பட மூலாதாரம், Arvind Yadav/Hindustan Times via Getty Images
படக்குறிப்பு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.
இந்த 2026 மத்திய பட்ஜெட்டில், ஒருபுறம் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் பசுமை ஆற்றலுக்கு அரசு சலுகைகளை வழங்கியுள்ளது; மறுபுறம், பங்குச் சந்தை தொடர்பான முதலீடுகள் மற்றும் சில செயல்பாடுகளின் விலையை உயர்த்தியுள்ளது.
புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் 17 மருந்துகளுக்கான அடிப்படை சுங்க வரியை அரசு நீக்கியுள்ளது, இதன் மூலம் இந்திய சந்தையில் இந்த மருந்துகள் மலிவாகும்.
இது தவிர, 7 அரிய வகை நோய்களுக்கான சிகிச்சைக்காக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் மீதான வரியையும் அரசு நீக்கியுள்ளது.
அதுமட்டுமின்றி, மின்சார வாகனங்கள், சோலார் பேனல்கள் மற்றும் பசுமை ஆற்றல் உற்பத்தியுடன் தொடர்புடைய சில உபகரணங்கள் மீதான வரியையும் அரசு குறைத்துள்ளது.
இது சாதாரண நுகர்வோர், நோயாளிகள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினரிடையே நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
இருப்பினும், பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பாக எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை அல்லது பெரிய அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.
‘வளர்ச்சியடைந்த இந்தியா 2047’ (Viksit Bharat 2047) என்ற இலக்கை நோக்கி நகர்வதில் இந்த பட்ஜெட் மிகவும் முக்கியமானது என்று அரசு கூறியுள்ளது.
அமெரிக்கா விதித்துள்ள 50 சதவிகித வரி விதிப்பை இந்தியா எதிர்கொண்டு வருவதும், உலகளாவிய நிச்சயமற்ற நிலையும் நிலவி வரும் வேளையில், இந்த பட்ஜெட் மீது மக்களின் உன்னிப்பான பார்வை இருந்தது.
மலிவான சிகிச்சை மற்றும் மருந்துகள்
பட மூலாதாரம், Getty Images
புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுடன் போராடும் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சிகிச்சை செலவைக் குறைக்க மத்திய அரசு இந்த பட்ஜெட் மூலம் முயற்சி செய்துள்ளது.
பட்ஜெட்டில் புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் 17 உயிர் காக்கும் மருந்துகள் மீதான அடிப்படை சுங்க வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.
இது தவிர, 7 அரிய நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் மற்றும் சிறப்பு உணவுகளுக்கும் வரி விதிக்கப்படாது.
உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்குச் சலுகை
பட மூலாதாரம், Getty Images
மைக்ரோவேவ் அவன்களின் சில முக்கியமான பாகங்கள் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது. கடல் உணவு ஏற்றுமதிக்கான வரி இல்லாத உள்ளீட்டு வரம்பு 1 சதவிகிதத்திலிருந்து 3 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தோல், செயற்கை காலணிகள் மற்றும் ஜவுளி ஏற்றுமதியிலும் வரி இல்லாத உள்ளீடுகள் மற்றும் கால வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இவை மலிவாக வாய்ப்புள்ளது.
அணுமின் திட்டங்களுக்காக இறக்குமதி செய்யப்படும் உபகரணங்களுக்கு 2035 வரை சுங்க வரி விதிக்கப்படாது.
மின்சார வாகனங்கள், சோலார் மற்றும் பசுமை ஆற்றல் விலை குறைய வாய்ப்பு
பட மூலாதாரம், Getty Images
மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள், சோலார் பேனல்கள் மற்றும் பசுமை ஆற்றல் உற்பத்தி மீதான வரியைக் குறைக்க அரசு முயற்சி செய்துள்ளது.
லித்தியம்-அயன் பேட்டரி சேமிப்பு அமைப்புகளுடன் தொடர்புடைய பல உள்ளீடுகளுக்குச் சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சோலார் பேனல்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சோலார் கிளாஸுக்கான மூலப்பொருளான ‘சோடியம் ஆன்டிமோனேட்’ மீதான வரியும் நீக்கப்பட்டுள்ளது.
இதனால் மின்சார வாகனங்கள், சோலார் ஆற்றல் மற்றும் பேட்டரி துறையில் உற்பத்தி செலவு குறையக்கூடும்.
எனினும், இந்த பலன் வாடிக்கையாளர்களைச் சென்றடையுமா என்பதை நிறுவனங்களின் கொள்கைகளே தீர்மானிக்கும்.
உண்மையில், இந்த மாற்றங்கள் உற்பத்திச் செலவைக் குறைக்கும்; ஆனால் வாடிக்கையாளர்களுக்கான விற்பனை விலை குறையுமா இல்லையா என்பதை நிறுவனங்களே தீர்மானிக்கும்.
தனிநபர் இறக்குமதி மற்றும் வெளிநாட்டுச் செலவுகளிலும் சலுகை
தனிப்பட்ட பயன்பாட்டுக்காக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான சுங்க வரி 20 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதாவது, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின்னணு பொருட்கள் அல்லது பரிசுப் பொருட்கள் முன்பை விட மலிவாகக் கிடைக்கலாம்.
வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணங்களுக்கான மூலத்தில் வசூலிக்கப்படும் வரி 5% அல்லது 20% என்பதில் இருந்து மாற்றப்பட்டு, வரம்பு ஏதுமின்றி நிலையான 2% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வெளிநாட்டுப் படிப்பு மற்றும் சிகிச்சைக்காக அனுப்பப்படும் 10 லட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகைக்கான மூலத்தில் வசூலிக்கப்படும் வரி, இப்போது 5 சதவிகிதத்திற்குப் பதிலாக 2 சதவிகிதமாக இருக்கும்.
இது சுற்றுலா அல்லது படிப்புக்காக வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்குச் சற்று நிம்மதியைத் தரும்.
விலை அதிகரித்த பொருட்கள்/சேவைகள் எவை?
பட மூலாதாரம், Getty Images
பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வது முன்பை விடச் சற்று விலை உயர்ந்ததாக மாறும்.
ஆப்ஷன்ஸ் பிரீமியம் மீதான STT 0.1 சதவிகிதத்திலிருந்து 0.15 சதவிகிதமாகவும், ஆப்ஷன் எக்சர்சைஸ் மீதான வரி 0.125 சதவிகிதத்திலிருந்து 0.15 சதவிகிதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ‘வருங்கால வர்த்தகம் மற்றும் விருப்ப வர்த்தகம் ‘ (ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ்’ ) பிரிவில் வர்த்தகம் செய்வது செலவு பிடிக்கும் ஒன்றாக இருக்கும்.
நிறுவனங்களின் பங்குகளைத் திரும்பப் பெறுவதில் (Share Buyback) நிறுவன நிறுவனர்கள் (Promoters) வரி விதிப்பு முறை கடுமையாக்கப்பட்டுள்ளது.
இனிமேல் நிறுவனர்கள் (Promoters) மூலதன ஆதாய வரியுடன் (Capital Gains Tax) கூடுதல் வரியையும் செலுத்த வேண்டியிருக்கும்; இது பங்குகளைத் திரும்பப் பெறுவதன் (Buyback) மூலம் லாபம் ஈட்டுவதைக் குறைவான ஈர்ப்புமிக்க ஒன்றாக மாற்றக்கூடும்.”
பொட்டாசியம் ஹைட்ராக்சைடு போன்ற சில வேதிப்பொருட்கள் மற்றும் சில நுகர்வோர் பொருட்கள் மீது முன்பு வழங்கப்பட்ட சுங்க வரி விலக்கு நீக்கப்பட்டுள்ளது.
இவற்றின் மீது இப்போது 7.5 சதவிகிதம் வரை அடிப்படை சுங்க வரி விதிக்கப்படும், இது அவற்றின் இறக்குமதி செலவை அதிகரிக்கும்.
வேதிப்பொருட்களின் விலை உயர்வு, அவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களின் விலையிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
மொத்தத்தில், 2026 பட்ஜெட்டில் தாதுக்கள், ஸ்கிராப், மதுபானம் ஆகியவை விலை உயர்ந்துள்ளன.
தோல், துணி, செயற்கை காலணிகள், வெளிநாட்டுப் பயணம், 17 புற்றுநோய் மருந்துகள், மைக்ரோவேவ் அவன், விமானத் தயாரிப்பு தொடர்பான பொருட்கள், மின்சார வாகன பேட்டரி, நீரிழிவு நோய் மருந்துகள் போன்றவை மலிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் பகுப்பாய்வின்படி, உற்பத்தி மற்றும் நுகர்வை மலிவாக்கும் அதே வேளையில், நிதிப் பரிவர்த்தனைகளுக்கு விலையை உயர்த்தும் பாதையை அரசு தேர்ந்தெடுத்துள்ளது என்பது தெளிவாகிறது.
“செக்யூரிட்டிஸ் டிரான்சாக்ஷன் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் பட்ஜெட்டுக்குப் பிறகு விலை உயரக்கூடிய பொருட்கள்/நடவடிக்கைகளில் பங்குச் சந்தையின் ஃபியூச்சர்ஸ்-ஆப்ஷன்ஸ் வர்த்தகமும் அடங்கும். அதேசமயம் மதுபானம், ஸ்கிராப், தாதுக்கள் மற்றும் டெண்டு இலைகளின் விற்பனை மீது மூலத்தில் வசூலிக்கப்படும் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால், இந்தத் துறைகளில் செலவுகள் உயரக்கூடும்.
பட்ஜெட்டுக்குப் பிறகு, மருத்துவச் செலவுகள் குறைவதற்கும், வெளிநாட்டுப் பயணம் மற்றும் கல்வி மீதான வரிகள் குறைவதற்கும், அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் பல மின்னணு மற்றும் எரிசக்தி தொடர்பான பொருட்கள் மலிவாவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.