0
தனது காந்த குரலால் இந்திய திரையுலகையே கட்டிப்போட்டிருந்த முன்னணி பாடகர் அரிஜித் சிங், இனி திரைப்படங்களுக்கு பின்னணி பாடப்போவதில்லை என அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர்,”இத்தனை ஆண்டுகள் எனக்கு அன்பளித்த ரசிகர்களுக்கு நன்றி. இனி புதிய திரைப்படப் பாடல்கள் எதையும் நான் ஒப்புக்கொள்ளப் போவதில்லை. இந்த நீண்ட பயணம் இனிதே நிறைவடைகிறது,” எனத்தெரிவித்துள்ளார்.
இந்த திடீர் முடிவுக்கு பல காரணங்கள் இருப்பதாக அரிஜித் சிங் விளக்கியுள்ளார்.
“திரைப்பட பாடல்களை தொடர்ந்து பாடுவதில் எனக்கு சலிப்பு ஏற்பட்டுவிட்டது. இசைத்துறையில் இன்னும் நிறைய புதிய விடயங்களைக் கற்றுக்கொள்ளவும், Independent Music உருவாக்கத்தில் கவனம் செலுத்தவும் விரும்புகிறேன். மேலும், புதிய திறமையாளர்கள் உருவாக வேண்டும் என்பதே எனது ஆசை,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த10 ஆண்டுகளுக்கு மேலாக இந்தி சினிமாவின் முக்கிய பாடகராக திகழ்ந்தவர் அரிஜித் சிங். ‘ஆஷிகி 2’ படத்தின் ‘தும் ஹி ஹோ’ பாடல் தொடங்கி, சமீபத்திய பல ஹிட் பாடல்கள் வரை இவரது குரலுக்கு மயங்காத ரசிகர்கள் இல்லை.
அரிஜித் சிங் தமிழ் திரையுலகில் சில குறிப்பிடத்தக்க பாடல்களைப் பாடியுள்ளார், குறிப்பாக ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ’24’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நான் உன்’ (Naan Un) பாடல் மிகவும் பிரபலமானது.