அமெரிக்காவிற்கான முன்னாள் இங்கிலாந்து தூதர் பீட்டர் மண்டேல்சன் (Peter Mandelson), பொதுப் பதவியில் இருந்தபோது முறைகேடு செய்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில், இலண்டன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
72 வயதான மண்டேல்சன், நேற்று திங்கள்கிழமை (23) வடக்கு இலண்டனில் உள்ள கேம்டன் (Camden) பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். பல மணிநேர விசாரணைக்குப் பிறகு, அவர் இன்று அதிகாலை 02 மணியளவில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அவர் அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், சந்தை நிலவரம் தொடர்பான முக்கியமான அரசுத் தகவல்களை, மறைந்த குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனிடம் (Jeffrey Epstein) பகிர்ந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க நீதித் துறை வெளியிட்ட ஆவணங்களில், 2009 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் சொத்து விற்பனைத் திட்டங்கள் மற்றும் வங்கியாளர்களின் போனஸ் மீதான வரி குறித்த தகவல்களை அவர் எப்ஸ்டீனுடன் மின்னஞ்சலில் விவாதித்தது தெரியவந்துள்ளது.
பிப்ரவரி 2025-இல் அமெரிக்காவிற்கான இங்கிலாந்து தூதராக நியமிக்கப்பட்ட மண்டேல்சன், எப்ஸ்டீனுடனான அவரது தொடர்பின் ஆழம் குறித்த புதிய தகவல்கள் வெளியானதை அடுத்து, செப்டம்பர் மாதமே அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
மண்டெல்சனின் கைது, பிரதமர் கீர் ஸ்டார்மரின் (Keir Starmer) ஆட்சிக்கு ஒரு “முக்கியமான தருணம்” என்று கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் கெமி பேட்னோக் (Kemi Badenoch) விமர்சித்துள்ளார்.
பீட்டர் மண்டேல்சன் தனது நியமனத்தின் போது தகுதிச் சரிபார்ப்பு செயல்முறையில் பொய் சொன்னதாக அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
தான் எந்தவிதமான குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை என்றும், நிதி ஆதாயத்திற்காக எதையும் செய்யவில்லை என்றும் பீட்டர் மண்டேல்சன் கருதுவதாக பிபிசி (BBC) செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக இலண்டன் மெட்ரோபொலிட்டன் காவல்துறை மற்றும் அரசு வழக்கறிஞர் துறையினர் தொடர்ந்து ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர்.
எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளை அவசரமாகக் கையாண்டு, நடவடிக்கை எடுக்கும் இங்கிலாந்து அதிகாரிகளை, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் பாராட்டியுள்ளனர்.
The post பதவியில் முறைகேடு சந்தேகம்: பீட்டர் மண்டேல்சன் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார்! appeared first on Vanakkam London.