0
வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவரும், நோபல் அமைதிப் பரிசு வெற்றி பெற்றவருமான மரியா கொரினா மச்சாடோ (María Corina Machado), அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) ஆகியோருக்கு இடையே வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பின்போது, தமக்கு வழங்கப்பட்ட நோபல் அமைதிப் பரிசுப் பதக்கத்தை ட்ரம்பிற்கு வழங்கியதாக மச்சாடோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ (Nicolás Maduro) அமெரிக்கப் படைகளால் பிணைக்கைதியாகப் பிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பிறகு, மச்சாடோவும் ட்ரம்பும் நேரில் சந்திப்பது இதுவே முதல் முறை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
2024 தேர்தலில் தமது இயக்கம் வெற்றி பெற்றதாக மச்சாடோ கூறினாலும், ட்ரம்ப் அவரை இன்னும் நாட்டின் அதிகாரப்பூர்வ தலைவராக அங்கீகரிக்கவில்லை. மாறாக, தற்காலிகத் தலைவராக உள்ள Delcy Rodríguez உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ட்ரம்புடன் நடந்த சந்திப்பிற்குப் பின்னர் ஆதரவாளர்களைச் சந்தித்த மச்சாடோ, “அதிபர் ட்ரம்பை நாங்கள் நம்பலாம்” என்று உறுதியளித்தார். மேலும், அமெரிக்கப் புரட்சிக் காலத்தில் Marquis de Lafayette, George Washington அவர்களின் உருவம் பொறித்த பதக்கத்தை வெனிசுலாவின் தந்தை எனப் போற்றப்படும் Simón Bolívar அவர்களுக்கு வழங்கிய வரலாற்று நிகழ்வை அவர் நினைவுகூர்ந்தார்.
அதேபோன்று, 200 ஆண்டுகளுக்குப் பிறகு வாஷிங்டனின் வாரிசாகக் கருதப்படும் ட்ரம்பிற்கு, வெனிசுலாவின் சுதந்திரத்திற்காக அவர் காட்டிய அர்ப்பணிப்பை பாராட்டும் வகையில் இந்தப் பதக்கத்தை வழங்குவதாக மச்சாடோ உருக்கமாகத் தெரிவித்தார்.
இந்தச் செயலை “பரஸ்பர மரியாதையை வெளிப்படுத்தும் ஓர் அற்புதமான சைகை” எனக் குறிப்பிட்ட ட்ரம்ப், சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.
இதற்கிடையில், நோபல் பரிசு ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாற்றப்பட முடியாதது என்று Nobel Committee விளக்கம் அளித்துள்ளது. “நோபல் பதக்கம் கைமாறலாம்; ஆனால் நோபல் வெற்றியாளர் என்ற பட்டம் ஒருபோதும் மாறாது” என்றும் கமிட்டி தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்தி – நோபல் அமைதிப் பரிசை மற்றொருவருக்கு மாற்ற முடியாது – நோபல் குழு விளக்கம்

