சென்னை: கருணை அடிப்படையில் பணி வழங்குவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 2023-ம் ஆண்டு செப்டம்பர் முதல் இதுவரை தலைமைச் செயலாளர்களாக பதவி வகித்தவர்களை ஜூலை 21-ம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணியின் போது உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக கால நிர்ணயம் செய்வது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும். கருணை அடிப்படையில் வேலை கோருவோரின் மாநில அளவிலான பட்டியலை தயாரிக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளதா என மூன்று மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், கருணை அடிப்படையில் வேலை வழங்கக் கோரிய வழக்கு, நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு கடந்தமுறை விசாரணைக்கு வந்தது.
அப்போது, 2023-ம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி, 2023-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் எந்த குழுவும் அமைக்கப்படவில்லை. அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை எனக்கூறி, 2023 ம் ஆண்டு செப்டம்பர் முதல், இதுவரை தமிழகத்தில் தலைமைச் செயலாளர்களாக பதவி வகித்தவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி பட்டு தேவானந்த் முன் இன்று (ஜூன் 20) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத்தரப்பில் , கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக கால நிர்ணயம் செய்வது குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்தல், கருணை அடிப்படையில் வேலை கோருவோரின் மாநில அளவிலான பட்டியல் தயாரித்தல் தொடர்பாக கடந்த ஜூன் 11-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டது. அந்த அரசாணையின் நகலும் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்த பின்னர் தான், குழு அமைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவை கடந்த ஜூன் 11-ம் தேதி வரை அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்பு செயல். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விதிக்கும் முன் சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும்.
எனவே, இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக, 2023-ம் ஆண்டு செப்டம்பர் முதல் இதுவரை தலைமைச் செயலாளர்களாக பதவி வகித்தவர்கள், ஜூலை 21-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தார்.