படக்குறிப்பு, சுபாஷ் சந்திர போஸுக்கு நன்றி தெரிவித்து உணர்வுப்பூர்வமான கடிதம் ஒன்றை எழுதினார் படேல்.கட்டுரை தகவல்
எழுதியவர், உர்விஷ் கோத்தாரி
பதவி, பிபிசி குஜராத்தி
சர்தார் படேலும் சுபாஷ் சந்திர போஸும் காங்கிரஸ் கட்சியில் இருபது ஆண்டுகள் ஒன்றாகப் பயணித்தனர். ஆனால் மற்ற தலைவர்களைவிடவும் தன்னை விட 22 வயது குறைவான சுபாஷுடன் பழக படேலுக்கு குறைவான வாய்ப்புகளே கிடைத்தன. அவர்களின் உறவில் பல ஏற்ற, இறக்கங்கள் இருந்தன. எனினும் அவர்கள் உறவின் விசித்திரமான நுணுக்கங்கள், அவர்கள் இருவரின் குணாதிசயங்களுக்கு மட்டுமல்ல சுதந்திரப் போராட்ட வரலாற்றிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இருவருக்கும் இடையே ஒரு தலைமுறை வயது வித்தியாசம் இருந்தாலும் சுயராஜ்ஜிய இயக்கத்தில் நுழைந்ததில் இரு தலைவர்களுக்கும் இடையே மூன்று ஆண்டு இடைவெளியே உள்ளது. 1918-ல் காந்தியின் கேதா சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார் வல்லபாய், அதே வேளையில் போஸ் ‘தேஷ்பந்து’ என அழைக்கப்படும் சித்தரஞ்சன் தாஸ் தலைமையில் 1921-ல் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார்.
படேல் 1930-ல் முதல் முறையாக சிறையில் அடைக்கப்பட்டார், போஸ் 1921-ல் சிறையில் அடைக்கப்பட்டார். சுபாஷ் சந்திர போஸ் மிக விரைவாக காங்கிரஸின் இளம் தலைமை வட்டத்திற்குள் நுழைந்தார். தன்னை விட ஏழு வருடங்கள் பெரியவரான ஜவஹர்லால் நேருவிடம் அவ்வப்போது கூட்டாளியாகவும், விமர்சகராகவும் இருந்துள்ளார்.
வல்லபாய் 1928ம் ஆண்டு பர்தோலி சத்தியாகிரகத்தை வழிநடத்திய பிறகு சர்தார் என அழைக்கப்பட்டார். போஸ் அவரின் தலைமையை பாராட்டினார், ஆனால் 1928-ம் ஆண்டு கல்கத்தா (இப்போது கொல்கத்தா) அமர்வில் அவர்கள் இருவருக்கும் இடையே அன்பான பரிமாற்றங்கள் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. சர்தார் படேலின் மூத்த சகோதரரான விட்டல்பாய் படேல் உடன் நெருக்கமான உறவை பேணி வந்தார் போஸ்.
பட மூலாதாரம், Getty Images
காந்திஜி மீது இருவருக்கும் கலவையான பிரமிப்பு மற்றும் மறுப்பு உணர்வுகள் இருந்தன. 1930களின் தொடக்கத்தில் காந்தியின் தலைமை தோற்றுவிட்டதாக இருவரும் நம்பினார், அதனை வெளிப்படுத்தும் விதமாக பொது அறிக்கைகளும் வெளியிட்டனர். ஆனால் சர்தார், காந்தியின் நெருக்கமான கூட்டாளியாக விளங்கினார்.
விட்டல்பாய் மற்றும் போஸ் இடையேயான உணர்வுப்பூர்வமான உறவு வெளிநாட்டில் தான் வளர்ந்தது. தனது உடல்நிலை சீராக இல்லாத போதிலும் உடல் நலிவுற்றிருந்த விட்டல்பாயை நல்ல முறையில் பார்த்துக் கொண்டார் போஸ். 1933-ல் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவாவில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது விட்டல்பாய் மறைந்தார். அப்போது போஸ் அவருடன் இருந்தார், படேல் இந்தியாவில் நாசிக் சிறையில் இருந்தார்.
அங்கிருந்து சுபாஷ் சந்திர போஸுக்கு நன்றி தெரிவித்து உணர்வுப்பூர்வமான கடிதம் ஒன்றை எழுதினார் படேல்.
அந்தக் கடிதத்தில், ‘நான் உங்களுக்கு எவ்வளவு நன்றி தெரிவித்தாலும் போதாது. அவருடைய கடைசி நாட்களில் உண்மையான சகோதரராக அவருடன் இருக்க வேண்டும் என்பது உங்களின் விதியாக இருக்க வேண்டும் என இருந்துள்ளது. உங்களுடைய மோசமான உடல்நிலை உங்களை எப்படி வருத்தியிருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது. நீங்கள் முழுமையான பலத்துடன் எங்களிடம் திரும்பி வருவீர்கள் என நம்புகிறேன்(நாசிக் சிறை, 28-10-1933)” என எழுதியுள்ளார்.
உயில் தகராறு
பட மூலாதாரம், Getty Images
அரசியல் ரீதியாக விட்டல்பாய் மற்றும் வல்லபாய்க்கு வெவ்வேறு பாதைகள் இருந்தாலும் இருவருக்கும் இடையே உணர்வுப்பூர்வமான இணைப்பு இருந்தது. விட்டல்பாயின் உடல் இந்தியாவுக்கு வந்தபோது இறுதிச் சடங்குகள் செய்ய சிறையில் இருந்து நிபந்தனை விடுதலை பெற படேல் மறுத்துவிட்டார். அதன் பிறகு அவரின் உயில் பற்றிய கேள்வி எழுந்தது. தனது சொத்தின் பெரும்பகுதியை ‘இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் முடிந்தவரை இந்தியாவின் சுதந்திரத்தை வெளிநாடுகளில் பரப்புரை’ செய்வதற்காக சுபாஷ் சந்திர போஸிற்கு விட்டுச் சென்றிருந்தார். அந்த உயிலை செயல்படுத்துபவர்களில் ஒருவர் இறந்தபோது இன்னொருவரான கோர்தாபாய் படேல் (இவர் விட்டல்பாயின் சுயசரிதையை எழுதியவராக அறியப்படுகிறார்) நாசிக் சிறைக்குச் சென்று சர்தார் படேலைச் சந்தித்தார்.
கோர்தான்பாய் படேலிடம் இருந்த உயிலின் நகல் பற்றி வல்லபாய் படேலுக்கு நிறைய கேள்விகள் இருந்தன.
பல பிரச்னைகளுக்கு மத்தியில் அவர்கள் விட்டல்பாயின் கையெழுத்தின் உண்மைத்தன்மையையும் சந்தேகித்தனர். அதற்கு காரணம் என்னவென்றால் அவர் இறந்த நாளன்று கையெழுத்திடப்பட்டுள்ளது. வழக்கறிஞரான கோர்தான்பாய், சுபாஷ் சந்திர போஸ் தனக்கு விருப்பப்பட்ட விதத்தில் அந்த பணத்தை செலவு செய்ய விரும்பினார் என்றும் தெரிவித்தார். அதன் பிறகு நீண்ட காலத்திற்கு இந்த விவகாரம் ஊசலாடிக் கொண்டே இருந்தது. போஸின் வழக்கறிஞர் பணத்தை அனுப்பச் சொல்லி அவரிடம் கேட்டார், ஆனால் கோர்தன்பாய் அதனை தொடர்ந்து தவிர்த்து வந்தார்.
1938-ஆம் ஆண்டு காங்கிரஸ் வருடாந்திர அமர்வு பர்தோலியில் உள்ள ஹரிபுரா கிராமத்தில் நடந்தது. அதன் தலைவராக சுபாஷ் சந்திர போஸுக்கு பிரம்மாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது. அங்கு விட்டல்பாயின் நினைவுகளும் எதிரொலித்தன. அதன் முக்கியமான ஒருங்கிணைப்பாளராக சர்தார் படேல் அனைத்தையும் சிறப்பாக செய்தார், போஸ் மீது எந்த வெறுப்பும் காட்டவில்லை. மாறாக அமர்வைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே இணக்கம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உருவாயின.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, காந்தி, போஸ், படேல்
சர்தார் படேல் உயில் தொகையை ஒரு காங்கிரஸ் கமிட்டியிடம் வழங்க பரிந்துரைத்தார். அதற்கு போஸும் ஒப்புக் கொண்டார். ஆனால் யார் அந்த கமிட்டியின் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்பதில் முரண்பாடுகள் இருந்தன. இறுதியாக கோர்தன்பாய் படேல் உயில் தகராறை பம்பாய் உயர்நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றார்.
அந்த நேரத்தில், விட்டல்பாயின் பணம் எந்த குடும்ப உறுப்பினர்களாலும் செலவு செய்யப்படாது என அனைவரிடமும் படேல் தெளிவு பெற்றிருந்தார். பணம் கிடைத்தால் அது ஒரு அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில் வைக்கப்படும் என முடிவு செய்யப்பட்டிருந்தது. விட்டல்பாயின் பணத்திற்கு போஸ் ஒரே உரிமையாளர் இல்லையென்றும் அவர் ஒரு நிர்வாகி என்றும் கோர்தன்பாய் நம்பினார்.
இந்த விளக்கத்தை போஸ் ஏற்றுக் கொள்ளவில்லை, ஆனால் பம்பாய் உயர்நீதிமன்றம் கோர்தன்பாயின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டது. அதனை எதிர்த்து போஸ் செய்த மேல்முறையீடும் கோர்தன்பாய்க்கு ஆதரவாகவே முடிந்தது. சர்தார் படேல் இந்த வழக்கில் நேரடி மனுதாரர் கிடையாது. ஆனாலும் அவருக்கும் போஸுக்குமாண உறவு மோசமடைந்தது. அவரை ஆத்திரமூட்டிய தொடர் நிகழ்வுகளும் ஒருபுறம் தொடங்கியிருந்தன.
கட்சிக்குள் எதிரெதிர் நிலைப்பாடு
பட மூலாதாரம், Getty Images
1938-ல் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு இரண்டாவது முறையாக போட்டியிடப் போவதாக போஸ் அறிவித்தார். காந்தி மற்றும் படேல் உள்ளிட்ட தலைவர்கள் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
போஸின் தேசப்பற்று மறுக்கமுடியாதது என்றாலும் அவரின் சித்தாந்தங்கள் காந்தி வழிநடத்திய காங்கிரஸ் உடன் ஒத்துப்போகவில்லை.
காங்கிரஸ் தலைவரின் அதிகாரம் பற்றி போஸுக்கும் கட்சியின் காரிய கமிட்டிக்கும் அடிப்படை கருத்து வேறுபாடுகள் இருந்தன. காங்கிரஸ் தலைவர் பதவி உச்சபட்ச அதிகாரம் கொண்டது என நம்பினார் போஸ். ஆனால் படேல் உள்ளிட்ட கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் இறுதி அதிகாரம் காரிய கமிட்டியிடம் தான் இருந்தது என நம்பினர்.
காங்கிரஸ் கட்டமைப்பில் படேலின் செல்வாக்கு மிக வலுவாக இருந்தது.
எனவே கட்சி அமைப்பு மற்றும் நேரு உள்ளிட்ட இதர தலைவர்கள் சம்பந்தப்பட்டு கசப்பான முடிவுகள் எடுக்கப்பட்டாலும் அதற்கான விமர்சனங்கள் படேல் மீது தான் விழுந்தன. போஸ் மீண்டும் வெற்றி பெற்ற போதும் அதே தான் நடந்தது.
மறுமுறை போட்டியிட வேண்டாம் என அவரை சமாதானம் செய்ய காந்தி மற்றும் நேரு முயற்சி செய்தனர். ஆனால் அது சவாலான காலகட்டம். இரண்டாம் உலகப் போரின் தொடக்க கால கட்டம். போஸ் ஹிட்லருடன் இணைந்து பிரிட்டனுக்கு எதிராக சண்டையிட விரும்புகிறார் எனப் பேச்சுகள் அடிபட்டன. காந்தி மற்றும் காங்கிரஸ் அதனை விரும்பவில்லை.
எனினும், போஸ் தனக்கு மாகாண கமிட்டிகளின் ஆதரவு இருக்கிறது எனத் தெரிவித்தார். அதுமட்டுமில்லை, சர்தார் செல்வாக்கு செலுத்தும் காங்கிரஸ் காரிய கமிட்டி பிரிட்டன் அரசின் திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் என அவர் அஞ்சினார். இதனை நடக்க விடாமல் தடுத்து அந்த திட்டத்தை (முழுமையான சுதந்திரம் வழங்கவில்லை) நிராகரிக்க தான் மீண்டும் தலைவராக வேண்டியது என அவசியம் என அவர் வெளியிட்ட பொது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
அந்த திட்டத்தை எதிர்க்கும் காங்கிரஸின் பொது நிலைப்பாட்டைத் தாண்டியும் அதன் தலைவர்கள் உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இல்லை. அதுமட்டுமில்ல, அமைச்சரவை இடங்களும் முடிவு செய்யப்பட்டு விட்டன என்றும் தெரிவித்தார் போஸ்.
போஸ் அளவுக்கு திறன் கொண்ட தலைவர் ஒருவர் படேல் மற்றும் இதர தலைவர்கள் பதவி ஆசை கொண்டுள்ளார்கள் என பாரபட்சமான முறையில் குற்றம் சுமத்துவது வருந்தத்தக்கது. மறுபுறம் மாகாண கமிட்டிகள் பரிந்துரைத்த பட்டியலில் இருந்து தன்னுடைய பெயரை விலக்கிக் கொண்டார் படேல். மௌலானா ஆசாத்தும் இறுதி நேரத்தில் விலகிக் கொண்டார்.
இறுதியில் பட்டாபி சீதாராமையா வேட்பாளராக நிறுத்தப்பட்டார். சர்தார் உள்ளிட்ட செயற்குழுவின் ஆதரவு இருந்தும் சிதாராமையா 1375 வாக்குகள் மட்டுமே பெற்றார். சுபாஷ் சந்திர போஸ் 1580 வாக்குகள் பெற்று வென்றார். படேலின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள 105 வாக்குகளில் 5 மட்டுமே பெற்ற போஸ், வங்காளத்தில் உள்ள 483 வாக்குகளில் 404 பெற்றார்.
படக்குறிப்பு, சுபாஷ் சந்தி போஸ் காங்கிரஸ் கட்சியில் இருவது விலகினார் சுதந்திர இந்திய ராணுவத்தை உருவாக்கினார்.
போஸின் வெற்றியைத் தொடர்ந்து சர்தார் படேல் உள்ளிட்ட தலைவர்கள் பதவி விலகினர். உடல்நிலை சரியில்லாத போதும் 1939ம் ஆண்டில் திரிபுரா அமர்வில் கலந்து கொண்டார் போஸ். ஆனால் கருத்து வேறுபாடுகள் குறையாமல் அதிகரித்தது. போஸுக்கு வாக்களித்தவர்கள் கூட காந்தியை தனித்துவிட்டு முன்னே செல்ல தயாராக இல்லை.
இறுதியாக தலைவர் பதவியில் இருந்து விலகினார் போஸ். ஆனால் அவர் எண்ணத்தில் அதிக மனக்கசப்பு படேல் மீது தான் இருந்திருக்கும். ஏனெனில் சில வருடங்கள் கழித்து வெளிநாட்டில் அவர் ‘ஆசாத் ஹிந்த் ராணுவத்தின்’ தலைமைப் பொறுப்பை ஏற்றார். அதன் பல்வேறு பிரிவுகளுக்கும் காந்தி, நேரு, மௌலானா போன்ற தலைவர்களின் பெயர்களை வைத்தார். ஆனால் ஒரு பிரிவுக்கு கூட படேலின் பெயரை அவர் வைக்கவில்லை.
அவர்களின் சித்தாந்த வேறுபாடுகளைக் கடந்தும் ஆசாத் ஹிந்த் ராணுவத்தில் இருந்த போஸின் கூட்டாளிகள் மீதும் அவர் சகோதரர் சரத் சந்திரா மீதும் படேல் எந்த வெறுப்பும் கொண்டிருக்கவில்லை. போஸின் எதிர்பாராத மறைவுக்குப் பிறகு ஆசாத் ஹிந்த் ராணுவத்தின் நிதிகள் காங்கிரஸ் உருவாக்கிய கமிட்டி வசம் ஒப்படைக்கப்பட்டது, படேல் அதற்கு தலைமை தாங்கினார். போஸின் கூட்டாளியும் ஆசாத் ஹிந்த் ராணுவத்தில் ஜான்சி ராணி பிரிவுக்குத் தலைமை தாங்கிய கேப்டன் லஷ்மி என்னுடான நேர்காணலில் இதற்கு அதிருப்தி தெரிவித்திருந்தார். பணம் ராணுவத்திற்கு சொந்தமானது தான் என்றாலும் தனது கூட்டாளிகள் படேலிடம் சென்று கேட்டு தான் பெற வேண்டிய நிலை இருந்தது என்று அவர் கூறினார்.
வரலாற்று கதாபாத்திரங்களின் அணுகுமுறைகள் மற்றும் உறவுகளை ஒற்றை வண்ணத்தில் பூசிவிட முடியாது. அவர்களின் பலங்கள் மற்றும் கட்டுப்பாடுகளின் குறைபாடுகள் அந்த உறவுகளை விவரிப்பதை மேலும் மனிதத்தன்மை கொண்டதாகவும், யதார்த்தமான மற்றும் நம்பக்கூடிய ஒன்றாகவும் காட்டுகிறது.