2
பங்களாதேஷின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான், நாளை செவ்வாய்க்கிழமை (17) உத்தியோகபூர்வமாக பதவியேற்க உள்ளார். இந்தப் பதவியேற்பு விழாவில் சுமார் 1,200 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள் கலந்துகொள்வார்கள் என பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் ஊடகப்பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத்தின் தெற்கு பிளாசாவில் மாலை 4 மணியளவில் விழா நடைபெற உள்ளது. இதில், பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன், புதிய அமைச்சரவை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
இந்த விழாவில் வெளிநாட்டு விருந்தினர்களாக பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே, இந்தியாவின் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பாகிஸ்தான் அமைச்சர் அஹ்சன் இக்பால் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.
மேலும், நேபாள வெளியுறவு அமைச்சர் பாலா நந்த சர்மா கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், இலங்கையின் சுகாதார அமைச்சர் நலிந்தா ஜெயதிஸ்ஸாவும், மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சுவும் விழாவில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.