0
பேசாமல் பேச வைத்தவனைப் பார்த்து
இன்றிவன் ஊமையென
பலர் சொல்லிக்கொண்டே கடந்தார்கள்
அடிக்கடி அவன் காதுகள் கேட்டு
உணர்வுகளை சிதறடித்த வார்த்தை
புண்பட்ட காயத்தின் மீது சூரை முட்கள் தைத்தது போல
தினம் அவன் இருதயத்தை
குற்றிக் கிழிக்கும் ஓசைகள் அவை.
அவன் அண்ணனின் கட்டளையை
கட்சிதமாய் முடித்த தம்பிகளில் ஒருவன்
நெருப்பாற்றை நீந்திக் கடந்த வீர மகன்
அவனைக் கண்டு
அஞ்சிய எதிரிகளுக்கு தெரியும் அவன் மூர்க்கம்
தேசமே உயிரென வாழ்ந்த அவன் இளமைக் கோலம்
உறவினர்கள் முன்னே
கடன்கொடுத்தவனைக் கண்டதுபோல
ஒரு நடுச் சபையிலே
கட்டியிருந்த ஆடை கழன்று வீழ்ந்தது போல
மனைவியின் வார்த்தையில்
நீ ஆண்மகனா என்ற வார்த்தையைக் கேட்ட
ஆடவனைப்போல
இன்று அவன் ஒரு நடைபிணமாய்
வாழ்வை நகர்துகிறான்
ஏனோ திரும்பி வந்துவிட்டோம் என்பதற்காக இல்லை
அவனை நம்பிய பிள்ளைகளுக்காக.
வட்டக்கச்சி வினோத்
ஓவியம் – போராளி ஓவியர் நீதன்