பட மூலாதாரம், Getty Images
கடந்த ஆறு மாதங்களாக பங்குச் சந்தையில் நிலவிய கொந்தளிப்பான சூழலில், முதலீட்டாளர்கள் நேரடி பங்குகளிலும், மியூச்சுவல் ஃபண்டுகளிலும் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளனர்.
கடந்த ஆண்டு(2024) செப்டம்பர் இறுதியில், BSE சென்செக்ஸ் சுமார் 86,000 புள்ளிகளை எட்டியது. ஆனால் தற்போது அது 75,300 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. அதாவது, சுமார் ஆறு மாதங்களில் சென்செக்ஸ் 13 சதவிகித சரிவைக் கண்டுள்ளது.
இதே காலகட்டத்தில், சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களில் முதலீடு செய்தவர்கள் 25 முதல் 30 சதவிகிதம் வரை இழப்பைச் சந்தித்துள்ளனர்.
மியூச்சுவல் ஃபண்ட்களில் முறைசார் முதலீட்டுத் திட்டங்கள் (systematic investment plan) மூலம் பணத்தை முதலீடு செய்து வந்த முதலீட்டாளர்கள், இந்தக் காலகட்டத்தில் 20% அல்லது அதற்கு மேற்பட்ட இழப்பைச் சந்தித்துள்ளனர்.
பங்குச் சந்தை மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீட்டு வரவுகள் குறைந்துள்ளன. குறிப்பாக, டிரம்ப் பதவியேற்று சுங்க வரிப் போரை (tariff war) அறிவித்ததைத் தொடர்ந்து, பங்குச் சந்தை சரிந்ததால், இந்த வீழ்ச்சி ஏற்பட்டது.
இதற்கிடையில், பல முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் இருந்து விலகி, பங்குகளைத் தவிர, முதலீடு செய்வதற்கான வேறு வாய்ப்புகள் குறித்து யோசித்து வருகின்றனர்.
இந்நிலையில், மக்கள் முதலீடு செய்யக்கூடிய ஐந்து முதலீட்டு வாய்ப்புகளைப் பற்றி பிபிசி நிதி நிபுணர்களுடன் பேசியது. இந்த வாய்ப்புகளுக்கு நன்மையான விளைவுகளும் அதே நேரம், மோசமான விளைவுகளும் உண்டு.
1. கார்ப்பரேட் பத்திரங்களில் எவ்வாறு முதலீடு செய்வது?
நிதி நிபுணர்களின் கூற்றுப்படி, ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை நிலையான வருமானத்தைப் பெற நீங்கள் விரும்பினால், கார்ப்பரேட் பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.
இது பணவீக்கத்தைவிட அதிக வருமானத்தையும், நிலையான வைப்புத்தொகையைவிட அதிக வட்டியையும் வழங்குகிறது. ஆனால் அதற்கு எதிரான பத்திரத்தின் மதிப்பீட்டைப் பார்ப்பதும் முக்கியம்.
இதுகுறித்து சான்றளிக்கப்பட்ட நிதி ஆலோசகர் மிதுன் ஜாதல் கூறுகையில், “கார்ப்பரேட் பத்திரங்கள் நிலையான வருமானம் மற்றும் கடன் வகையின் கீழ் வருகின்றன. மத்திய அரசு பத்திரங்கள், மாநில அரசு பத்திரங்கள், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பத்திரங்கள், கார்ப்பரேட் பத்திரங்கள் என இந்தியாவில் நான்கு வகையான பத்திரங்கள் உள்ளன.”
மேலும், “இயல்புநிலை ஆபத்து ( default risk- கடன் வாங்குபவர் கடன் அளிப்பவருக்கு கடனைச் செலுத்த முடியாத நிலை) மற்றும் வட்டி விகித ஆபத்து (Interest risk – வட்டி விகிதங்களில் எதிர்பாராத ஏற்ற இறக்கங்களின் விளைவாக ஒரு சொத்தின் மதிப்பில் ஏற்படும் சரிவு) போன்ற பத்திரங்களுடன் தொடர்புடைய இரண்டு வகையான அபாயங்கள் உள்ளன” என்று விளக்கினார்.
பட மூலாதாரம், Getty Images
“இந்திய அரசு அல்லது இந்திய ரிசர்வ் வங்கியின் பத்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை. இவை கடனை திருப்பிச் செலுத்தத் தவறும் அபாயம் (default risk) கிட்டத்தட்ட இல்லை. ஆனால், கார்ப்பரேட் பத்திரங்களில் முதலீடு செய்யும்போது மிகுந்த கவனம் தேவை,” என்று மிதுன் ஜாதல் எச்சரிக்கிறார்.
“அதிக வட்டி வருமானத்திற்காக சில முதலீட்டாளர்கள், குறைந்த தரநிலை மதிப்பீடு (poor credit rating) கொண்ட நிறுவனங்களின் பத்திரங்களில் முதலீடு செய்கிறார்கள். இவ்வாறு தவறான நிறுவனங்களைத் தேர்வு செய்தால், அந்த நிறுவனங்கள் மூலதனத்தை திருப்பிச் செலுத்த முடியாமல் தவறினால், முழுமையான இழப்பைச் சந்திக்க நேரிடும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “நீங்கள் ஓர் ஆண்டுக்கும் மேலாக முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்றால், AAA மதிப்பீட்டுடன் உள்ள நிறுவனங்களைப் பரிசீலிக்க வேண்டும்” என்றும் “ஓர் ஆண்டுக்கும் குறைவாக முதலீடு செய்ய நினைத்தால், A1+ என்பது உயர்ந்த மதிப்பீடு” என்றும் கூறினார்.
அவரைப் பொறுத்தவரை, ஒருவர் எப்போதும் AA அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பீட்டைக் கொண்ட நிறுவனங்களின் பத்திரங்களை வாங்குவதைக் கருத்தில் கொள்ள வேண்டும். அதைவிடக் குறைவான மதிப்பீடு கொண்ட நிறுவனங்கள் ஆபத்தானதாக இருக்கலாம்.
பட மூலாதாரம், Getty Images
கடந்த காலத்தில், 2018ஆம் ஆண்டு, IL&FS அதன் பத்திரத் தவணையைச் செலுத்துவதில் தவறி, நிதிச் சந்தையில் பெரும் நெருக்கடியை உருவாக்கியது. இதேபோல், 2019இல் திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனமும் அதன் பத்திரங்களில் தவறிவிட்டது.
“நீங்கள் நேரடியாக பத்திரங்களில் முதலீடு செய்ய விரும்பினால், மதிப்பீட்டைப் பார்ப்பது முக்கியம். அரசாங்க பத்திரங்களில் நேரடியாக முதலீடு செய்வது சிறு முதலீட்டாளர்களுக்கு கடினம். ஏனென்றால் சில பத்திரங்கள் குறைந்தபட்சம் ரூ.10 லட்ச முதலீட்டில் தொடங்குகின்றன.
அதற்குப் பதிலாக, அவர்கள் மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் கார்ப்பரேட் பத்திரங்களில் முதலீடு செய்யலாம்” என்று மிதுன் ஜாதல் கூறுகிறார்.
மேலும், “ஒரு நிறுவனத்தின் பத்திரங்கள் 9%க்கு மேல் வட்டி விகிதங்களை வழங்கினால், அதன் அபாயத்தை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும்” என்றும் அவர் கூறுகிறார். ஆமதாபாத்தை தளமாகக் கொண்ட இன்வெஸ்டர் பாயின்டின் நிறுவனர் மற்றும் நிதி ஆலோசகரான ஜெய்தேவ்சிங் சுடாசாமா கூறுகையில், “நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்பவில்லை என்றால், மாற்ற முடியாத கடன் பத்திரங்களும் (NCDகள்) ஒரு முதலீட்டு வாய்ப்பாகும்.
இது தவிர, கடன் மற்றும் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப கட்டமைக்கப்பட்ட நிதி திட்டங்களும் உள்ளன. இவற்றில் வரியின் நன்மைகள், பங்கு முதலீடுகளுக்குச் சமமாகவே இருக்கும். இத்தகைய நிதிகளில், நன்கு அறியப்பட்ட நிறுவனங்கள் 9 சதவிகிதம் முதல் 9.6 சதவிகிதம் வரையிலான வட்டி விகிதங்களை வழங்கக்கூடும்,” என்றார்.
2. வங்கி அல்லது நிறுவனத்தின் நிலையான வைப்புத்தொகையில் பணத்தை எவ்வாறு முதலீடு செய்வது?
பட மூலாதாரம், Getty Images
வங்கியில் பணத்தை முதலீடு செய்யும் நிலையான வைப்புத்தொகை (எஃப்.டி-Fixed Deposit) என்பது எப்போதும் முதலீடு செய்வதற்கான நம்பகமான தேர்வாகக் கருதப்படுகிறது. பல மூத்த குடிமக்கள் அவற்றை நம்பியுள்ளனர்.
ஆனால், வட்டி விகிதம், வங்கியால் திவால் நிலை ஏற்படும் அபாயம், நிலையான வைப்புத்தொகை முதிர்வடையும் தேதிக்கு முன் பணத்தை எடுப்பதற்கான அபராதம் ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு வங்கி திவால் ஆனாலும், ரூ.5 லட்சம் வரையிலான நிலையான வைப்புத் தொகைகளுக்கு காப்பீட்டுத் தொகை கிடைக்கும். எனவே இந்தத் தொகை பாதுகாப்பானது என்று கூறலாம்.
இதுகுறித்து நிதி ஆலோசகர் மிதுன் ஜாதல் கூறுகையில், “நீங்கள் அரசு வங்கிகள் அல்லது பெரிய தனியார் வங்கிகளின் நிலையான வைப்பு நிதிகளில் முதலீடு செய்தால் பரவாயில்லை. ஆனால் அதிக வட்டி விகிதங்கள் கிடைக்கும் என்ற ஆசையில், கூட்டுறவு வங்கிகளில் நிலையான வைப்பு நிதிகளில் முதலீடு செய்வதற்கு முன்பு நீங்கள் சிந்திக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் அவற்றில் மூலதனத்தை இழக்க நேரிடும்” என்கிறார்.
பொதுவாக ஐந்து லட்சம் வரையிலான நிலையான வைப்புத்தொகைகள் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால் வங்கி திவாலானால், பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு அதிக காலம் ஆகலாம்.
“கோவிட் காலத்தில், பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி சரிந்தது, மக்கள் உதவியற்றவர்களாக இருந்தனர். வங்கியில் இழப்பு ஏற்பட்டால், வைப்புத்தொகை செலுத்தியவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை கிடைக்கும். ஆனால் வங்கியின் சொத்துகள் விற்கப்பட்டு சட்டபூர்வ செயல்முறை முடியும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்” என்று அவர் விளக்குகிறார்.
“மேலும், நிலையான வைப்புத்தொகையை முன்கூட்டியே எடுக்க நேரிடும் நிலை ஏற்பட்டால், அதற்கான அபராதம் உண்டு என்பதையும் அவசியமாகக் கருத்தில் கொள்ள வேண்டும்.”
வங்கிகளைப் போலவே, தனியார் நிறுவனங்களும் வங்கிகளைவிட இரண்டு முதல் மூன்று சதவிகிதம் வரை அதிக வட்டி ஈட்டும் நிலையான வைப்புத்தொகை முறைகளைக் கொண்டுள்ளன. இதிலும், நிறுவனங்களின் சாதனைப் பதிவைப் பார்ப்பது முக்கியம்.
“தனியார் நிறுவனங்கள் மிக அதிக வட்டி விகிதங்களை வழங்கினால் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் ஒரு நிறுவனம் அதிக வட்டி செலுத்தத் தயாராக இருக்கும்போது, குறைந்த விகிதத்தில் மூலதனத்தை யாரும் கொடுக்கத் தயாராக இல்லை என்று அர்த்தம். எனவே, அதிக வட்டி, அதிக ஆபத்து” என்று ஜதல் விளக்குகிறார்.
நிலையான மற்றும் பாதுகாப்பான வருமானத்தை விரும்புவோர் தபால் அலுவலகத் திட்டங்கள் அல்லது பொது வருங்கால வைப்பு நிதியிலும் முதலீடு செய்யலாம்.
3. தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்வதன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?
பட மூலாதாரம், Getty Images
தங்கத்தில் முதலீடு செய்வது எப்போதும் இந்தியர்களை ஈர்க்கும் விஷயம். திருமணத்துக்கான தேவை ஏற்படும் காலங்களில், மக்கள் நகைகளுக்காக தங்கத்தை வாங்குவர். இதுதவிர, முதலீட்டு நோக்கங்களுக்காக டிஜிட்டல் தங்கம் அல்லது தங்க நாணயங்களையும் மக்கள் வாங்குகிறார்கள்.
அரசாங்கம் தங்கப் பத்திரத் திட்டத்தைத் தொடங்கி இருந்தது. ஆனால் அது இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையை அதிகரித்து வந்ததால் இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் இப்போது டிஜிட்டல் அல்லது பேப்பர் கோல்ட் (சொத்தின் உரிமை இல்லாமல், தங்கத்தின் விலையைக் கண்காணிக்கும் முதலீடு) முறைகளில் முதலீடு செய்ய விருப்பம் காட்டுகின்றனர். இதில் தங்கப் பரிவர்த்தனை-வர்த்தக நிதி (ETFகள்) மற்றும் தங்கத்துக்கான மியூச்சுவல் ஃபண்டுகள் அடங்கும்.
நீங்கள் வெள்ளியில் முதலீடு செய்ய விரும்பினால், வெள்ளி பரிவர்த்தனை-வர்த்தக நிதி (ETFகள்) மற்றும் வெள்ளி மியூச்சுவல் ஃபண்ட்கள் போன்ற முறைகளும் உள்ளன.
அதைச் சேமிப்பது அல்லது அதன் தூய்மை பற்றி கவலைப்படத் தேவையில்லை என்பது டிஜிட்டல் வடிவத்தில் தங்கம் அல்லது வெள்ளியை வாங்குவதன் நன்மைகள்.
தங்க நகைகளை வாங்க ஆயிரக்கணக்கான ரூபாய் தேவைப்படும். ஆனால் அதே நேரத்தில் டிஜிட்டல் தங்கத்தை ஒரு ரூபாய்க்குக்கூட வாங்க முடியும்.
4. வீடு அல்லது கடையில் முதலீடு செய்வதன் மூலம் எப்படி பணம் சம்பாதிக்க முடியும்?
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் ரியல் எஸ்டேட் எப்போதும் ஒரு கவர்ச்சிகரமான முதலீட்டு தேர்வாக இருந்து வருகிறது. மக்கள் பெரும்பாலும் வீடுகள், கடைகள், பண்ணை வீடுகள், நிலம் போன்றவற்றில் முதலீடு செய்கிறார்கள். ஆனால் பெரும்பாலும், அதற்கான ஒப்பந்தங்கள் வெளிப்படையாக இருக்காது. மேலும் கருப்புப் பணம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
அதேபோல், ரியல் எஸ்டேட்டில் ஈடுபடுவதற்கு நிறைய பணம் தேவைப்படுகிறது. ஒரு தீர்வாக, ரியல் எஸ்டேட் முதலீட்டு அமைப்பு முறை (Real Estate Investment Trust- REIT) இப்போது கிடைக்கிறது.
நிதி ஆலோசகர் ஜெயதேவசிங் சுதாசமா இதுகுறித்துக் கூறுகையில், “பல முதலீட்டாளர்கள் நிலையான வருமானத்தைப் பெற இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறார்கள். ரியல் எஸ்டேட்டை சொந்தமாக வைத்திருக்கும் அல்லது இயக்கும் நிறுவனங்கள்தான் ரியல் எஸ்டேட் முதலீட்டு அமைப்பு எனப்படுகின்றன. அவர்களிடம் அலுவலகக் கட்டடங்கள், கிடங்குகள், ஷாப்பிங் மால்கள், தரவு மையங்கள் போன்ற சொத்துகள் உள்ளன” என்றார்.
“முதலீட்டாளர்கள் ரூ.10,000-இல் இருந்து முதலீடு செய்யத் தொடங்கலாம். குத்தகைதாரர்களைத் தேடவோ அல்லது எந்த ஆவணங்களையும் பதிவு செய்யவோ தேவையில்லை.
ரியல் எஸ்டேட் முதலீட்டு அமைப்பு அதற்கான அனைத்து வேலைகளையும் செய்துவிடும். வரியால் கிடைக்கும் வருமானத்தில் 90 சதவிகிதத்தை பங்குதாரர்களுக்கு லாபமாக விநியோகிக்க வேண்டும்.”
இதேபோல், உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளை அல்லது ‘இன்விட்’ எனும் வாய்ப்பும் உள்ளது. ‘இன்விட்’ என்பது மியூச்சுவல் ஃபண்ட் போன்றது.
இது முதலீட்டாளர்களிடம் இருந்து மூலதனத்தை திரட்டி, நெடுஞ்சாலைகள், சாலைகள், குழாய்கள், கிடங்குகள், மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்து லாபத்தை வழங்குகிறது.
5. முதலீடு செய்வதற்கான வேறு வாய்ப்புகள்
பட மூலாதாரம், Getty Images
இதுதவிர, மூத்த குடிமக்களுக்கான முதலீட்டுத் திட்டங்கள், பியர் டு பியர் (P2P) கடன், சொத்துகளை குத்தகைக்கு எடுத்தல் போன்ற வாய்ப்புகளும் இந்தியாவில் உள்ளன.
பியர்-டு-பியர் கடனில், நீங்கள் தேவைப்படுபவர்களுக்கு பணத்தைக் கடன் கொடுக்கிறீர்கள், பின்னர் வங்கி எஃப்.டி.களைவிட அதிக வட்டியைப் பெறுகிறீர்கள்.
ஆனால், சரியான தளத்தைக் கண்டுபிடிப்பது முக்கியம். இல்லையெனில் உங்கள் மூலதனம் ஒரு NPA (அசையாச் சொத்து) ஆக மாற வாய்ப்புள்ளது.
பெரும்பாலும் தொடக்கநிலை நிறுவனங்களுக்கு மூலதனம் தேவைப்படும்போது, அவை முதலீட்டாளர்களைத் தேடுகின்றன.
நீங்கள் அதிக ரிஸ்க் எடுக்கத் தயாராக இருந்தால், ஸ்டார்ட்அப் ஈக்விட்டிகளில் (தொடக்க நிலை நிறுவனங்களின் லாபத்தில், முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் பங்கு) முதலீடு செய்யலாம், அதற்காகவும் குறிப்பிட்ட தளங்கள் உள்ளன. இருப்பினும், அதில் முதலீடு செய்வதற்கு முன் போதுமான ஆராய்ச்சி செய்வது அவசியம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.