திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, இதனை விசாரித்த சிபிஐ தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு( SIT ) ஜனவரி 22 அன்று நெல்லூரில் உள்ள நீதிமன்றத்தில் இறுதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
குற்றப்பத்திரிகையின்படி, திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் ‘தாவர எண்ணெய்’ கலப்படம் செய்யப்பட்டதாகவும், தர சோதனைகளில் அது கண்டறியப்படுவதைத் தடுக்க சில ரசாயனங்கள் சேர்க்கப்பட்டதாகவும் விசாரணையின் போது சிறப்பு புலனாய்வுக் குழு கண்டறிந்தது.
ஆய்வக அறிக்கைகளை மேற்கோள் காட்டி, விலங்கு கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கிட்டத்தட்ட இல்லை என்றும் சிறப்பு புலனாய்வுக் குழு குறிப்பிட்டது.
2019 மற்றும் 2024 க்கு இடையில் நெய் கலப்படம் மூலம் ரூ.234 கோடி மதிப்பிலான மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, மொத்தம் 36 தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் மீது சிறப்பு புலனாய்வுக் குழு பல வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
பட மூலாதாரம், RAJESH
படக்குறிப்பு, திருப்பதியில் லட்டு தயாரிப்பு (கோப்புப் படம்)
ஆய்வக சோதனைகள் வெளிப்படுத்தியது என்ன?
திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாக எழுந்த சர்ச்சையில் சிறப்பு புலனாய்வுக் குழு தனது விசாரணையை முடித்துள்ளது.
இந்தக் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் (NDDB) அறிக்கையின்படி ‘ஏ.ஆர். டெய்ரி ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான நான்கு டேங்கர்களில் இருந்து திருப்பதி தேவஸ்தானத்தால் சேகரிக்கப்பட்ட நெய் மாதிரிகள், குஜராத்தின் ஆனந்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் கால்நடை மற்றும் உணவு பகுப்பாய்வு மற்றும் கற்றல் மையத்திற்கு (NDDB CALF) சோதனை மற்றும் பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டன.’
அந்த அமைப்பு தனது அறிக்கையை மார்ச் 27, 2025 அன்று சமர்ப்பித்தது.
“மாதிரிகளில் எதிர்பார்த்ததை விடக் குறைந்த பியூட்ரிக் அமில அளவுகளும், கொலஸ்ட்ரால் இல்லாமலும் இருப்பது, நெய்யின் உண்மையான உள்ளடக்கம் குறைவாக இருப்பதை உறுதிப்படுத்தியது.”
இந்த நெய் மாதிரிகளில் உள்ள கொழுப்பு அமில விவரக்குறிப்பு மற்றும் பீட்டா-சிட்டோஸ்டெரால் இருப்பது, அவை தேங்காய் எண்ணெய், பாமாயில் அல்லது பாமாஸ்டெரோல் ஆகியவற்றின் கலவையுடன் கலப்படம் செய்யப்பட்டுள்ளதை முதன்மையாக உறுதிப்படுத்தின.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் RM மதிப்பை சரிசெய்ய சில இரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
கொழுப்பு அமில பகுப்பாய்வில் கொழுப்பு, பன்றிக்கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் போன்ற விலங்கு கொழுப்புகள் இருப்பது மிகவும் சாத்தியமில்லை என்று அறிக்கை கூறுகிறது.
மேலும், பன்றிக்கொழுப்பு மற்றும் பிற விலங்கு கொழுப்புகள் உள்ளதா என சோதிக்க நெய் மாதிரிகள் ஹரியாணாவின் கர்னாலில் உள்ள தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்திற்க்கு ( ICAR-NDRI ) அனுப்பப்பட்டன.
அந்த அமைப்பு PCR அடிப்படையிலான முறையைப் பயன்படுத்தி மாதிரிகளை பகுப்பாய்வு செய்து மே 16, 2025 அன்று ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின்படி, அந்த நெய் மாதிரிகளில் லார்ட் (பன்றி கொழுப்பு) இருப்பதாகக் காணப்படவில்லை.
பட மூலாதாரம், Sridhar Raju
படக்குறிப்பு, திருமலை கோயில்
கலப்படத்திற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்?
விசாரணையின் போது வெளிப்படுத்தப்பட்ட விவரங்கள் சிபிஐ சிறப்பு புலனாய்வுக் குழு குற்றப்பத்திரிகையில் வெளியிடப்பட்டன. குற்றப்பத்திரிகையின்படி…
“உத்தரபிரதேசத்தில் உள்ள போலே பாபா ஆர்கானிக் டெய்ரி மில்க் பிரைவேட் லிமிடெட்டைச் சேர்ந்த போமில் ஜெயின், விபின் ஜெயின், சரிகா ஜெயின் மற்றும் பூனம் ஜெயின் ஆகியோர் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள். அவர்கள் 2019 மற்றும் 2024 க்கு இடையில் போலி அக்மார்க்கில் நெய்யைக் கலப்படம் செய்து திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு வழங்க சதி செய்தனர்.”
பால் மற்றும் வெண்ணெய் வாங்காமல் நெய்யைக் கலப்படம் செய்யும் நோக்கத்துடன், கொல்கத்தாவில் உள்ள சில நிறுவனங்களிடமிருந்து சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் எண்ணெய் ஆகியவற்றை ஹர்ஷ் டிரேடிங் கம்பெனி மற்றும் ஹர்ஷ் ஃப்ரெஷ் டெய்ரி ஃபுட்ஸ் லிமிடெட் மூலம் அவர்கள் வாங்கினர். உணவு தர லாக்டிக் அமிலம், அசிட்டிக் அமிலம், எஸ்டர்கள், கிளிசரைடுகள், பீட்டா கரோட்டின் மற்றும் நெய் சுவை போன்ற ரசாயனங்களையும் அவர்கள் கொள்முதல் செய்தனர்.
அவர்கள், தங்கள் முக்கிய ஊழியர்களான ஹரிமோகன் ராணா, சஞ்சய் சவுகான் மற்றும் ஆஷிஷ் ரோஹிலா ஆகியோருடன் சேர்ந்து, பகவான்பூரில் உள்ள போலேபாபா ஆர்கானிக் டெய்ரி மில்க் பிரைவேட் லிமிடெட்டில் கலப்பட நெய்யைத் தயாரித்தனர்.
ஆய்வக சோதனைகளில், பீட்டா கரோட்டின், அசிட்டிக் அமில எஸ்டர், உணவு தர லாக்டிக் அமிலம் மற்றும் மோனோகிளிசரைடு போன்ற இரசாயனங்கள் நெய்யில் சேர்க்கப்பட்டன, இது சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், ஆகியவற்றுடன் கலக்கப்பட்டு, மதிப்புகளை சரிசெய்து நெய்யின் சுவையை மேம்படுத்தியது.
முக்கிய குற்றவாளிகளான போமில் ஜெயின், விபின் ஜெயின், சரிகா ஜெயின் மற்றும் பூனம் ஜெயின் ஆகியோர் கலப்பட நெய்யை வழங்கும் நோக்கத்துடன் தவறான ஆவணங்களுடன் டெண்டர்களில் பங்கேற்றது தெரியவந்தது, இருப்பினும் அவர்களின் நிறுவனங்கள் திருப்பதி திருமலை தேவஸ்தான நெய் டெண்டர்களில் பங்கேற்க தகுதியற்றவை.
ஸ்ரீவைஷ்ணவி டெய்ரி ஸ்பெஷலிட்டிஸ் சிஇஓ அபூர்வா சாவ்தா, ஸ்ரீவைஷ்ணவி பால் பண்ணை இயக்குனர் ராஜேஷ் மன்சுக்லால் சாவ்டா, மல்லங்கா அக்ரோ ஃபுட்ஸ் இயக்குனர் மசீந்திர சாந்தாராம் லங்கே, ஏஆர் டெய்ரி ஃபுட்ஸ் நிர்வாக இயக்குனர் ராஜு ராஜசேகரன் ஆகியோருடன் சேர்ந்து இந்த குற்றச் சதியை அவர்கள் தீட்டியுள்ளனர்.
மற்றொரு குற்றவாளியான ரவீந்தர் சர்மா, இந்தக் கலப்பட நெய் திருப்பதி திருமலை தேவஸ்தான ஆய்வக தரநிலைகளை பூர்த்தி செய்வதாகக் காட்ட போலியான ஆய்வக அறிக்கைகளை உருவாக்கினார். இந்த சதியில் திருப்பதி திருமலை தேவஸ்தான ஆலை ஆய்வுக் குழு உறுப்பினர்களான பேருரு ஜெகதீஸ்வர் ரெட்டி, ஆர்எஸ்எஸ்விஆர் சுப்பிரமணியம் மற்றும் P. முரளிகிருஷ்ணா ஆகியோர் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆலை ஆய்வுக் குழுவில் உறுப்பினர்களாக இருந்த பால்வள நிபுணர்களான டாக்டர் காசிரெட்டி ஹரநாத் ரெட்டி, டாக்டர் மல்லம் மகேந்தர், டாக்டர் வி. வெங்கடசுப்பிரமணியன், எம். விஜயபாஸ்கர் ரெட்டி, டாக்டர் பதுலா சுரேந்திரநாத் மற்றும் டாக்டர் குல்கர்னி ஜெயராஜ் ராவ் ஆகியோர் போலேபாபா ஆர்கானிக் டெய்ரி, ஸ்ரீவைஷ்ணவி டெய்ரி, மல்லங்கா அக்ரோ ஃபுட்ஸ் மற்றும் ஏ.ஆர் டெய்ரி ஃபுட்ஸ் ஆகியவற்றின் பால்வள ஆலைகளை வேண்டுமென்றே முறையாக ஆய்வு செய்யவில்லை.
அந்த நிறுவனங்கள் திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு பசு நெய்யை வழங்க தகுதியற்றவை என்பதை அவர்கள் அறிந்திருந்தும், அவர்கள் தங்களுக்கு சாதகமாக ஆய்வு அறிக்கைகளை வழங்கினர். அதற்கு ஈடாக, அவர்கள் போமில் ஜெயினிடமிருந்து சட்டவிரோதமாக பயனடைந்தனர்.
ஜூனியர் உதவியாளர் பல்லி ஈஸ்வர் ரெட்டி, மூத்த உதவியாளர் முத்து வெங்கட அனில் குமார், துணை EO (ஓய்வு) போலேபள்ளி வெங்கட நடேஷ் பாபு ஆகியோரும் கமிஷன் முகவர் பிபி சீனிவாசன் மூலம் போமில் ஜெயினிடமிருந்து சலுகைகளைப் பெற்றனர். அதற்கு ஈடாக, கலப்பட நெய்க்கான ரசீதுகளை ஏற்றுக்கொண்டு, இறக்கி அனுப்புவதன் மூலம் அவர்களுடன் ஒத்துழைத்தனர்.
இந்த தகுதியற்ற பால் பண்ணைகள், அதிகாரிகளின் உதவியுடன், திருப்பதி திருமலை தேவஸ்தான நெய் டெண்டர்களுக்கான நிதி ஏலத்தில் பங்கேற்று விநியோக ஆர்டர்களைப் பெற்றன. திருப்பதி திருமலை தேவஸ்தானத்துடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்திற்கு மாறாக, போலேபாபா ஆர்கானிக் டெய்ரியால் ‘அக்மார்க் சிறப்பு தர பசு நெய்’ என்ற பெயரில் கலப்பட நெய்யை வழங்கின.
2019 மற்றும் 2024 க்கு இடையில், இந்த பால்பண்ணைகள் தோராயமாக 59,71,781 கிலோ நெய்யை வழங்கியுள்ளன. அவை திருப்பதி திருமலை தேவஸ்தான நிதியை சுமார் ரூ. 234 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளன. லட்டு மற்றும் பிற பிரசாதங்கள் தயாரிப்பதற்கு திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் கலப்பட நெய்யைப் பயன்படுத்துவது கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது என்று சிபிஐ சிறப்பு விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், FACEBOOK
“இந்த வழக்கில் 24வது குற்றவாளியான கடூர் சின்னப்பண்ணா, உண்மையில் ஏபி பவனின் ஊழியர். அப்போதைய திருப்பதி திருமலை தேவஸ்தான தலைவராக இருந்த ஒய்.வி. சுப்பா ரெட்டியின் உதவியாளராக அவர் செயல்பட்டார். அந்த நேரத்தில், நெய் டெண்டர்கள் உட்பட திருப்பதி திருமலை தேவஸ்தான விவகாரங்களில் அவர் தலையிட்டார்” என்று சிபிஐ சிறப்பு புலனாய்வுக் குழு குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்த பிரீமியர் அக்ரிஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட், ஒரு கிலோவுக்கு ரூ. 467.86 விலையில் 24.50 லட்சம் கிலோ நெய்க்கான டெண்டரில் 35 சதவீத விநியோக ஆர்டரை வென்றது. இது அப்போதைய சப்ளையர் வழங்கிய விலையை விட 42 சதவீதம் அதிகம்.
போலே பாபா ஆர்கானிக் டெய்ரி, ஸ்ரீவைஷ்ணவி டெய்ரி மற்றும் பிரீமியர் அக்ரிஃபுட்ஸ் ஆகியவற்றால் வழங்கப்பட்ட நெய்யில் கலப்படம் இருப்பதாக CFTRI ஆய்வக அறிக்கைகள் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தாலும், குற்றம் சாட்டப்பட்ட RSSVR சுப்பிரமணியம், நடேஷ் பாபு, அனில் குமார் மற்றும் ஈஸ்வர் ரெட்டி ஆகியோர் அந்த அறிக்கைகளை குறிப்பு கோப்பில் சேர்க்கவில்லை. மேற்கண்ட அதிகாரிகளுக்குத் தெரியாமல் அவர்கள் அவற்றை மறைத்தனர்.
மேலும், போலே பாபா பால் பண்ணைக்கு கூடுதலாக 15 சதவீத விநியோக ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது.
“இந்த நிறுவனங்கள் 2024 வரை திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்க்கு கலப்பட நெய்யை தொடர்ந்து வழங்கி வந்தன” என்று சிபிஐ சிறப்பு புலனாய்வுக் குழு குற்றப்பத்திரிகை கூறுகிறது.