• Sat. May 2nd, 2026

24×7 Live News

Apdin News

நீலகிரியில் ‘பல ஆயிரம்” ஏக்கர் வனத்தை நாசமாக்கிய காட்டுத்தீ – சதிச்செயல் காரணமா?

Byadmin

Apr 30, 2026


நீலகிரி காட்டுத்தீ: பல ஆயிரம் ஏக்கர் வரையிலான காடுகள் சேதம் - காரணம் யார்?

பட மூலாதாரம், HANDOUT

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

நீலகிரியில் சில கிராமங்களை ஒட்டியுள்ள காட்டுப் பகுதிகளில் இரண்டு வாரங்களாக அணைக்க முடியாத அளவுக்குத் தீ பரவி பெருமளவில் காடுகளை பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. மொத்தத்தில் 5 ஆயிரம் ஏக்கர் வரையிலும் காடுகள் அழிந்திருக்க வாய்ப்புள்ளதாக சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

இது மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட தீ என்ற குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடந்து வருவதாக வனத்துறையினர் கூறுகின்றனர். காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டதாக பிபிசியிடம் தெரிவித்த முதுமலை புலிகள் காப்பகக் கள இயக்குநர் கிருபா சங்கர், மொத்தத்தில் 1000 ஏக்கர் பரப்பளவிலான காடுகளில் சீகை மரங்களே பெருமளவில் அழிந்திருப்பதாகத் தெரிவித்தார்.

அந்நிய களைச்செடிகளே காட்டுத்தீ பரவக் காரணமென்று பிபிசியிடம் விளக்கமளித்த வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ, காட்டுத்தீ மனித குடியிருப்பு எதற்கும் பரவவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஒரே நேரத்தில் நீலகிரியில் 10 இடங்களில் பரவியுள்ள காட்டுத்தீ

மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியப் பகுதியாக அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் முக்குருத்தி தேசிய பூங்கா, நீலகிரி மற்றும் கூடலூர் வனக்கோட்டங்கள் அமைந்துள்ளன.

நீலகிரி வனப்பகுதியில் சோலை, புல்வெளி, சதுப்பு நிலக்காடு, சமூகக்காடு எனப் பலவிதமான காடுகள் கலந்திருக்கின்றன. கோடைக் காலங்களில் இந்தக் காடுகள் கடும் வெப்பத்தின் காரணமாக வறண்டுவிடும் என்பதால் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கமாகவுள்ளது. இதைத் தடுப்பதற்காக தீத்தடுப்புக் கோடுகள் அமைப்பது உள்படப் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக வனத்துறை எடுத்து வருகிறது. இந்த ஆண்டிலும், நீலகிரியில் 1000 கி.மீ. தூரத்துக்கு தீத்தடுப்புக் கோடுகள் அமைக்கப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் கூறினர்.

By admin