சென்னை: நீதித் துறையை விமர்சி்த்து பேசியதாக, சீமானுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் மீது, வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்தாண்டு நவம்பரில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், நீதித்துறையையும், நீதிமன்ற செயல்பாடுகளையும் விமர்சித்துப் பேசியதாகவும், எனவே, அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க போலீஸாருக்கு உத்தரவிடக்கோரி, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அந்த உத்தரவை ரத்து செய்து சீமானுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக்கோரி, சார்லஸ் அலெக்ஸாண்டர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக நடந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், சீமான் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் என்ற முறையில் கண்ணியமாகவும், நாகரீகமாகவும் பேசியிருக்க வேண்டும்.
ஆனால், நீதித்துறை தொடர்பான அவரது பேச்சு அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக இருப்பதால், அவர் மீது சட்ட ரீதியாக வழக்குப் பதிவு செய்து விசாரிக்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும், என வாதிடப்பட்டது. அதையடுத்து நீதிபதி, மனுதாரரின் புகார் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவி்ட்டுள்ளார்.