அக்டோபர் 7-ஆம் தேதி மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அடுத்து வரும் நாட்களில் இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்படவுள்ளன.
சுவீடன் நாட்டைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபருமான ஆல்ஃப்ரட் நோபல் நிறுவிய இந்தப் பரிசுகள், உலக அளவில், அறிவியல், அரசியல், இலக்கியம், பொருளாதாரம் ஆகியத் துறைகளில் தலைசிறந்த பங்காற்றியவர்களுக்கு வழங்கப்படுகின்றன. நவீன உலகின் வரலாற்றில் பல முக்கிய அறிவியல் கண்டுபிடிப்புகள், பல முக்கிய அமைதி ஒப்பந்தங்கள், தலைசிறந்த இலக்கியப் படைப்புகள் ஆகியவற்றைச் செய்தவர்களுக்கு இந்தப் பரிசுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், ரவீந்திரநாத் தாகூர், அன்னை தெரசா, அலெக்சாண்டர் ஃப்ளெமிங் ஆகியோர் நோபல் பரிசுப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் சில பிரபலமான பெயர்கள்.
இந்தப் பரிசைப் பற்றியும் அதனைப் பெற்றவர்களைப் பற்றியும் சில சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே.
நோபல் பரிசுத்தொகை எவ்வளவு?
நோபல் பரிசு பெறுபவர்களுக்கு ஒரு பதக்கம், ஒரு சான்றிதழ், கூடவே பரிசுத்தொகையாக பணமும் வழங்கப்படும். இந்தப் பரிசுத்தொகை சுவீடனின் பணமான ஸ்வீடிஷ் க்ரோனாவில் வழங்கப்படும். உலகளவில் மிக அதிகப் பரிசுத்தொகையுடன் வரும் பரிசுகளில் ஒன்று நோபல் பரிசு.
ஆல்ஃப்ரட் நோபல் 1885-ஆம் ஆண்டு நோபல் பரிசுகளை நிறுவி எழுதிய தனது உயிலில், தனது சொத்துக்களின் பெரும்பகுதியான சுமார் 3.1 கோடி ஸ்வீடிஷ் க்ரோனாக்களை (இந்திய மதிப்பில் 25 கோடி ரூபாய்) இந்த நோக்கத்திற்கு தானமாகக் கொடுத்தார். அதன் இன்றைய மதிப்பு சுமார் 220 கோடி ஸ்வீடிஷ் க்ரோனாக்கள் (இந்திய மதிப்பில் 1,780 கோடி ரூபாய்).
இதிலிருந்து தான் நோபல் பரிசுகளுக்கான பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
1901-ஆம் ஆண்டு நோபல் பரிசுகள் வழங்கத் துவங்கப்பட்டபோது, ஒவ்வொரு துறைக்கும் முழு பரிசுத்தொகை சுமார் 1.5 லட்சம் ஸ்வீடிஷ் க்ரோனாக்களாக இருந்தது, (இந்திய மதிப்பில் சுமார் 12 லட்சம் ரூபாய்).
இன்று, ஒவ்வொரு துறைக்கும் முழு பரிசுத்தொகை 1.1 கோடி ஸ்வீடிஷ் க்ரோனாக்கள் (இந்திய மதிப்பில் சுமார் 9 கோடி ரூபாய்).
ஆம், ஒவ்வொரு நோபல் பரிசுக்கும் ரூ.9 கோடி பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. அறிவியல், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் அதிகபட்சம் மூன்று பேருக்கு பகிர்ந்து கொடுக்கப்படலாம். இலக்கியத்திற்கு பெரும்பாலும் ஒருவருக்கே முழு பரிசும் வழங்கப்படுகிறது.
நோபல் பரிசுப் பதக்கத்தில் என்ன இருக்கும்?
நோபல் பரிசுடன் வரும் பதக்கம் தங்கத்தால் செய்யப்பட்டது. 6.6 செ.மீ விட்டம் கொண்ட இந்தப் பதக்கம், ஆரம்பத்தில் சுமார் 200 கிராம் எடை கொண்டிருந்தது. 1980-ஆம் ஆண்டு வரை இந்தப் பதக்கங்கள் 23 காரட் தங்கத்தால் செய்யப்பட்டன. அதன்பின் 18 காரட் மறுசுழற்சி செய்யப்பட்ட தங்கத்தால் செய்யப்படுகின்றன. அவற்றின் எடை 175 கிராமாகக் குறைக்கப்பட்டது.
இந்தப் பதக்கங்களில் ஒருபுறம் ஆல்ஃப்ரட் நோபலின் பக்கவாட்டு முகம் பொறிக்கப்பட்டிருக்கும். மறுபுறம், பரிசுக்கான துறைக்கேற்ப ஒரு உருவம் பொறிக்கப்பட்டிருக்கும்.
இயற்பியல் மற்றும் வேதியியலுக்கான பரிசுப் பதக்கங்களில், ஒரு பெண் தெய்வமாக உருவகிக்கப்பட்டிருக்கும் இயற்கையின் முகத்திரையை, மற்றொரு பெண்ணாக உருவகப்படுத்தப்பட்ட அறிவியல் திறப்பது போன்ற உருவம் பொறிக்கப்பட்டிருக்கும்.
மருத்துவத்திற்கான பரிசுப் பதக்கத்தில், ஒரு பெண்ணாக உருவகப்படுத்தப்பட்டிருக்கும் மருத்துவம், தாகமெடுத்த ஒரு சிறுமிக்காக நீர் பிடிப்பது போன்ற உருவம் பொறிக்கப்பட்டிருக்கும்.
இலக்கியத்துக்கான பரிசுப் பதக்கத்தில், ஒரு லாரல் மரத்தின் அடியில் (மருத மரம்) அமர்ந்திருக்கும் இளைஞன், ‘ம்யூஸ்’ என்று அழைக்கப்படும் பெண் கடவுள் பாடும் வரிகளைத் தனது ஏட்டில் எழுதுவது போன்ற உருவம் பொறிக்கப்பட்டிருக்கும்.
இந்த மூன்று பதக்கங்களிலும், ‘தான் புதிதாகக் கண்டடைந்த மேதைமையால் பூமியில் வாழ்க்கையை மேம்படுத்தியவர்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும்.
அமைதிக்கான பரிசுப் பதக்கத்தில், மூன்று ஆண்கள் சகோதரர்களைப் போன்று அரவணைத்துக் கொண்டு நிற்பதுபோன்ற உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். இதில் ‘மனித அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்காக’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும்.
பொருளாதாரத்துக்கான பதக்கத்தில், ஒரு மகுடமும் நட்சத்திரமும் பொறிக்கப்பட்டிருக்கும்.
இந்தப் பதக்கங்களில் பரிசு பெறுபவரது பெயரும் பொறிக்கப்பட்டிருக்கும்.
நாஜிக்களுக்கு பயந்து அமிலத்தில் கரைக்கப்பட்ட நோபல் பதக்கங்கள்
இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியில் யூத இனத்தைச் சேர்ந்த இயற்பியலாளர்கள் நாஜிக்களுக்கு பயந்து வாழ்ந்தார்கள். அவர்களில் நோபல் பரிசு பெற்ற மேக்ஸ் வான் லாவ் மற்றும் ஜேம்ஸ் ஃப்ராங் ஆகியோர், தங்கள் நோபல் பரிசுப் பதக்கங்களை நாஜிக்கள் கைப்பற்றிவிடுவார்களோ என்ற அச்சத்தில், அதனை டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் உள்ள நீல்ஸ் போர் என்ற இயற்பியலாளரின் ஆய்வு மையத்தில் பாதுகாப்பாக வைத்திருக்க ஒப்படைத்தனர்.
அன்றைய நாஜி ஜெர்மனியில் தங்கத்தை வெளிநாடுகளுக்குக் கடத்துவது மிகப்பெரிய குற்றம். அதற்கு மரண தண்டனை கூட விதிக்கப்படலாம்.
இந்நிலையில், 1940-ஆம் ஆண்டு நாஜிக்கள் டென்மார்க்கை ஆக்கிரமித்தனர். ஆராய்ச்சி மையத்திலுள்ள இரண்டு நோபல் பதக்கங்களை எப்படி ஒளித்து வைப்பது என அம்மையத்தில் இருந்த ஜார்ஜ் தெ ஹெவெசி என்ற வேதியியலாளர் நீல்ஸ் போருடன் ஆலோசித்தார். அவற்றைப் புதைத்து வைத்தால் அவை தோண்டியெடுக்கப்படக் கூடும் என்ற அச்சத்தில் அவற்றை ஹைட்ரோக்ளோரிக் அமிலம், நைட்ரிக் அமிலம் ஆகியவற்றின் கலவையான ராஜதிராவகத்தில் (aqua regia) போட்டுக் கரைத்தனர்.
போர் நடந்த காலம் முழுவதும் அமிலத்தில் கரைக்கப்பட்ட தங்கம் அந்த ஆய்வகத்தில் அப்படியே இருந்தது. பிறகு, 1950-இல் அதிலிருந்த தங்கம் பிரித்தெடுக்கப்பட்டு, அது சுவீடனில் நோபல் பரிசு வழங்கும் அமைப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதிலிருந்து மீண்டும் பதக்கங்கள் செய்யப்பட்டு அவை மேக்ஸ் வான் லாவ் மற்றும் ஜேம்ஸ் ஃப்ராங் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
17 வயது முதல் 97 வயது வரை
மிக இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுஃப்சாய். குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மீது செலுத்தப்படும் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடியதற்காக அவருக்கு 2014-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 17.
இவரைத் தவிர, 25 வயதில் இருவர் நோபல் பரிசுகள் பெற்றிருக்கின்றனர். 1915-ஆம் ஆண்டு லாரென்ஸ் ப்ராக் என்ற இயற்பியலாளர் எக்ஸ்-ரேக்களைப் பயன்படுத்தி படிகங்களின் வடிவங்களைக் கண்டறிந்ததற்காக, அவரது தந்தையுடன் இயற்பியலுக்கான பரிசைப் பகிர்ந்துகொண்டார்.
மிக அதிக வயதில் நோபல் பரிசு பெற்றவர், அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜான் குட்இனஃப். ரீசார்ஜ் செய்யக்கூடிய லித்தியம் பாட்டரிகளைக் வடிவமைத்தற்காக 2019-ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு வென்றார். அப்போது அவருக்கு வயது 97.
நோபல் பரிசை மறுத்தவர்கள்
நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட சிலர் அதனை மறுத்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன.
1964-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பிரெஞ்சு எழுத்தாளரும் தத்துவவாதியுமான ழான்-பால் சார்த்ருக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் ‘அதிகாரப்பூர்வமான பரிசுகளைத் தான் என்றுமே ஏற்பதில்லை’ என்றுகூறி அப்பரிசை மறுத்தார்.
அதேபோல் 1973-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, வியட்நாம் அமைதி ஒப்பந்தத்தைப் பேசியதற்காக வியட்நாமிய அரசியல்வாதியும் போராளியுமான லே டுக் தோ-வுக்கும், அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் ஹென்றி கிஸ்ஸிங்கருக்கும் இணைந்து வழங்கப்பட்டது.
ஆனால், வியட்நாமில் அமைதி இல்லை என்று கூறி, லே டுக் தோ அப்பரிசை ஏற்க மறுத்தார்.
நோபல் பரிசை மறுக்குமாறு நிர்பந்தம்
சிலர் தங்களது அரசாங்கங்களால் நோபல் பரிசை மறுக்கும்படிக் கட்டாயப்படுத்தப் பட்டிருக்கிறார்கள்.
1958-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு, அப்போதைய சோவியத் யூனியனைச் சேர்ந்த கவிஞரும் எழுத்தாளருமான போரிஸ் பாஸ்டர்நாக்-க்கு அறிவிக்கப்பட்டது. முதலில் அதனை அவர் ஏற்றுக்கொண்டார்.
ஆனால், அதன்பிறகு சோவியத் அதிகாரிகள் அந்தப் பரிசை மறுக்குமாறு கட்டாயப்படுத்தினர். அதனால் அவர் அப்பரிசை மறுத்துவிட்டார்.
பாஸ்டர்நாக் 1917-ஆம் ஆண்டின் ரஷ்யப் புரட்சியின் மீது சில விமர்சனப் பார்வைகளைக் கொண்டிருந்தார். அதனால் அவரது முக்கியமான நாவலான ‘டாக்டர் ஷிவாகோ’ சோவியத் யூனினனில் தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால், அதன் பிரதிகள் வெளிநாட்டுக்குக் கடத்தப்பட்டு அது அங்கு பிரசுரமானது.
அதேபோல, 1938, 1939 ஆகிய ஆண்டுகளில் வேதியியல், மருத்துவம் ஆகிய துறைகளில் நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய ஆராய்ச்சியாளர்களான ரிச்சார்ட் குஹ்ன். அடால்ஃப் ப்யூடெனாண்ட், ஜெரார்ட் டோம்காக் ஆகியோரை அப்பரிசுகளை ஏற்பதிலிருந்து அடால்ஃப் ஹிட்லர் தடை செய்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு