படக்குறிப்பு, அமெரிக்க பேச்சுவார்த்தையாளர்கள் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் (இடது) தலைமையில் செயல்படுவார்கள், இரானிய குழு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தலைமையில் செயல்படும்.கட்டுரை தகவல்
அமெரிக்கா மற்றும் இரானுக்கு இடையே ராணுவ மோதல் ஏற்படும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ள ஒரு நெருக்கடிக்கு மத்தியில், அமெரிக்க மற்றும் இரானிய மூத்த அதிகாரிகள் நேரடி பேச்சுவார்த்தைக்காக விரைவில் ஓமனில் சந்திக்க உள்ளனர்.
கடந்த மாதம் இரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் நடைபெற்ற போராட்டங்களை அந்நாட்டு அரசு வன்முறை மூலம் ஒடுக்கியதற்குப் பதிலடியாக, அமெரிக்கா மத்திய கிழக்கில் தனது ராணுவத்தைக் குவித்ததைத் தொடர்ந்து இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. இந்த ஒடுக்குமுறையில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.
பேச்சுவார்த்தை நடைபெறும் இடம் மற்றும் அதன் நோக்கம் குறித்த நிச்சயமற்ற நிலை காரணமாக, இந்த சந்திப்புகள் தடைபடலாம் என்ற சூழல் ஏற்பட்டது. பதற்றத்தை குறைக்கும் நோக்கில் பிராந்திய மத்தியஸ்தர்களால் மேற்கொள்ளப்படும் தூதரக முயற்சிகளின் ஒரு பகுதியாக இப்பேச்சுவார்தைகள் நடைபெறுகின்றன.
இரு நாடுகளும் தங்கள் நிலைப்பாடுகளில் முற்றிலும் மாறுபட்டுள்ளன. ஒருவேளை இந்தச் சந்திப்பு வெற்றிகரமாக அமைந்தால், அது எதிர்கால பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு வடிவமைப்பை உருவாக்க வழிவகுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இரான் தனது அணுசக்தி திட்டத்தை முடக்க வேண்டும் மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பைக் கைவிட வேண்டும் என்று அமெரிக்கா கூறுகிறது.
மேலும், இரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகள், பிராந்திய ஆயுதக் குழுக்களுக்கு அந்த நாடு அளிக்கும் ஆதரவு மற்றும் அதன் குடிமக்களை நடத்தும் விதம் ஆகியவையும் பேச்சுவார்த்தையில் இடம்பெற வேண்டும் என்று அமெரிக்கா கூறியிருந்தது.
ஆனால், இந்த விவாதங்கள் இரானின் அணுசக்தி திட்டத்தைப் பற்றியதாக மட்டுமே இருக்கும் என்று இரான் கூறியுள்ளது.
இந்த வேறுபாடுகள் தீர்க்கப்பட்டுள்ளனவா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
சமீபத்திய வாரங்களில், இரான் ஒப்பந்தத்திற்கு உடன்படாவிட்டால் அதன் மீது குண்டுவீசப் போவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
ஒரு விமானம் தாங்கி கப்பல், பிற போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் உட்பட “ஆர்மடா”என்று டிரம்ப் வர்ணித்த ஒரு பெரும் படை மற்றும் ஆயிரக்கணக்கான வீரர்களை அமெரிக்கா இப்பகுதிக்கு அனுப்பியுள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு வலிமையான பதிலடி கொடுப்போம் என்று சபதம் செய்துள்ள இரான், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ சொத்துக்கள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அச்சுறுத்தியுள்ளது.
பட மூலாதாரம், US Navy via Reuters
படக்குறிப்பு, அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பலான ஆப்ரஹாம் லிங்கன் இரானை நோக்கி விரைந்துள்ளது
இரானியக் தூதுக்குழுவிற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி தலைமை தாங்குவார்.
அவர் கடந்த வாரம் கூறுகையில், தனது நாட்டின் ஆயுதப் படைகள் “துப்பாக்கியின் விசையில் விரல்களை வைத்திருப்பதாக” தெரிவித்தார். அமெரிக்க தரப்பில் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள்.
கடந்த ஜூன் மாதம் இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையே நடந்த போருக்குப் பிறகு, அமெரிக்க மற்றும் இரானிய அதிகாரிகள் பங்கேற்கும் முதல் சந்திப்பு இதுவாகும்.
அந்தப் போரின் போது அமெரிக்கா இரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதல்களுக்குப் பிறகு தனது யுரேனியம் செறிவூட்டல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதாக இரான் கூறுகிறது.
இரானில் சிக்கலில் உள்ள தலைவர்களுக்கு, இந்த பேச்சுவார்த்தைகள் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கையைத் தவிர்க்கும் கடைசி வாய்ப்பாக இருக்கலாம். அத்தகைய நடவடிக்கை ஆட்சியை மேலும் குலைத்துவிடலாம்.
1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, தற்போது அது மிகக் குறைந்த வலிமையுடன் உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியால் தூண்டப்பட்ட மற்றும் இஸ்லாமியக் குடியரசின் ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் என்று கூறி போராட்டக்காரர்கள் நடத்திய பெரும் போராட்டங்களை இரானிய பாதுகாப்புப் படைகள் கொடூரமாக ஒடுக்கிய நிலையில், டிரம்பின் அச்சுறுத்தல்கள் வந்துள்ளன.
வாஷிங்டனைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்கள் செய்தி நிறுவனம், குறைந்தது 6,883 பேர் இறந்ததை உறுதிப்படுத்தியுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்றும் எச்சரித்துள்ளது. மேலும் 50,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
தற்போதைய நெருக்கடி, இரானின் அணுசக்தி திட்டம் குறித்த விவகாரத்தை மீண்டும் விவாதத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
இது மேற்கத்திய நாடுகளுடனான நீண்டகால மோதலின் மையமாக இருந்து வருகிறது.
பல ஆண்டு காலமாக, தனது திட்டம் அமைதியான நோக்கங்களுக்கானது என்று இரான் கூறி வருகிறது. ஆனால் அமெரிக்காவும் இஸ்ரேலும் அது ஆயுதத்தை உருவாக்குவதற்கான முயற்சியின் ஒரு பகுதி என்று குற்றம் சாட்டி வருகின்றன.
தனது சொந்த மண்ணில் யுரேனியத்தை செறிவூட்ட தனக்கு உரிமை இருப்பதாக இரான் கூறுகிறது.
மேலும், தன்னிடம் உள்ள 400 கிலோ (880 பவுண்டு) அளவிலான செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை மூன்றாவது நாட்டிற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை நிராகரித்துள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
யுரேனியம் செறிவூட்டலுக்காக ஒரு பிராந்திய கூட்டமைப்பை உருவாக்குவது போன்ற சலுகைகளை வழங்கத் தயாராக இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த ஆண்டு இஸ்ரேல் எதிர்பாராத விதமாகப் போரைத் தொடங்கியபோது முறிந்த அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் இது முன்மொழியப்பட்டது.
அதே நேரத்தில், இரான் தனது ஏவுகணை திட்டத்தை கட்டுப்படுத்துவது மற்றும் பிராந்தியத்தில் உள்ள ஆதரவு குழுக்களுக்கான ஆதரவை நிறுத்துவது போன்ற கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், அது தனது இறையாண்மையை மீறும் செயல் என்றும் இரான் கூறுகிறது.
காஸாவில் உள்ள ஹமாஸ், இராக் போராளிகள், லெபனானில் உள்ள ஹெஸ்புலா மற்றும் யேமனில் உள்ள ஹூதிகள் ஆகியோரை உள்ளடக்கிய இந்த கூட்டணியை இரான் “எதிர்ப்பு அச்சு” என்று அழைக்கிறது.
செவ்வாய்க்கிழமை அன்று, இரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன், “பொருத்தமான சூழல் இருந்தால்”, அமெரிக்காவுடன் “நேர்மையான மற்றும் சமமான பேச்சுவார்த்தைகளைத் தொடர” அரக்சிக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
எப்படியிருப்பினும், தனது பொருளாதாரத்தை முடக்கியுள்ள தடைகளை நீக்க வேண்டும் என்று இரான் கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தடைகள் நீக்கப்படுவது மதகுரு ஆட்சியாளர்களுக்கு மிக முக்கியமானதாக அமையும் என்று அந்த ஆட்சியின் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்தியாவிற்கு எதிரான வரிகளைக் குறைப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்
அமெரிக்காவைப் பொறுத்தவரை, இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்து, டொனால்ட் டிரம்ப் விடுத்த ராணுவ அச்சுறுத்தல்களிலிருந்து அவர் பின்வாங்குவதற்கான ஒரு வழியாக இது அமையக்கூடும்.
அமெரிக்காவின் தாக்குதல் ஒரு பரந்த மோதலுக்கு அல்லது இரானில் நீண்டகால குழப்பத்திற்கு வழிவகுக்கும் என்று அண்டை நாடுகள் கவலை கொண்டுள்ளன.
மேலும், வெறும் வான்வழித் தாக்குதலால் மட்டும் இரானியத் தலைமையை வீழ்த்த முடியாது என்றும் அவை எச்சரித்துள்ளன.
இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கவலைப்பட வேண்டுமா என்று கேட்கப்பட்டதற்கு, “அவர் மிகவும் கவலைப்பட வேண்டும் என்று நான் கூறுவேன். ஆம், அவர் கவலைப்படத் தான் வேண்டும்,” என்று டிரம்ப் புதன்கிழமை அன்று என்.பி.சி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
“அர்த்தமுள்ள ஒன்றை” சாதிக்க வேண்டுமானால், இந்த விவாதங்கள் அணுசக்தி விவகாரத்தைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறினார்.
மேலும், “இவர்களுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்ட முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அதை நாங்கள் கண்டறிய முயற்சிப்போம். ஏதாவது செய்ய முடியுமா என்று கண்டறிய முயற்சிப்பதில் எந்தத் தீங்கும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடக்கத்தில் இஸ்தான்புல்லில் நடத்தத் திட்டமிடப்பட்ட இந்தப் பேச்சுவார்த்தைகள், பதற்றத்தைத் தணிப்பதற்காக எகிப்து, துருக்கி மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் மேற்கொண்ட முயற்சியாகும்.
ஆனால், கடைசி நேரத்தில், பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்தை ஓமனுக்கு மாற்ற வேண்டும் என்றும், அதில் இரான் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் இரான் கூறியுள்ளது. கடந்த ஆண்டு ஓமனில் இதேபோன்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது.