாப்பிட்டு வருகின்றனர்.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “பட்டியல் சமூகக் குழந்தைகளுக்கு எங்கள் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தான் சமையல் செய்கிறார். வேறு சமூகக் குழந்தைகள் படிக்கும் சத்துணவு மையத்துக்கு, இங்கிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வேலம் பாளையத்திலிருந்து பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சமையல் செய்ய வருகிறார்” என்றார்.
இந்த இரண்டு அங்கன்வாடிகளுக்கும் யார் அமைப்பாளர் மற்றும் சமையலர்களாக உள்ளனர் என்பது பற்றி விசாரித்ததில், ஒரு அங்கன்வாடி மையத்தில் பட்டியல் பிரிவைச் சேர்ந்தவரும் மற்றொரு அங்கன்வாடி மையத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரும் சமையலர்களாக பணிபுரிவது தெரியவந்தது.
ஒரு அங்கன்வாடியின் சமையலர் சித்ரா பிபிசி தமிழிடம் பேசும்போது, “இரண்டு அங்கன்வாடி மையங்களுமே 48 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் சொன்னார்கள். இரண்டு கட்டடங்களுமே பழையதாகி விட்டதால், நான்கு ஆண்டுகளுக்கு முன் நான் வேலை செய்யும் கட்டடத்தை இடித்துவிட்டு, புதிதாகக் கட்டிக் கொடுத்தனர். கடந்த ஆண்டு பக்கத்திலுள்ள மையத்தின் கட்டடத்தையும், இடித்துவிட்டு புதிதாக கட்டியுள்ளனர்.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “புதிய கட்டடம் வேலை முடியும் வரை அங்குள்ள குழந்தைகளும், எங்கள் மையத்தில்தான் சாப்பிட்டுவிட்டு, ஒரே வகுப்பில் படித்து வந்தனர். புதிய கட்டடம் திறப்பு விழா முடிந்த பிறகு, பழையபடியே தனியாகச் சென்று விட்டனர். பிற்படுத்தப்பட்ட குழந்தைகள் படிக்கும் அங்கன்வாடியில், பட்டியல் பிரிவு குழந்தைகளைச் சேர்க்கமாட்டார்கள்.” என்கிறார்.
அப்பகுதியில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் மற்றும் மற்றொரு அங்கன்வாடியில் பணிபுரியும் சமையலரிடம் பேச முற்பட்ட போது அவர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
அப்பகுதி மக்கள் கூறுவது என்ன?
படக்குறிப்பு, அங்கன்வாடி சமையலர் சித்ரா
புதுக்காலனியை சேர்ந்த வங்கி ஊழியரான பூபதி பிபிசி தமிழிடம் பேசுகையில், “நானும் இந்த அங்கன்வாடி மையத்தில் தான் படித்தேன். நான் படித்த காலத்திலேயே இந்த பாகுபாடு மாணவர்களுக்கு வெளிப்படையாகவே தெரியும்” என்று கூறுகிறார்.
“இப்போதும் பழைய நிலையே தொடர்கிறது. புதுக்காலனி பகுதியிலுள்ள பட்டியல் சமூக மக்கள் கல்வி, பொருளாதாரத்தில் முன்னேறிய நிலையில் தான் உள்ளனர். வேறு எந்த விவகாரத்திலும், எங்கள் ஊரில் சமூகப் பாகுபாடு என்பது இல்லை. சுற்றுப்பகுதியிலுள்ள பிற சமூக மக்களுமே நன்றாக பழகி வருகிறோம். ஆனாலும், ஒரே இடத்தில் இரண்டு அங்கன்வாடிகள் வேறுவேறு சமூகங்களுக்கு அமைந்துள்ளது வேதனையாக உள்ளது.” என்று குறிப்பிடுகிறார் அவர்.
இதைப்பற்றி இங்குள்ள மக்களும், அரசு அலுவலர்களும் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கும் அவர், “இரண்டு அங்கன்வாடிகளுக்கும் குறைந்தபட்சம் சமையலாவது ஒரே இடத்தில் செய்ய வேண்டும்” என்கிறார்.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் பேசும்போது, “நான் பொறுப்புக்கு வருவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பட்டியல் சமூக குழந்தைகளுக்குத் தனியே ஒரு அங்கன்வாடியும், பிற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு என ஒரு அங்கன்வாடியும் செயல்பட்டு வருகின்றன. இது இங்குள்ள எல்லோருக்குமே தெரியும். இப்போதும் தனித்தனியாகவே செயல்படுகின்றன” என்கிறார்.
படக்குறிப்பு, புதுக்காலனியை சேர்ந்த வங்கி ஊழியர் பூபதி
அரசு அதிகாரிகள் கூறுவது என்ன?
இந்த விவகாரம் குறித்து நாமக்கல் மாவட்ட அங்கன்வாடி மையங்களின் திட்ட அலுவலர் ரூபியிடம் கேட்டதற்கு, “மக்கள் தொகை அடிப்படையில், 800 பேருக்கு மேலே, 1,600 பேர் வரை வாழும் ஒவ்வொரு இடத்துக்கும் தனியே அங்கன்வாடி மையங்களை அரசு அமைத்துள்ளது. இந்த அடிப்படையில் ஒரே இடத்தில் இரண்டு மையங்கள் இருக்கலாம். நான் இங்கே வந்து பத்து மாதங்கள் தான் ஆகிறது, இன்னும் புதுக்காலனி அங்கன்வாடிக்குப் போகவில்லை. இதைப் பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்” என்று கூறினார்.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தியிடம் கேட்டபோது, “சாதி அடிப்படையிலான எந்தப் பிரிவும் இல்லை” என மறுத்துள்ளார்.
“ராசிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட காக்காவேரி பஞ்சாயத்தில் 7 குழந்தைகள் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் மக்கள் தொகை அடிப்படையில் காக்காவேரி புது காலனி கிழக்கு மையம் 1979-ஆம் ஆண்டு முதலும், காக்காவேரி புது காலனி மேற்கு மையம் 1982-ஆம் ஆண்டு முதலும் செயல்பட்டு வருகின்றன.”
“மக்கள் தொகை அடிப்படையில் இரண்டு மையங்களாகக் குழந்தைகளின் வளர்ச்சி கண்காணிப்பு மற்றும் முன் பருவ கல்வி, கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் நலன், வீடுகள் பார்வை போன்ற பணிகளுக்காக 1982 முதலே பிரிக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன. இதில் சாதி அடிப்படையில் எந்த பிரிவும் இல்லை” என்று கூறினார்.
“அரசு புறம்போக்கு நிலம் உள்ள பகுதியிலேயே அரசு கட்டடம் கட்ட இயலுமாதலால் இரண்டு மையங்களும் அருகருகே செயல்பட்டு வருகின்றன. ” என அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு வனத்துறை அமைச்சருமான மா.மதிவேந்தன் அவர்களிடம் கேட்டபோது, “இப்படி ஒரு விவகாரம் இருப்பது நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. சில துறைகளில் இதுபோன்ற பழைய நடைமுறை தொடர்ந்து கொண்டுதான் உள்ளன” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இதில் ஏதாவது ஒரு மையத்துக்குக் கிடைக்கும் வசதி, இன்னொரு மையத்துக்குக் கிடைக்கவில்லை என்ற நிலை வந்திருக்குமானால் அதை உடனே சரி செய்யப்பட்டிருக்கலாம். இரண்டு மையங்கள் மூலமும் குழந்தைகளுக்குக் கிடைக்கக்கூடிய சலுகைகள் தடையில்லாமல் கிடைப்பதால், இதை யாரும் கண்டுகொள்ளவில்லை என நினைக்கிறேன். குழந்தைகளின் கல்வி தொடர்பான இந்த விவகாரத்தை மிக கவனமாகவே கையாள வேண்டும். அதனால் ஏற்படும் எதிர்வினை, குழந்தைகளின் கல்வியைப் பாதிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.” என்று கூறினார்.
“இந்த விவகாரத்தில், அந்தப் பகுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, விரைவில் சரி செய்கிறேன். இதை என்னுடைய கவனத்துக்குக் கொண்டுவந்ததற்கு நன்றி” என்றும் அவர் கூறினார்.
பிரச்னைகளைப் பேசுவோம் – 2
பிபிசி தமிழின் ‘பிரச்னைகளைப் பேசுவோம்’ என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, தங்கள் பகுதிகளில் நிலவும் சாதிய பிரச்னைகள் குறித்த பல புகார்களை மக்கள் பிபிசி தமிழிடம் முன்வைத்தனர். அதன் ஒரு பகுதியாக வந்த புகாரின் அடிப்படியில் இந்தக் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதைத் தொடர்ந்து, ‘பிரச்னைகளைப் பேசுவோம் – 2 | பெண்கள் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் உங்கள் பகுதியில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான நிலைமை எப்படி உள்ளது?
உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த பெண்களுக்கோ பாதுகாப்பு தொடர்பாக எங்கள் செய்தியாளர்களுடன் பகிர விரும்பும் தனிப்பட்ட அனுபவம் ஏதேனும் உள்ளதா?
கடந்த 5 ஆண்டுகளில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான நிலைமை மேம்பட்டிருக்கிறதா, மோசமடைந்திருக்கிறதா?
உங்கள் பெயர், தொலைபேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் வெளியிடப்படாது அல்லது வெளியாளுடன் பகிரப்படாது.