0
“பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக எல்லா வழிகளிலும் போராடியவர்கள் நாங்கள். எனவே, அந்தச் சட்டத்தை நிச்சயம் நீக்குவோம். ஐரோப்பிய ஒன்றியக் குழுவிடமும் இது தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டது.”
– இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-
“எமது நீண்ட கால எதிர்பார்ப்புகளும், ஐரோப்பிய ஒன்றியம் முன்வைக்கும் கருத்துக்களும் சமாந்தரமுடையவையாக உள்ளன என்று நான், ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிடம் சுட்டிக்காட்டினேன்.
1979 இல் பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டு வந்தபோது அதற்கு எதிராகக் கறுப்புக்கொடி பறக்கவிட்டு, சிறைக்குச் சென்றவர்கள் எமது உறுப்பினர்கள்.
அதேபோல் 1988 மற்றும் 1989 காலப்பகுதியில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தால் நாமே கடுமையாகப் பாதிக்கப்பட்டோம். பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதற்காகப் போராட்டங்களை நடத்தினோம். எனவே, பயங்கரவாதத் தடைச் சட்டம் நிச்சயம் நீக்கப்படும் எனக் கூறினேன்.
சட்டமொன்றை இரத்துச் செய்யும்போது, சட்டத்தில் வெற்றிடம் இருக்கக்கூடாது. அவ்வாறான வெற்றிடத்துக்கு இடமளிக்காது, சட்டத்தை ஈடுசெய்யக் கூடிய வகையில் புதிய சட்டம் அவசியம். எனவே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கவும், புதிய சட்டத்தைக் கொண்டுவரவும் குழுவொன்றை நியமித்துள்ளோம்.” – என்றார்.