0
இங்கிலாந்து முழுவதும் ஒரு வாரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என, புலம்பெயர்தலுக்கு எதிரான அமைப்பு ஒன்று அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்தை மையமாகக் கொண்டு செயல்படும் The Great British National Strike அமைப்பின் தலைவர் ரிச்சர்ட் டொலால்ட்சன், இந்த வேலைநிறுத்தம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிவிப்பில், இந்தப் போராட்டம் அலுவலக வேலைகளுக்கு மட்டும் அல்லாமல், பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வது, மக்கள் அன்றாடம் ஷாப்பிங் செய்வது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் ஒரு வாரத்திற்கு நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த தேசிய வேலைநிறுத்தம் நாளை 2ஆம் திகதி முதல் எதிர்வரும் 9ஆம் திகதி வரை நீடிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
புலம்பெயர்தலை கட்டுப்படுத்துவது அரசியல்வாதிகள் கூறுவது போல் சிக்கலானது அல்ல என்றும், சட்டவிரோதமாக இங்கிலாந்திற்கு வந்தவர்களையும், கடுமையான குற்றச்செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும், நீண்ட காலமாக வேலை இல்லாமல் இருப்பவர்களையும் நாடுகடத்த வேண்டும் என்றும் ரிச்சர்ட் டொலால்ட்சன் தெரிவித்துள்ளார். மேலும், புலம்பெயர்தலால் ஏற்பட்ட பாதிப்புகள் சரிசெய்யப்பட்டு மீண்டும் முழுக் கட்டுப்பாடு கிடைக்கும் வரை, புலம்பெயர்தல் விண்ணப்பங்களை தற்காலிகமாக பரிசீலிப்பதை நிறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதே நேரத்தில், சட்டப்படி இங்கிலாந்திற்கு புலம்பெயர்ந்தவர்களை மதிப்பதாகவும், இருப்பினும் மருத்துவம், கல்வி, வீடமைப்பு மற்றும் பொதுச் சேவைகள் உள்ளிட்ட அனைத்திலும் முதன்மையாக இங்கிலாந்து குடிமக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.