சென்னை: தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து நாய் இனப்பெருக்கம் மற்றும் விற்பனை நிலையங்களும் மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் அறிவிக்கை, பிராணிகள் வதை தடுப்பு சட்டப்படி (நாய் இனப்பெருக்கம் மற்றும் விற்பனை விதிகள்), தமிழ்நாடு பிராணிகள் நல வாரியத்திடம் பதிவுசெய்து கொள்ளப்பட வேண்டும் என்று கடந்த 2020-ம் ஆண்டு செப். 12-ம் தேதி தினசரி நாளிதழில் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதுவரை பதிவு செய்யாமல் நிறுவனங்களை நடத்துபவர்கள் உடனடியாக https://tnawb.tn.gov.in/ இந்த இணையதளத்தில் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் செப். 30-ம் தேதிக்குள் உறுப்பினர் செயலர், கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை மருத்துவ சேவைகள், நந்தனம், சென்னை-600035 என்ற முகவரிக்கு கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். வரும் அக். 1-ம் தேதிக்குப்பின் பதிவு செய்யாமல் நடத்தப்படும் நிறுவனங்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.