
-
வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
”காலையில் ஏழெட்டு மணிக்கு குழி வேலைக்குப் போனால் சாயங்காலம்தான் திரும்ப முடியும். குழிக்குள் இறங்கி மண்ணை மூட்டை கட்டி கயிறுகள் வழியே மேலே கொண்டு வருவோம். அதைச் சலித்துப் பிரித்து, பாதரசத்தை வைத்து சுத்தம் செய்து, தங்கத்துகள்களைச் சேகரிப்போம். சில நாட்கள் 200 ரூபாய் கிடைக்கும். அபூர்வமாக ஒரு சில நாட்களில் 1000 ரூபாய் கிடைக்கும். சில நாட்களில் ஒன்றுமே கிடைக்காமல் வெறுங்கையோடு திரும்ப வேண்டியிருக்கும். இப்போது அந்த வேலைக்கும் போக முடியவில்லை!”
பந்தலூரைச் சேர்ந்த தொழிலாளர் முத்தமிழ், பிபிசி தமிழிடம் பகிர்ந்த தகவல் இது.
”இங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ப்புகள் இல்லை. கேரளாவில் கட்டட வேலை, விவசாய வேலைக்குச் செல்வார்கள். எஸ்டேட் வேலையும் இப்போது எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அதனால் வேறு வழியின்றி, யானை, சிறுத்தை, புலி நிறைந்த காட்டுக்குள்தான் இந்த வேலைக்குப் போகின்றனர். முன்பு ஆங்கிலேயர் தோண்டி வைத்த குழிகளில்தான் மண் எடுப்போம்.” என்று கூறுகிறார் புவனேஸ்வரன்.
முன்பு இந்த வேலைக்குச் சென்ற இவர், இப்போது வேறு வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி பந்தலூர் நகராட்சி கவுன்சிலராக இருக்கிறார்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் தங்கச்சுரங்கம் செயல்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கம் எடுப்பதற்காக குழி தோண்டுவது சமீப காலமாக அதிகரித்துள்ளதாக தெரியவந்த நிலையில், காட்டிமட்டம் என்ற பகுதியில் புதிதாக தோண்டப்பட்ட குழிகளையும், அதற்குப் பயன்படுத்திய பொருட்களையும் வனத்துறையினர் எரித்து அழித்துள்ளனர்.
சட்டவிரோத தங்கச்சுரங்கங்கள் குறித்து இணைந்து ஆய்வு செய்யுமாறு 4 துறை அதிகாரிகளுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா அறிவுறுத்தியுள்ளார்.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் தங்கவேட்டை?
நீலகிரி மாவட்டத்தின் கூடலூரில் தமிழக – கேரள எல்லையில் அமைந்துள்ள பந்தலூர் தாலுகாவுக்கு உட்பட்ட சில பகுதிகளிலும் நிலத்தைத் தோண்டி மண்ணை எடுத்து, அதிலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்கும் பணி பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக நடந்து வருவதாக புகார் எழுந்தது.
இதை ஊடகங்களும் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றன. அவ்வப்போது அரசு அதிகாரிகளும் இதைத் தடுப்பதற்கு சில நடவடிக்கைகளையும் எடுக்கின்றனர்.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இப்பகுதியில் தங்கப்படிமங்கள் இருப்பதைக் கண்டறிந்ததன் அடிப்படையில், அங்கு தங்கச்சுரங்கங்கள் அமைக்கப்பட்டதாக நீலகிரி சார்ந்த பல்வேறு ஆவணங்களும் தெரிவிக்கின்றன.
டபிள்யு.ஃபிரான்சிஸ் உட்பட பிரிட்டிஷ் அதிகாரிகள் பலரும் எழுதியுள்ள நீலகிரி ஆவணங்களில் இதுபற்றி விரிவான குறிப்புகள் இடம் பெற்றிருப்பதாகச் சொல்கிறார் நீலகிரி ஆவண மையத்தின் நிறுவனர் தர்மலிங்கம் வேணுகோபால். இவர் நீலகிரி குறித்து பல்வேறு நூல்களை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.
பிபிசி தமிழிடம் பேசிய தர்மலிங்கம் வேணுகோபால், ”பந்தலுார் பகுதியில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் தங்கச்சுரங்கம் இருந்ததற்கு ஏராளமான ஆதார ஆவணங்கள் உள்ளன. கிழக்கிந்தியக் கம்பெனி இருந்தபோது 1870–1880 வரையிலான பத்தாண்டுகளில்தான் அங்கே இதுபற்றி ஆய்வுகள் நடந்தன. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வு செய்து தங்கப்படிமங்கள் இருப்பதாகக் கூறினர்.” என்றார்.
”அதன் அடிப்படையில்தான் அங்கு தங்கச்சுரங்கத்தை அமைக்க பிரிட்டிஷார் முடிவு செய்தனர். இதற்காகவே பந்தலூரில் பங்களாக்களைக் கட்டினர். ஆனால் தங்கம் எடுக்கும் முயற்சி முழு பலனளிக்கவில்லை. அதற்கான செலவினம் மிக அதிகமாக இருந்தது. அதனால் அத்திட்டம் கைவிடப்பட்டது.” என்றார் வேணுகோபால்.
தர்மலிங்கம் வேணுகோபால் எழுதியுள்ள NILGIRIS-INTRODUCTION என்ற நூலில் Trial of a Gold Rush என்ற தலைப்பில் பந்தலூர், தேவாலா பகுதிகளில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இயங்கி வந்த தங்கச்சுரங்கங்கள் குறித்து எழுதப்பட்டுள்ளது.
தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள நீலகிரி மாவட்ட அரசிதழிலும் இந்த சுரங்கங்கள் குறித்து விரிவான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
”இந்தியாவின் பழமையான தங்கவயலாக வயநாடு தங்கவயல் இருந்தது. 1880–1900 காலகட்டத்தில் இதை ஐரோப்பிய ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். தங்க உற்பத்திக்காக மட்டுமின்றி, பிற தாதுக்களுக்காகவும் பல ஆய்வுகள் நடந்தும் மிகவும் குறைந்த தங்கமே கிடைத்துள்ளது. பல ஆய்வாளர்கள் அதிர்ஷ்டத்தைச் சோதிக்க பலமுறை வந்திருந்தாலும், அவர்களின் முயற்சிகள் வெற்றிபெறவில்லை.” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தற்போதுள்ள நீலகிரி பந்தலூர் பகுதியில் துவங்கி, கேரளாவின் வயநாடு மற்றும் கர்நாடகாவின் மைசூர் தென் கிழக்குப்பகுதி வரையிலுமாக மொத்தம் 1300 சதுர கி.மீ. பரப்பளவில் இந்த தங்கப்படிம வயல் கண்டறியப்பட்டதாகவும், கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் உயரத்தில் இவை அமைந்திருந்ததாகவும் நீலகிரி மாவட்ட அரசிதழில் விரிவான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
ஆல்ஃபா, விக்டோரியா, ஹேர்வுட், சாலமன், ரோசடென்மலை, ரிச்மாண்ட், ரீனிக்ஸ் மற்றும் கிளன்ராக் கோல்டு மைனிங் நிறுவனங்கள் ஆகியவை தங்க சுரங்க பணிகளில் ஈடுபட்ட குறிப்பிடத்தக்க நிறுவனங்கள்.
இவற்றில் தேவாலாவில் இயங்கிய ஆல்ஃபா மற்றும் ஹேர்வுட் தங்கச்சுரங்கங்களில் உள்ள கந்தகம் மற்றும் தங்கத்தை மதிப்பிட பரிசோதனைகள் நடந்துள்ளன என்று பிரிட்டிஷ் ஆவணங்களை மேற்கோள் காட்டி நீலகிரி அரசிதழ் தகவல் பதிவிட்டுள்ளது.
”ஆல்ஃபா சுரங்கத்தில் 13600 டன்னில் 2.91 சதவீதம் கந்தகமும், டன் ஒன்றுக்கு 4.36 கிராம் தங்கமும் கிடைத்துள்ளன. ஹேர்வுட் சுரங்கத்தில் 1,625 டன்னில் 2.94 சதவீதம் கந்தகமும், டன் ஒன்றுக்கு 6.04 கிராம் தங்கமும் கிடைத்தது.
தேவாலா–பந்தலூரில் எடுத்த மாதிரிகள் டன் ஒன்றுக்கு 3.06 கிராம் தங்கம் காண்பித்தன. அதன்பின் நடத்தப்பட்ட ஆழமான ஆய்வுகளில் 35 மீட்டர் வரையிலான ஆழத்தில் தங்கப்படிமம் இருப்பதும், 15 மீட்டரில் ஒரு டன்னுக்கு குறைந்தபட்சம் 3.3 கிராம் தங்கமும், அதிகபட்சமாக 15.2 கிராம் தங்கமும் இருப்பதாகக் கண்டறியப்பட்டது.” என்று திட்டம் தோல்விக்கான காரணம் விளக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரியளவில் தங்கம் கிடைத்ததா?

இந்த தங்கச்சுரங்கங்கள் குறித்து, பந்தலூரைச் சேர்ந்த அஃபாஸ் ஜா ஜாஜி என்பவர், விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு ஏராளமான ஆவணங்களைச் சேகரித்துள்ளார். செளதி அரேபியாவில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் தொழில்நுட்ப இயக்குநராக தற்போது பணியாற்றி வரும் அவரிடம் பிபிசி தமிழ் பேசியது.
”நான் இந்த தங்கச்சுரங்கங்கள் பற்றி 2 ஆண்டுகளாக விரிவாக ஆய்வு செய்து ஏராளமான ஆவணங்கள், பொருட்களைச் சேகரித்து ஆவணப்படுத்தியிருக்கிறேன். தங்கத்துக்கான தரம் குறித்து கோல்டு மைனிங் நிறுவனங்கள் கொடுத்த சான்றுகளும், தேவாலா–மாயார் கோல்டு மைனிங் நிறுவனத்தின் ஒரிஜினல் ஷேர் சர்ட்டிபிகேட்டும் என்னிடம் உள்ளன.” என்றார் அஃபாஸ்.
இதுகுறித்து ஆங்கிலத்தில் தான் எழுதியுள்ள புத்தகத்தை விரைவில் வெளியிடவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
”1874 ஆம் ஆண்டில் ராபர்ட் பிராஸ்மித் என்ற ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்தவர், கிழக்கிந்திய கம்பெனியின் இந்திய அலுவலகத்தில் பணியாற்றவந்தபோதுதான், இந்தப் பகுதியில் தங்கப்படிமம் இருப்பதை உறுதி செய்தார்” என்று கூறும் அஃபாஸ், தேவாலா முதல் வயநாடு வரை அவர் செய்த பயணங்கள் தேதி வாரியாகவுள்ளதாகத் தெரிவித்தார்.
”அப்போது பிரிட்டனிலிருந்து இவற்றை நிர்வகிக்க செயலாளராக சாமுவேல் ஜென்னிங்ஸ் என்பவர் வந்தார். தங்கச்சுரங்கத்தை நம்பி ஒரு நகரத்தைத் திட்டமிட்டு, பந்தலூரில் ரேஸ்கோர்ஸ், சர்ச், பேக்கரி, சலூன் உள்ளிட்ட அனைத்தும் உருவாக்கினர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி பெரியளவில் தங்கம் கிடைக்கவில்லை. திட்டம் தோல்வியடைந்தது. அதன்பின்பே மாற்றாக தேயிலை, காஃபி தோட்டங்கள் உருவாக்கப்பட்டன.” என்றார் அவர்.

அந்த காலகட்டத்தில் நடந்த பல விஷயங்களை சாமுவேல் ஜென்னிங்ஸ் ‘தி கோல்டு மைனிங் செளத் ஈஸ்ட் நீல்கிரீஸ்’ என்ற பெயரில் ஒரு புத்தகமாக எழுதியிருப்பதாகவும், 180 ஆண்டுகள் பழமையான அந்த புத்தகத்தின் உண்மை நகல் இப்போது இல்லை என்றும் அஃபாஸ் ஜா ஜாஜி தகவல் பகிர்ந்தார்.
இருப்புப்பாதை அமைத்து, சுரங்கத்துக்கான கட்டமைப்புகள் எல்லாம் உருவாக்கப்பட்ட நிலையில், திட்டம் தோல்வியடைந்ததால் 1581 ஏக்கர் பரப்பளவிலான தங்கச்சுரங்கம் கைவிடப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சுதந்திரத்துக்குப் பின், அந்த தங்கச்சுரங்கத்தை மத்திய அரசு தடை செய்துவிட்ட நிலையில், அங்கிருந்த சுரங்கத்தில் மண்ணை எடுத்துவந்து தங்கத்தை எடுப்பதே, பலருக்கு வாழ்வாதாரமானது என்கிறார் பந்தலூரைச் சேர்ந்த ஆஷப்.
பந்தலூர், தேவாலா, நாடுகாணி, பொன்னூர் பகுதிகளைச் சேர்ந்த பல ஆயிரம் மக்களுக்கு வேலைவாய்ப்பில்லாததால்தான் உயிரைப் பணயம் வைத்து இதில் ஈடுபட்டதாக சொல்கிறார் அவர்.
பிபிசி தமிழிடம் பேசிய ஆஷப், ”இந்த மலைப்பகுதியிலிருந்து புன்னம்புழா, குண்டம்புழா என பல ஆறுகள், நிறைய சிற்றாறுகள், நீரோடைகள் உற்பத்தியாகின்றன. அவற்றில் வரும் கருப்பு மண்ணை எடுத்துச் சலித்து பாதரசத்தால் சுத்திகரித்து தங்கம் எடுத்துவந்தனர். ஆற்று மண்ணில் கிடைப்பது குறைந்துவிட்டதால் தற்போது வெளியே மண்ணைத் தோண்டுகின்றனர். ஆயிரம் கிலோ மண் எடுத்தால் அதில் ஒரு கிராம் தங்கம் கிடைப்பதே அரிது. இப்போது விலை அதிகமாகிவிட்டதால் பலரும் இதில் ஈடுபட்டுள்ளனர்.” என்றார்.
பார்மஸி தொழில் செய்து வரும் ஆஷப், தன்னுடைய தாத்தா குஞ்ஞாலிக்குட்டி, இந்த தங்கச்சுரங்கங்களில் கிடைக்கும் தங்கத்தை வாங்கி விற்பனை செய்வதை தொழிலாகச் செய்து வந்தார் என்று அவர் கூறினார்.
‘தங்கம் விலை உயர்வால் அதிகரித்த சட்டவிரோத சுரங்கங்கள்’

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் தோண்டப்பட்ட தங்கச்சுரங்கக் குழிகளைத் தவிர்த்து, சமீபகாலமாக புதிய சுரங்கங்கள் தோண்டப்படுவதாகத் தகவல் வெளியானதால், சில பகுதிகளில் நேரடியாக களஆய்வு செய்து நடவடிக்கையில் இறங்கியதாக கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் குணசேகரன் தெரிவித்தார்.
கடந்த வாரத்தில் இவர் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் காட்டிமட்டம் என்ற பகுதிக்கு ஆய்வுக்குச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு குழிகள் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து ஓடிச்சென்றுள்ளனர். அங்கு 60-க்கும் மேற்பட்ட குழிகள் புதிதாக தோண்டப்பட்டிருப்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
பிபிசி தமிழிடம் இதுபற்றிப் பேசிய குணசேகரன், ”இப்போதும் இங்கே குழிகளைத் தோண்டி அதிலுள்ள மண்ணைப் பிரித்தால் தங்கம் கிடைப்பதாக மக்கள் நம்புகின்றனர். சிலர் கிடைத்ததாகவும் கூறுகின்றனர். அதனால்தான் ஜென்ம நிலங்கள் என்று வகைப்படுத்தப்பட்ட, வருவாய்த்துறை கட்டுப்பாட்டிலுள்ள நிலங்களில் மட்டுமின்றி, தனியார் வசமுள்ள நிலங்கள், அதையொட்டியுள்ள வனப்பகுதி என எல்லா இடங்களிலும் தங்கம் எடுப்பதற்காக குழிகள் பரவலாக தோண்டப்பட்டுள்ளன.” என்றார்.
ஜென்ம நிலங்கள் என்றால் என்ன?
நிலம்பூர் கோவிலகத்துக்குச் சொந்தமான பல லட்சம் ஏக்கர் நிலங்கள், கூடலூர் மலைப்பகுதியில் பரவியிருந்தன. கடந்த 1969 ஆம் ஆண்டில் ஜமீன் ஒழிப்புச்சட்டம் கொண்டு வரப்பட்டபோது, கோவிலகத்துக்குச் சொந்தமான தமிழகப் பகுதியில் இருந்த 80.88 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ஜென்ம நிலங்கள் என வகைப்படுத்தப்பட்டு, 1974 ஆம் ஆண்டில் அரசுடமையாக்கப்பட்டன.
அவற்றில் செக்ஷன் 17 நிலம் என்பது, கூடலூர் ஜென்மம் எஸ்டேட் (ஒழிப்பு மற்றும் ரயத்வாரி மாற்றம்) சட்டம், 1974-ன் கீழ், கோவிலகத்திடமிருந்து அரசு கையகப்படுத்திய நிலங்களில், குத்தகை அடிப்படையில் இருந்த 52 ஆயிரம் ஏக்கர் நிலங்களைக் குறிக்கும். நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவின்படி, இந்த நிலங்களை யாரும் விற்கவோ, வாங்கவோ முடியாது. இந்த நிலத்தில்தான் குடியிருப்புகள் அதிகரித்து, பல ஆயிரம் பேர் பட்டா கோரி வருகின்றனர். இந்த நிலங்கள் தற்போது வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்த நிலங்களில்தான் அதிகமாக குழிகள் தோண்டப்படுவதை ஒப்புக்கொள்ளும் வருவாய் கோட்டாட்சியர் குணசேகரன், ஆனால் முன்பு தங்கச்சுரங்கம் நடந்த பகுதிகளில் முழுமையாக அவை நடக்க வாய்ப்பில்லை என்கிறார். அவர் குறிப்பிடும் காட்டிமட்டம் பகுதியில் இருந்த 60க்கும் மேற்பட்ட புதிய குழிகளை, கடந்த வாரத்தில் கூடலூர் வனத்துறையினர் மூடியுள்ளனர்.
தங்கவேட்டையால் பாதிக்கப்படும் காட்டுயிர்கள்

சட்டவிரோதமாக தோண்டப்பட்ட இந்த குழிகளால் நிறைய காட்டுயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக வனத்துறை அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
கடந்த 2025 ஜனவரியிலிருந்து தற்போது வரையிலும் சட்டவிரோதமாக தங்கம் எடுக்கும் பணிகளை மேற்கொண்டவர்கள் மீது 124 வழக்குகள் பதியப்பட்டுள்ள தகவலையும் வனத்துறையினர் பகிர்ந்தனர்.
இந்த பகுதியில் மேலும் குழிகள் தோண்டப்படுகிறதா என்பதைக் கண்டறிவதற்காக, தற்போது டிரோன் மூலமாக கண்காணிப்பை வனத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய கூடலூர் வனஅலுவலர் வெங்கடேஷ் பிரபு, ”அந்த குறிப்பிட்ட பகுதியின் இரு புறமும் செக்ஷன் 17 நிலமாகவுள்ள தேயிலைத் தோட்டங்களும், நடுவில் ஓடையும் உள்ளன. அவை வனநிலமாக இல்லாவிட்டாலும், அந்த குழிகளாலும், அதிக மக்கள் செல்வதாலும் காடு மற்றும் காட்டுயிர்களுக்கான அச்சுறுத்தல் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை அனுப்பினோம். கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தியதன்பேரில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்.” என்றார்.
தாங்கள் மூடிய குழிகள் பெரும்பாலும் சிறுகுழிகளாகவே இருந்ததாக் கூறிய வெங்கடேஷ் பிரபு, நான்கைந்து குழிகள் மட்டுமே 15 அடி அளவுக்கு ஆழமாகவும், 20 அடி அளவுக்கு நீளமாகவும் இருந்ததாகவும் தெரிவித்தார். பொதுவாக மணற்பாங்கான பகுதிகளை விட்டுவிட்டு, பாறையாகவுள்ள பகுதிகளில்தான் அதிகளவு குழிகள் தோண்டப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
சமீபத்தில் தங்கம் விலை கடுமையாக உயர்ந்தபின்பே, இவ்வாறு சட்டவிரோதமாக தங்கம் எடுக்கும் குழிகள் அதிகளவில் தோண்டப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் மாற்று வாழ்வாதாரம் இல்லாததால்தான், பலரும் இவற்றில் ஈடுபடுவதாக அரசியல்கட்சியினர், தொழிலாளர் அமைப்பினர் என பல தரப்பினரும் கருத்தைத் தெரிவிக்கின்றனர்.
பிபிசி தமிழிடம் பேசிய கூடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் (அதிமுக) பொன் ஜெயசீலன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் (திமுக) திராவிடமணி இருவருமே, பந்தலூர் பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு எதுவுமில்லாத காரணத்தால்தான் சட்டவிரோதமாகவும் ஆபத்தாகவும் நடந்து வரும் இந்த பணிகளில் ஈடுபடுவதாகத் தெரிவித்தனர்.
அந்தப் பகுதியில் மத்திய, மாநில அரசுகள் கொண்டு வரவிருந்த பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சுற்றுலாத் திட்டங்களை யானை வழித்தடம் என்று வனத்துறை தடுத்துவிட்டதாக பொன் ஜெயசீலன் கூறினார்.

இந்த பணிக்குச் செல்லும் மக்களுக்கு, காட்டுயிர்கள், குழிகளால் ஏற்படும் ஆபத்தை விட, அவர்கள் பயன்படுத்தும் பாதரசத்தால் பெரும் ஆபத்து இருப்பதை அரசு ஆய்வு செய்ய வேண்டுமென்கிறார் விவசாயிகள் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.செல்வராஜ்
சட்டவிரோதமாக நடக்கும் இந்த குழிகளில் மூச்சுத்திணறியும், மண் சரிந்தும் சிலர் இறந்திருப்பதாகவும், ஆனால் அவை வெளியில் வருவதேயில்லை என்றும் கூடலூர் மற்றும் பந்தலூரைச் சேர்ந்த ஊடகத்துறையினர் பலரும் தகவல் பகிர்ந்தனர்.
பெயர் கூற விரும்பாத அரசு அதிகாரி ஒருவரும் இதை ஒப்புக்கொண்டார்.
குழி தோண்டும் பணிகளில் ஈடுபட்டுவந்த தொழிலாளர்கள் சிலரிடம் பிபிசி தமிழ் பேசிய போது, வேறு சில பகுதிகளில் சிலர் இறந்திருப்பதாகத் தகவல் உள்ளது என்றாலும் தங்களுக்குத் தெரிந்து யாரும் இறக்கவில்லை என்று தெரிவித்தனர்.
எனினும் இந்த தகவல்களை பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.
தற்போது சட்டவிரோதமாக தங்கம் எடுப்பதற்கு குழிகள் தோண்டுவது அதிகரித்து வரும் நிலையில், வனத்துறை சமீபத்தில் எடுத்துள்ள நடவடிக்கையும், டிரோன் கண்காணிப்பும் கடந்த ஒரு வாரமாக இந்த பணிகளை முற்றிலும் முடக்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.
சட்டவிரோதமாக இங்கு எடுக்கப்படும் தங்கத்தை வாங்குபவர்கள் யார், இதைப் பிரித்தெடுக்கும் பணியைச் செய்வது யார் என்ற விசாரணை நடந்து வருவதாக வருவாய் கோட்டாட்சியர் குணசேகரன் கூறினார்.
நீலகிரியில் நடக்கும் சட்டவிரோத தங்கச்சுரங்கங்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை, அங்குள்ள மக்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து அறிவதற்காக நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் ஆகியோரை பலமுறை தொடர்பு கொண்டபோதும் அவர்கள் இருவருமே பதில் தரவில்லை.
உதகையில் செய்தியாளர்களிடம் இதுபற்றி பேசிய நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, ”பந்தலூர் பகுதிகளில் வருவாய்த்துறை கட்டுப்பாட்டிலுள்ள நிலங்களிலும், வனப்பகுதிகளிலும், தனியார் நிலங்களிலும் சட்டவிரோதமாக தங்கம் எடுக்கக்கூடாது என்பது பற்றி பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது இதுபற்றி ஆய்வு செய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறை அதிகாரிகளும் இணைந்து கூட்டு ஆய்வு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு